01

E   |   සි   |  

2026-01-19

செய்தி வகைகள் : செய்திகள் 

இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்துகொண்டனர்

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு (CSPOC) இந்தியாவின் கௌரவ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் 2026.01.15 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சம்விதான் சதன் மண்டபத்தில் ஆரம்பமானது.  

இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) கௌரவ தலைவர் (கலாநிதி) டுலியா அக்சன் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் (CPA) தலைவர் (கலாநிதி) கிரிஸ்தோப்பர் கலிலா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பொதுநலவாய பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகளின் சங்கதத்தின் நிலைக்குழுவினால் சகல விருந்தினர்களும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இம்மாநாட்டில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், சட்டமன்றங்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்களை நிவர்த்தி செய்யும் உயர் மட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்றினார். குறிப்பாக, "சமூக ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார்.  டிஜிட்டல் துறையின் செல்வாக்கை நிர்வகித்தல், நிறுவன ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான பொது உரையாடலுடன் கருத்து சுதந்திரத்தை சமநிலைப்படுத்துதல் குறித்த விடயத்தில் இங்கைப் பாராளுமன்றத்தின் அனுபவங்களை அவர் இதன்போது பகிர்ந்துகொண்டார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்திய மக்களவையின் கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லாவுடன் சந்திப்பொன்றை நடத்தியதுடன், பொதுவான ஜனநாயக மரபுகள் மற்றும் இலங்கை-இந்திய உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார். நிறுவனங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், நட்புக் குழுக்கள், சட்டமன்ற ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிகழ்நேர பன்மொழி மொழிபெயர்ப்பு, ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் புத்த கயா போன்ற கலாச்சார உறவுகள் உட்பட புதிய தொழில்நுட்பங்களுடன் பாராளுமன்றப் பணிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.

இந்த மாநாட்டின் போது கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோய்ல், கனடா பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பாக்லியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் சபையின் கௌரவ சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட சபாநாயகர்ளுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கள் பாராளுமன்றங்களின் சிறந்த நடைமுறைகள், நிறுவன சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக நிர்வாகம் குறித்த விடயங்களைப் பரிமாறிக்கொள்ள உதவியாக இருந்தன.

வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பராமரிப்பதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் பங்கை மையமாகக் கொண்ட முழுமையான அமர்வுடன் பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு 2026 ஜனவரி 16 (இன்று) முடிவடைந்தது. இதில் பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் தலைமைப் பதவியும் முறையாக ஒப்படைக்கப்பட்டது.

மாநாட்டின் முடிவுக்குப் பின்னர் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் பார்த்தனர், இதன் போது இந்தியாவின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-05-05

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட நான்கு புதிய உறுப்பினர்களும் சபாநாயகர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (மே 04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்.முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர்  தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது.கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.


2026-04-29

கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்

கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (ஏப். 27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, பாராளுமன்றத்தின் ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கு அமைய கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ சபாநாயகர், பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இவ்வாறு சின்னம் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் கையளிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே நாட்டில் சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் ஜனாதிபதி நியத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார, மாணவர் பாராளுமன்றத்தின் மதிப்பு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டில் அரசியல் அறிவை மேம்படுத்துவதில் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


2026-04-28

வியட்னாம் ஜனாதிபதி மே 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்

பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்வியட்னாம் நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் எதிர்வரும் மே 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகவும், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (ஏப். 27) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளது.2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (2471/52, 2471/53, 2471/54, 2471/55 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  (2475/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) என்பன  விவாதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படவுள்ளன. பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 6ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நுரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 7ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மு.ப 11.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2471/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது), (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2470/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) மற்றும் (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2026.05.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) என்பவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சுவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.05 மணியளவில் வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதிமேதகு டோ லாம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை கீழ்வரும் 07 தனியார் பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்கள்தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.சமிந்த விஜேசிறி அவர்கள்வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.ரவி கருணாநாயக்க அவர்கள்புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.லால் பிரேமநாத் அவர்கள்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.ரோஹண பண்டார அவர்கள்பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.நலின் பண்டார ஜயமஹ அவர்கள்பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.ரவீந்திர பண்டார அவர்கள்பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.


2026-04-23

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஏப். 21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்ற முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பயனுள்ள நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். யுத்த சூழல் முதல் தித்வா சூறாவளித் தாக்கம் வரையில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை உண்மையான நட்பின் வெளிப்பாடாகும் என்பதையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.தற்போதைய சர்வதேச சூழலில் உலக நல்லிணக்கத்தை உருவாக்குவதில், பாகிஸ்தான் ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக ஆற்றிவரும் முக்கிய வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் இங்கு பாராட்டினார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அவர் வலியுறுத்தினார்.மேலும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்த கலைப்படைப்பான பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையை (Fasting Buddha Statue) இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கௌரவ சபாநாயகர் அவர்கள் இங்கு முன்வைத்தார்.  இதன் மூலம் குறித்த சிலையை இலங்கை பக்தர்கள் தரிசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.அழகான இயற்கைச் சூழலையும், விருந்தோம்பல் குணம் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.  நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் துறையில் தனது அனுபவத்தையும் அறிவையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.  இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உதவித்தொகை பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.“தித்வா" சூறாவளித் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டில் முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள், அத்துடன் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks