01

E   |   සි   |  

2025-09-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் பல கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு – சரியான பொறிமுறையை தயாரித்து சட்டத்தைத் திருத்துமாறு கோப் குழு அறிவுறுத்தல்

  • கல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களின் அளவுக்கு ஏற்ப அரசுரிமையைக் கணக்கீடு செய்வது எந்தளவுக்கு நியாயமானது – கேள்வி எழுப்பியது குழு 
  • அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் அவதானம்
  • திரிவானா மற்றும் பளிங்கு ஏற்றுமதியின் முறைகேடுகள் குறித்தும் அவதானம்

 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது. 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (செப். 12) கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது. 

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக ரூ.686,464 ரூபா செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய ரூ 12 மில்லியனுக்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.

கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு  அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.

இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று  இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு 9 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 – 13 வருடங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் கனிம மணல் உள்ள பகுதிகளைக் கண்டறியாமல் உள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட இந்த 5 நிறுவனங்களும் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் குறித்த பகுதியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் கனிமங்களை ஆய்வுசெய்ய விரும்பும் பிற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தடைப்பட்டுள்ளதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்திற்கு அமைய கனிம மணல் ஆய்வுகளின் பின்னர் கனிமம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கின்றபோதும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதியாகும் போது 3150 அனுமதிப்பத்திரங்களுக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் பணியகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கனிம அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது புனரமைப்புக்குப் பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றபோதும்,  புனரமைப்புக்குப் பதிலாக அந்தப் பணத்தை விட்டுக்கொடுப்பது லாபகரமானது என்று சுரங்கத் தொழிலாளர்கள் கருதுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத சுரங்க அனுமதி வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், திரிவானா ஏற்றுமதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திரிவாண மற்றும் பளிங்கு (Clear Quartz) சட்டவிரோத கடத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும், பணியகத்திற்குள் உள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பளிங்குகளின் ஏற்றுமதியை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மற்ற திரிவானாக்களை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கடந்த கால வரலாற்றில் சட்ட விதிகளின்படி சரியான திட்டத்தின்படி செயற்படாத ஒரு நிறுவனம் என்பதை விசாரணைகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் குழு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ளதை விட அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பெரிய தேசிய பணியைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக, சரியான தொலைநோக்குடன் கூடிய முறையான திட்டத்தின்படி இந்நிறுவகம் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதன்படி, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை கோப் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹுமான், சமிந்த விஜேசிறி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான மற்றும்  சமிந்த ஹெட்டிஆரச்சி ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுவலவ, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-04-10

இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2017 பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் ஆராய்வு 2021-2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்களும் ஆராய்வுஇலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.04.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இங்கு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விடயங்கள் வெளிப்பட்டதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் பூர்த்திசெய்யப்படாத விசாரணைகளின் எண்ணிக்கை1538 என்பதும் தெரியவந்தது. இவற்றில் ரூ.69,999,317 பெறுமதியான 40 நிதி மோசடி குறித்த விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதும், இந்த விசாரணைகள் 2007 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது.  விசாரணை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாகவே விசாரணைகள் தாமதமாவதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணைகளில் தாமதம் காணப்பட்டாலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில்  நிலுவையிலிருந்த விசாரணைகளின் எண்ணிக்கை 2711 என்றும், இது தற்பொழுது 1538 ஆகக் குறைந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சில விசாரணைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்தது.அஞ்சல் தலையைமகம் மற்றும் 14 மாவட்ட அலுவலகங்களில் பணியாளரின் வருகை மற்றும் புறப்படுகை என்பவற்றைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள இயந்திரத்தில் புறப்படும் நேரம் 16.15 எனப் பதிவாகியுள்ள போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் புறப்படும் நேரம் இரவு 7,8,9,10 என பதிவேடுகளில் பதிவுசெய்து தலைமையகத்தின் பணியாளர்கள் 2023ஆம் ஆண்டில் 57,919,684 ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 7,024,144 ரூபாவையும், 14 மாவட்ட அலுலகங்களில் உள்ள பணியாளர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 373,874,705 ரூபாவையும் மேலதிக நேரக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு 4000/5000 வெற்றிடங்கள் காணப்படுவதால் பணியில் உள்ளவர்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தக் கொடுப்பனவுகள் தவறானவை அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, மேலதிக நேரக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்று குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குழு தெரிவித்தது. அத்துடன், இந்த விடயத்தை உள்ளடக்கியதாக அறிக்கையொன்றை கையளிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அதேநேரம், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அச்சகப் பிரிவினால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் 500 வெளியீட்டுப் பிரதிகளை அச்சிடுவதற்கு ரூ.2,697,300வும், நினைவேடுகளை அச்சிடுவதற்கு ரூ.1,092,656 செலவிட்டபோதும், 2025 நவம்பர் மாதம் நடத்திய கணக்காய்வு விசாரணையின் போது குறித்த வெளியீடுகள் சரியான தரத்தில் அச்சிடப்படவில்லையென்பதால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அச்சகப் பிரிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு தெரிவித்தது.மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, காலமான, ஓய்வுபெற்ற, இடைநீக்கம் செய்யப்பட்ட, இராஜினாமா செய்த மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து  வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் ரூ. 61,225,431 ஆக இருந்தது. இதில், 5 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவைக் கடன் ரூ. 20,679,788 ஆகும். அதன்படி, இந்தப் பணத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 17 கோரிக்கைக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை எவ்வாறு வசூலிக்கப்படவுள்ளது என்பதை விளக்கும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.மூன்று மாதங்களுக்குள் இலங்கை அஞ்சல் திணைக்களத்தை மீண்டும் அழைக்கவிருப்பதாகக் கூறி குழுவின் தலைவர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, தினிந்து சமன் ஹென்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, சந்தன சூரியஆரய்ச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிகா அத்தாவுட, டி.கே. ஜயசுந்தர, அஜந்த கம்மத்தகே மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-04-10

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது.குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக கௌரவ சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கௌரவ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும், அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர். இதற்கு அமைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் நடைமுறையைத் தொடர்வதற்குத் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர். 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. குறித்த சட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட  தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர், 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், குழுவின் அடுத்த கூட்டத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆரய்ச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, லக்ஷ்மன் நிபுண ஆராச்சி  மற்றும் சமன்மலி குணசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-04-09

NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவியது அரசாங்க நிதி பற்றிய குழு

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் ஏப்ரல் 07ஆம் திகதி கூடியது.இக்குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க, அதன் ஆளும் சபை, நாணயக் கொள்கைச் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கி, பாராளுமன்றத்திற்கு விளக்கத்தை வழங்க வேண்டும் என்ற சட்டரீதியான ஏற்பாட்டுக்கு அமைய இக்கூட்டம் இடம்பெற்றது.கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, எம்.எம்.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த விடயங்களுக்கு முன்னுரிமையளித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இப்பிரச்சனையின் தீவிரத்தையும், உடனடிக் கவனம் தேவை என்பதையும் வலியுறுத்திய அரசாங்க நிதி பற்றிய குழு, இது பற்றி மத்திய வங்கியுடன் விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தது.குறித்த மோசடி தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குழுவுக்கு அறிவித்தார். தேவையான தகவல்கள் திரட்டப்பட்டவுடன், மத்திய வங்கி கூடிய விரைவில் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அவர் மேலும் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட வங்கியில் நிறுவன ஆளுகையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளும், இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய துறைகளின் மேற்பார்வையில் குறைபாடுகளும், முக்கியத் தகவல்களை அறிக்கையிடுவதில் தேவையற்ற தாமதங்களும் காணப்பட்டமை புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.இத்தகைய குறைபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனச் சுட்டிக்காட்டிய குழு, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. முழுமையான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, கடுமையான மேற்பார்வையை மேற்கொள்ளும் குழு வலியுறுத்தியது.


2026-04-02

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது.பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுகின்றமை இங்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பீடி இலைகள் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை இறக்குமதி செய்து இத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான தேவையை குழு வலியுறுத்தியது. அத்துடன், சட்டவிரோத பீடி இலைகளைப் பயன்படுத்தி பீடி தொழில் மேற்கொள்பவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிடமுடியாத நிலை இருப்பதால் இதனைத் தடுத்து, அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தை ஈட்டுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக கௌரவ பிரதியமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, ருவான் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்செய் பெரேரா, (கலாநிதி) நன்தன மில்லகல்ல, திலின சமரக்கோன், நிலந்தி ஹொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், நிதி அமைச்சு, உண்ணாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks