புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.
வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.
இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.
இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின் உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.
வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.
2026-06-19
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சமரவீர தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற தூதுக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து கிளையும் (CPA UK), இலங்கை பாராளுமன்றமும் (CPA இலங்கை கிளை) கூட்டாக இணைந்து 2026 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியம் - இலங்கைப் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தில்' பங்கேற்கும் பொருட்டு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கயந்த கருணாதிலக்க, எஸ்.எம். மரிக்கார், வைத்தியர் ஜகத் குணவர்தன, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, கந்தசாமி பிரபு, தனுஷ்க ரங்கநாத், ருவன் விஜேவீர, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச்சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்ன ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்துவதே வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகவிருந்தது. பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகள் என்பவற்றின் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கத்தில் உள்ளடங்கியிருந்தது. இந்நிகழ்ச்சித்திட்டம் முழுவதும், ஒப்பீட்டுப் பாராளுமன்ற முறைமைகள், குழுக்களின் கட்டமைப்புகள் மற்றும் மேற்பார்வைப் பொறிமுறைகள், சட்டவாக்கம் மற்றும் சட்டவாக்கத்திற்குப் பின்னைய ஆய்வுகள், பாராளுமன்ற நியமங்கள் மற்றும் சிறப்புரிமைகள், நிதிசார் ஆய்வுகள், பொதுப் பொறுப்புக்கூறல், பாராளுமன்றத்தை நவீனமயமாக்கல் மற்றும் பொதுமக்களுடனான ஈடுபாடு என்பன உள்ளிட்ட, பரந்த அளவிலான பாராளுமன்ற விவகாரங்களில் ஒருமுகப்படும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களிலும், அவதானிப்புகளிலும், ஊடாடும் அமர்வுகளிலும் இக்குழு பங்கேற்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் குழு நடவடிக்கைகள் மற்றும் பிரதமருக்கான கேள்வி நேரம் என்பன உள்ளிட்ட பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக அவதானிப்பதன் மூலம், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பான நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது. இதன் போது இக்குழுவினர் பொதுச் சபை உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடனும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற அமைப்புகளுடனும் மற்றும் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். தொடர் கலந்துரையாடல்களில், பயனுள்ள மேற்பார்வையை உறுதிசெய்வதில் தெரிவுக் குழுக்களின் வகிபங்கு, பொதுக் கணக்குகள் பற்றிய குழுக்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாக நிதிசார் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல், பொதுமக்களின் பங்களிப்பையும் மற்றும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதில் பாராளுமன்ற வெளிக்களத் தொடர்புகளின் பங்களிப்பு, மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான முன்முயற்சிகள் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடங்கியிருந்தன. இக்குழுவினர், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் (WFD) பிரதிநிதிகளுடனும் மற்றும் இலங்கைக்கான சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் (APPG) உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இது பாராளுமன்றத்தை வலுப்படுத்தும் முன்முயற்சிகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான வாய்ப்புகளை வழங்கியது. இது தவிர, இக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் அவர்களையும் மற்றும் CPA தலைமையக அதிகாரிகளையும் சந்தித்து, இலங்கைப் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்ற பணிகள் பற்றி கலந்துரையாடியதோடு, எதிர்காலத்தில் சாத்தியமான கூட்டு ஈடுபாடுகள் பற்றியும் ஆராய்ந்தனர். இவ்விஜயத்தின் போது, இக்குழுவினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவும் உதவியும் கிடைத்திருந்தன. உயர்ஸ்தானிகர் மாண்புமிகு நிமால் சேனாதீர மற்றும் தூதரக அதிகாரிகள் இக்குழுவினருடன் இணைந்து செயற்பட்டனர். இவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டம் சார்ந்த விடயங்களையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகளையும் எளிதாக்கிக்கொடுத்தனர். இந்நிகழ்ச்சித்திட்டம், இலங்கைப் பாராளுமன்றத்திற்கும், ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தியதோடு, பயனுள்ள பாராளுமன்ற நடைமுறைகள், ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் நிறுவன ரீதியான அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரிகளினதும் அறிவையும் மற்றும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்தவும் உதவியது.
2026-06-19
பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய 2026 ஜூன் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.இதனையடுத்து, பி.ப 5.00 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது. (இதன்போது விவாதம் நடத்தப்படாது)இதன் பின்னர் பி.ப 5.00 மணிமுதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதமும், அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் 2478/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதிம் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு 25.05.2026ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சிக்காக நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
2026-06-19
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை (House Democracy Partnership/HDP) மற்றும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் (Congressional Budget Office (CBO)) ஆகியவற்றுடன் இணைந்து “பாராளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார பகுப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.நிதி மேற்பார்வை, வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைவகுப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தின் திறனை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இது தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அமைந்தது.ஐக்கிய அமெரிக்க காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் மேகன் மூர், அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் மேகன் கரோல் மற்றும் கிரிஸ்டி ஹவ்லே அன்டனி ஆகியோர் இதில் பங்கெடுத்தனர். அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுரகத்தின் துணைத் தூதுவர் ஜென் ஹோவெல் உள்ளிட்ட தூதுரகத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற குழுக்களின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிர்வாகம் தொடர்பான அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரைச் சந்தித்து பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்களை வலுப்படுத்தல், நிறுவன ரீதியான திறன்களை மேம்படுத்தல் மற்றும் ஆதார அடிப்படையில் நிதி ரீதியான முடிவுகள் எடுக்கப்படுவதை ஊக்குவித்தல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொதுமக்களின் பங்கேற்பு, திறம்பட்ட குழு கண்காணிப்பு மற்றும் பாராளுமன்ற ஆதரவு சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான அறிமுக அமர்வு இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் தலைவர் கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.இங்கு, அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் நிறுவனப் பங்கு மற்றும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கக் குழுவினர் விளக்கமளித்தனர். பாராளுமன்ற வரவுசெலவுத் திட்டச் செயன்முறைக்கான ஒத்துழைப்பு ஆதரவு, சட்டமூலங்களுக்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல், வரவுசெலவுத் திட்டம் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகளைத் தயாரித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாரபட்சமின்மை ஆகிய கொள்கைகள் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இந்த நிகழ்வின் அமர்வுகளில் நிதி மேற்பார்வை, வரவுசெலவுத் திட்ட ஆய்வு, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் பாராளுமன்ற வலவுசெலவுத்திட்ட நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. பாராளுமன்றக் குழுக்களின் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், பகுப்பாய்வின் வழிமுறைகள், ஆராய்ச்சி ஆதரவுப் பணிகள், வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அத்துடன் பாராளுமன்றத்திற்கும் மேற்பார்வை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உத்திகள் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க தூதுக் குழுவினர் அக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இலங்கையின் பாராளுமன்ற நிதி மேற்பார்வை வழிமுறைகள் மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டு செயல்முறைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் தூதுக்குழுவினர் பெற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில், இலங்கையில் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்தை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு அடிப்படைத் திட்டத்தை வகுப்பதற்காக சுருக்கமான செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது.அரசாங்க நிதி மேற்பார்வை மற்றும் வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதில் இந்தத் தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் ஒரு முக்கியப் படியாக அமைந்தது. மேலும், பொறுப்புக்கூறக்கூடிய, வெளிப்படையான மற்றும் ஆதார அடிப்படையிலான ஆளுகையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை பாராளுமன்றத்திற்கும் அதன் சர்வதேசப் பங்காளிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவியது.
2026-06-17
மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (ஜுன் 17) சான்றுரைப்படுத்தினார்.இச்சட்டமூலம் 2026.03.17ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டிற்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், 2026.05.06ஆம் திகதி இது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் ஊடாக மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டம், 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டம், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டம் என்பன திருத்தப்படுவதுடன், கடனிறுக்கவகையின்மை (97வது அத்தியாயம்) கட்டளைச் சட்டத்தை நீக்குகிறது.இந்தச் சட்டம், கடனாளியின் நியாயமான வருமானம் மற்றும் அத்தியாவசிய சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கடன் பாதுகாப்பு, தற்காலிக விடுப்பு மற்றும் மறுசீரமைப்பு விதிகள் போன்ற தனிநபர் கடனிறுக்கவகையின்மை குறிப்பிட்ட நடைமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.மேலும், கடன் சந்தையின் முன்கணிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக, இந்தச் சட்டமூலம் பெருநிறுவன நிர்வாகம், நிர்வாகப் பொறுப்பு ஏற்பு மற்றும் எல்லை தாண்டிய கடனிறுக்கவகையின்மை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.மேலும், இந்தச் சட்டம் நேர்மையான தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இயங்கக்கூடிய நிலையில் உள்ள நெருக்கடியில் உள்ள வணிகங்களை மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையையும் வழங்க முற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமாக அமுலுக்கு வருகிறது.