பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-09-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (செப். 12) கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக ரூ.686,464 ரூபா செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய ரூ 12 மில்லியனுக்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.
கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.
இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு 9 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 – 13 வருடங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் கனிம மணல் உள்ள பகுதிகளைக் கண்டறியாமல் உள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட இந்த 5 நிறுவனங்களும் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் குறித்த பகுதியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் கனிமங்களை ஆய்வுசெய்ய விரும்பும் பிற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தடைப்பட்டுள்ளதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்திற்கு அமைய கனிம மணல் ஆய்வுகளின் பின்னர் கனிமம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கின்றபோதும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதியாகும் போது 3150 அனுமதிப்பத்திரங்களுக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் பணியகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கனிம அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது புனரமைப்புக்குப் பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றபோதும், புனரமைப்புக்குப் பதிலாக அந்தப் பணத்தை விட்டுக்கொடுப்பது லாபகரமானது என்று சுரங்கத் தொழிலாளர்கள் கருதுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத சுரங்க அனுமதி வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், திரிவானா ஏற்றுமதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திரிவாண மற்றும் பளிங்கு (Clear Quartz) சட்டவிரோத கடத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும், பணியகத்திற்குள் உள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பளிங்குகளின் ஏற்றுமதியை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மற்ற திரிவானாக்களை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கடந்த கால வரலாற்றில் சட்ட விதிகளின்படி சரியான திட்டத்தின்படி செயற்படாத ஒரு நிறுவனம் என்பதை விசாரணைகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் குழு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ளதை விட அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பெரிய தேசிய பணியைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக, சரியான தொலைநோக்குடன் கூடிய முறையான திட்டத்தின்படி இந்நிறுவகம் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதன்படி, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை கோப் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹுமான், சமிந்த விஜேசிறி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான மற்றும் சமிந்த ஹெட்டிஆரச்சி ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுவலவ, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks