logo

E   |   සි   |  

2026-07-21

செய்தி வகைகள் : செய்திகள் 

கோபா மற்றும் கோப் அறிக்கைகளை சட்டமா அதிபர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றுப்படுத்த பாராளுமன்றம் அங்கீகாரம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றினால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் அடங்கியதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டன.

இதற்கமைய, வெளிநாட்டு பணமனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025.ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 (4) இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்துறை தலைமையதிபதியின் அவதானிப்புக்கள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சபை, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, லங்கா சதொச லிமிடட், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய சேமிப்பு வங்கி ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன. 

2026.04.07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையியற் கட்டளை 1119(4) மற்றும் 120 (4) ஆகியவை தொடர்பான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-08-17

சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில், இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்போது, சட்டவாக்கச் செயன்முறை, பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கேள்வி – பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பாராளுமன்ற சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்தை பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) எம். ஜயலத் பெரேரா, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-14

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இணையதளத்திற்கான வெள்ளி விருதை வென்றது

அரச துறையில் சிறந்த இணையதளமாகவும்  பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றதுஇலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.இந்த அங்கீகாரம், பாராளுமன்றம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் பயனருக்கு எளிதான வகையில் பாராளுமன்றத் தகவல்களை வழங்குவதற்கும், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றது.


2026-08-11

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரமான ஓகஸ்ட் 18ஆம் திகதி முதுல் 21ஆம் திகதி வரைக்கான காலப்பகுதிக்குரிய பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப.   5.00     இலங்கை தேசிய புகைப்படக்கலைச்சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.இதனைத் தொடர்ந்து பி.ப.   5.00 மணி முதல் பி.ப.   5.30  மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. (இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள பாராளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப்              புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது).இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 20ஆம் திகதி  வியாழக்கிழமை  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பெண்களையும். இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 21ஆம் திகதி   வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-11

வாருங்கள்.... காணுங்கள்.... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்

நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அடிக்கடி காணக்கூடிய மற்றுமொரு அழகிய காட்சியாகும்! தியவன்னாவின் அழகை ரசித்தவாறு பாராளுமன்றத்தை நேரில் பார்வையிட்டு, புதியதோர் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் ஆரம்பப் பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் தினமும் பாராளுமன்ற வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக வருகை தருகின்றனர்.புத்தகங்கள் மூலம் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பெற்றுக்கொள்ளும் அறிவை, பாராளுமன்றத்திலேயே நேரடியாக அவர்கள் கண்டறிந்துகொள்ள இதனமூலம் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது.பாராளுமன்ற சபா மண்டபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்கு அப்பால், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் அவர்கள் கற்கும் பாடங்களுக்கும் பொருத்தமான வகையில், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் புரிந்துணர்வை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமன்றி, பாராளுமன்றத்தைச் சூழவுள்ள இயற்கை அழகையும், எமது பாராளுமன்றத்தின் சிறப்புமிக்க கட்டடக்கலை மற்றும் கலைநயமிக்க பெறுமதிகள் பற்றிய புரிந்துணர்வையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.வாருங்கள்.... காணுங்கள்... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்!புகைப்படம் –கிட்டி கோவ் (Kiddie Cove) முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் நேற்று (10) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks