பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் கீழ் அவருக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 2024 நவம்பர் 21 ஆம் திகதியன்று பாராளுமன்றம் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024.09.24 ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, 2024.11.14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும், 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி வரையான காலப் பகுதி வேட்புமனுப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியாகவும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
2026-05-07
வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.வியட்னாம் ஜனாதிபதி அவர்கள் நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.இதன்போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.
2026-05-07
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (மே 06) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் நெருக்கமான, வலுவான உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இலங்கைக்கான கியூப தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கியூபாவின் தலைவர்களான ஃபிடெல் கஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா ஆகியோருக்கு தனது மரியாதையைச் செலுத்திய அவர், சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான அமர்வுகள் உள்ளிட்ட பல்தரப்புத் தளங்களில் கியூபா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுகளுக்கும் சபாநாயகர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.கியூபாவின் மேம்பட்ட மருத்துவத் துறையை அவர் பாராட்டியதுடன், தாம் மருத்துவ மாணவராக இருந்த காலத்தில் இலங்கையில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கொண்டு சேவையாற்றிய தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய உதவிக்கு கியூபா அரசாங்கத்துக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், கியூபாவில் காணப்படும் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன்> இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றார். இலங்கைக்கு கியூபா தொடர்ந்து வழங்கி வரும் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கியூப தூதுவர், தித்வா சூறாவளியின் தாக்கத்தை தாக்கத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு மேற்கொண்ட பயனுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆட்சிமுறை முயற்சிகளைப் பாராட்டினார்.இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தூதுக் குழுவுடன் கியூபாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அவர், சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.கியூபாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்புக்கள், பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
2026-05-06
இலங்கைக்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மாலைதீவு ஜனாதிபதி கௌரவ (கலாநிதி) முகமது முய்சு அவர்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகர், மாலைதீவு ஜனாதிபதியையும், தூதுக் குழுவினரையும் அன்புடன் வரவேற்றார்.இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் காணப்படும் நீண்ட, நெருக்கமான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இவ்விஜயம் அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களின் ஊடாக இந்த உறவுகள் மேலும் வலுப்படும் என கௌரவ சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், தங்களுக்கிடையிலான வலுவான வரலாற்று, கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான நெருக்கமான ஈடுபாட்டை அதிகரிப்பதில் இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.இந்தச் சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு, தேசிய முன்னுரிமைகள், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், செயல்திறன் மற்றும் பொருளாதார நிலைப்புத் தன்மையை மேம்படுத்தும் நோக்கிலான டிஜிட்டல் மாற்றம் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்பது, இலங்கையின் விருந்தோம்பல் துறையில் மாலைதீவின் ஒத்துழைப்பு, மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட விடயங்களின் ஊடாக இரு நாட்டு மக்களுக்கும் இடையில் வலுவான உறவுகள் காணப்படுகின்றமையையும் கௌரவ சபாநாயகர் வலியுறுத்தினார். இலங்கை மீனவர்களை உள்ளடக்கிய கடல்சார் விவகாரங்களைத் தீர்ப்பதில் தொடர்ந்து காணப்படும் ஒத்துழைப்பையும் சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய மாலைதீவு ஜனாதிபதி, இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தினார்.இந்தச் சந்திப்பில் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ரிஸ்வி ஹசன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்றம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-05
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (மே 04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்.முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது.கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks