பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-12
செய்தி வகைகள் : செய்திகள்
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அங்கம் வகித்தனர். பெப்ரவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் கௌரவ சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.
“சமாதானம் மற்றும் ஜனநாய நம்பிக்கை : நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்தார். பாடசாலை மட்டம் முதல் பெரியோர் வரையில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புக்கூறல் குறித்து கல்வி வழங்குவது மிகவும் முக்கியம்வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“சமாதானம் நிறைந்த மற்றும் ஒற்றுமையான சமூகங்களின் முன்னணியாகப் பாராளுமன்றங்கள் : போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அதிகரிப்பு”, “உய்வுக்கான சட்டமியற்றல் : காலநிலைகளுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை : ஒன்லைன் வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் கையாளல்” என்ற தலைப்புக்களில் இடம்பெற்ற அமர்வுகளில் கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலக்கட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு, பங்களித்தனர்.
இறுதிநாள் அமர்வில் நன்றியுரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், ஆசிய பிராந்தியத்தின் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய ஒன்றியத்தின் சிந்து கிளை, பாகிஸ்தான் தேசிய பேரவை போன்றவை வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றி பாராட்டினார். இந்த மாநாடு கலந்துரையாடல்களுக்கும், கற்றல்களுக்கும் மதிப்பு மிக்க மேடையாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாதுகாப்பதில் வலுவான பாராளுமன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், கராச்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக் கூறல், உள்ளடங்கலான நிர்வாகம், பொறுப்புவாய்ந்த புத்தாக்கம், நீடித்த சமாதானம் ஆகியவற்றிற்கான தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் கராச்சி பிரகடனத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்கள் நம்பிக்கையின் சரிவு, தவறான மற்றும் வழுவான தகவல்களின் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை பாதிப்புக்குட்படும் நிலை மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திர முயற்சிகளும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை முன்னெடுக்க வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் முன்னோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்றங்கள் இன்றியமையாதவை என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக இம்மாநாடு முடிவுக்கு வந்தது.
2026-02-10
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.அரசியலமைப்பின் பிரிவு 153அ இன் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் பின்வரும் நியமனங்களுக்கு பொருத்தமான நபர்களை அரசியலமைப்பு பேரவை, கௌரவ சனாதிபதிக்கு பரிந்துரைக்கும்: i. பிரதி கணக்காய்வாளர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்த கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் ஒய்வு பெற்ற இரண்டு அலுவலர்கள்;ii. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது இலங்கை மேல் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர்; அத்துடன் iii. இலங்கை நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற வகுப்பு I அலுவலர்.இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்;அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்இலங்கைப் பாராளுமன்றம்ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேஎனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.
2026-02-10
பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும்பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாயக்கிழமை முதல் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.02.06ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளதுடன், பி.ப 5.00 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள், (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம், (203 ஆம் அத்தியாயம்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.2026 பெப்ரவரி 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் “வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்” என்ற தலைப்பிலான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-02-10
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(இ) ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு நியமனம் செய்வதற்கு கௌரவ ஜனாதிபதிக்கு விதப்புரையை மேற்கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது.தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(அ)(i) கீழ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடகத் துறை, அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் அல்லது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கென சிறந்த நிலையினை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளைச் சட்டம் வழங்குகின்றது. மேலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(2) (அ) (ii) முதல் (v) வரை, அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்படுபவர்கள் -• பாராளுமன்ற உறுப்பினராக, ஏதேனும் மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளூரதிகாரசபை உறுப்பினராக இல்லாதிருத்தல் வேண்டும்;• ஏதேனும் பகிரங்க அல்லது நீதிசார் பதவியை அல்லது வேறேதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காதவராக இருத்தல் வேண்டும்;• ஏதேனும் அரசியற் கட்சியுடன் சம்பந்தப்படாத ஆட்களாக இருத்தல் வேண்டும்;• ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தாதவர்கள் அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் புரியாத ஆட்களாகவிருத்தல் வேண்டும்.பெயர் குறித்த நியமனங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனங்கள்;அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்இலங்கைப் பாராளுமன்றம்ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேஎனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனங்கள்’ எனக் எனக் குறிப்பிட வேண்டும்.
2026-02-06
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் கௌரவ வாக்டாங் ஜாவோஷ்விலி, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (பெப். 05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய இரு தரப்பினரும், 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை சுட்டிக்காட்டினர்.இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துவருவதால், வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் உள்ளன என்று கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டதுடன், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் விருந்தோம்பல் குறித்து அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் வளமான பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அனுபவிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோர்ஜிய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஜோர்ஜிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் உயர்கல்வியைத் தொடருவதற்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஜோர்ஜியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பையும் கௌரவ சபாநாயகர் இதன்போது வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks