பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-12
செய்தி வகைகள் : செய்திகள்
பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 2025.12.10 ஆம் திகதி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தனர்.
தித்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில், கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களுடனான தனது ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இந்த அவசர நிலைமையில், தனது ஆதரவையும் உதவியையும் அவர் இங்கு வெளிப்படுத்தியதுடன், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை பற்றி கவனம் செலுத்தும் எதிர்காலத்தின் தேவையை ஏற்றுக்கொள்ளும் வகையில் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர்.
பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஸீஸ், பிரதி உயர்ஸ்தானிகர் ஸுனைரா லத்தீப், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தொழில்வாண்மையாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுக்குப் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் அமையப்பெற்றுள்ள குழு முறைமை குறித்தும் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் வினவினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், வலுவான குழு முறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் விளக்கமளித்தார்.
அதன் பின்னர், பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர்.
2026-05-08
இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று (08) விஜயம் மேற்கொண்டதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால உறவுகள் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன் போது வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டோ லாம் அவர்கள், வியட்னாமின் அபிவிருத்திப் பயணம், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம், சமாதானம், நிலைபேறான அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட முன்னேற்றம் ஆகிய விடயங்களில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள் மு.ப 11.05 மணியளில் பாராளுமன்றத்தை வந்தடைந்ததுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, பிரதி படைக்கல சேவிதர் அசிந்த குரே, உதவி படைக்கல சேவிதர் சசிந்த லக்மால் கடிகமுவ ஆகியோர் பேரணியாக வியட்னாம் ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் ஆளமான நட்புறவு மற்றும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். வியட்னாமின் முன்னாள் தலைவர் ஹோ சி மின் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பாராளுமன்ற பரிமாற்றங்களை மேம்படுத்தி, இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள், கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற தூதுக் குழுவை வியட்னாமுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், இலங்கையின் அரசியல் நிலைத்தன்மையையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தைப் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தி அதற்கான வியட்னாமின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.இந்த விஜயத்தின் போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இட்டார்.இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, வியட்னாம் ஜனாதிபதி டோ லாம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோர் படைக்கல சேவிதர் மற்றும் பிரதி படைக்கல சேவிதர்களால் பேரணியாக சபா மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மு.ப 11.35 மணிக்கு சபா மண்டபத்திற்கு வருகைதந்த வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்ததுடன், மு.ப 11.40 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் உரைநிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பி.ப 12.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார்.
2026-05-08
இலங்கை பாராளுமன்ற பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் “லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி என்பன கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ‘கொவிஜன மந்திரய’ வளாகத்தில் அண்மையில் (06) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் (ACWF) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000,000 யுவான் பெறுமதியான (ஏறத்தாழ ரூ.43 மில்லியன்) உபகரணங்களைப் பயன்படுத்தி “லிட்டில் ரூட்ஸ்” புதிய பகல் நேரப் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் அதேநேரம், பிள்ளைகளின் கல்வி மற்றும் சிறுவர் பராயத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாதுகாப்புடன்கூடிய, அவர்களை ஊக்கமளிக்கக் கூடிய சூழலை வழங்குவதே இந்தப் புதிய பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளியின் பிரதான நோக்கமாகும்.“லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி, இலங்கை பாராளுமன்றம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக உருவாகியுள்ளது. முதற்கட்டமாக இது பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணியாளர்களுக்காகத் திறக்கப்பட்டு, பின்னர் ஏனைய நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பதே எதிர்பார்ப்பாகும்.இந்த நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன கௌரவ அமைச்சர் கே.டீ.லால் காந்த, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, பாராளுமன்றத்தின் குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் சமன்மலி குணசிங்க, இலங்கைக்கான சீன தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் ஜி லிலி (Ji Lili), இரண்டாவது செயலாளர் ஜியாங் சாங் (Jiang Chang), பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும், பாராளுமன்றத்தின் அதிகாரிகள், அமைச்சுக்களின் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2026-05-07
வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.வியட்னாம் ஜனாதிபதி அவர்கள் நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.இதன்போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.
2026-05-07
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (மே 06) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் நெருக்கமான, வலுவான உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இலங்கைக்கான கியூப தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கியூபாவின் தலைவர்களான ஃபிடெல் கஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா ஆகியோருக்கு தனது மரியாதையைச் செலுத்திய அவர், சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான அமர்வுகள் உள்ளிட்ட பல்தரப்புத் தளங்களில் கியூபா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுகளுக்கும் சபாநாயகர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.கியூபாவின் மேம்பட்ட மருத்துவத் துறையை அவர் பாராட்டியதுடன், தாம் மருத்துவ மாணவராக இருந்த காலத்தில் இலங்கையில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கொண்டு சேவையாற்றிய தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய உதவிக்கு கியூபா அரசாங்கத்துக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், கியூபாவில் காணப்படும் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன்> இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றார். இலங்கைக்கு கியூபா தொடர்ந்து வழங்கி வரும் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கியூப தூதுவர், தித்வா சூறாவளியின் தாக்கத்தை தாக்கத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு மேற்கொண்ட பயனுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆட்சிமுறை முயற்சிகளைப் பாராட்டினார்.இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தூதுக் குழுவுடன் கியூபாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அவர், சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.கியூபாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்புக்கள், பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks