01

E   |   සි   |  

2026-05-07

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கைக்கான கியூபா தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (மே 06) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் நெருக்கமான, வலுவான உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இலங்கைக்கான கியூப தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கியூபாவின் தலைவர்களான ஃபிடெல் கஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா ஆகியோருக்கு தனது மரியாதையைச் செலுத்திய அவர், சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான அமர்வுகள் உள்ளிட்ட பல்தரப்புத் தளங்களில் கியூபா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுகளுக்கும் சபாநாயகர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

கியூபாவின் மேம்பட்ட மருத்துவத் துறையை அவர் பாராட்டியதுடன், தாம் மருத்துவ மாணவராக இருந்த காலத்தில் இலங்கையில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கொண்டு சேவையாற்றிய தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய உதவிக்கு கியூபா அரசாங்கத்துக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், கியூபாவில் காணப்படும் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன்> இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றார். 

இலங்கைக்கு கியூபா தொடர்ந்து வழங்கி வரும் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கியூப தூதுவர், தித்வா சூறாவளியின் தாக்கத்தை தாக்கத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு மேற்கொண்ட பயனுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆட்சிமுறை முயற்சிகளைப் பாராட்டினார்.

இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தூதுக் குழுவுடன் கியூபாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அவர், சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.

கியூபாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்புக்கள், பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.



தொடர்புடைய செய்திகள்

2026-05-22

இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும், இலங்கைக்கான கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்

கௌரவ இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் தலைமையிலான இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், கியூபா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் (மே 20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வது இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த கௌரவ அமைச்சர், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையே பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூப தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதில் கியூப – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களின் உறுப்பினர்களிடையே நெருங்கிய தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். கியூபாவின் தலைவரான ஃபிடெல் கஸ்ட்ரோவின் பிறந்த தினத்தின் நூற்றாண்டையொட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கலந்துகொள்ளுமாறும் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார். சர்வதேச மட்டத்தில் இலங்கை கியூபாவுக்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். அத்துடன், கியூபா தற்பொழுது எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்தும் அந்நாட்டுத் தூதுவர் இங்கு விரிவாக விளக்கமளித்தார்.


2026-05-19

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.05.19

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (மே 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இச்சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புரையுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.நிதிசார்  கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிதிசார்  கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெறிருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய, வாசகம்  22 மற்றும் வாசகம்  39 தவிர, சட்டமூலம் பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம் என உயர்  நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், நீதிமன்றம் பரிந்துரைத்தபடி வாசகம் 22 மற்றும் வாசகம் 39 திருத்தப்பட்டால், அந்த வாசகங்களையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும்  அவர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.குறித்த சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (19) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமெனவும் சபாநாயகர் கட்டளையிட்டார்.


2026-05-18

காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில்

காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (மே 14) நடைபெற்றது. காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தலைமைத்துவத்தில் மிகுந்த அனுபவத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் வீண் விரயத்தைக் குறைப்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ, மாணவர் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிகாட்டியதோடு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் விளக்கமளித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா புலத்சிங்கள அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து மாணவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வின் இறுதியில் காலி சௌவுத்லண்ட்  கல்லூரியின் அதிபர் என்.ஜீ.ஆர்.சுமேதா காரியவசம் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-14

பாராளுமன்றம் மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றத்தை மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் மே மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.மே 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08 மற்றும் 2482/12 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் (2026.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தின் 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 11ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளக்கப்பட்டுள்ளன) என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை என்பன எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks