பாராளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.
கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன.
பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை (188ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணிவரை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, (235ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பவற்றுக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் வெளிநாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பற்றிய விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒழுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் என்பவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.
| கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் | தனியார் உறுப்பினர் பிரேரணை |
| நலின் பண்டார ஜயமஹ அவர்கள் | எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உரிமம் அளிக்கும் செயன்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல். |
| உபுல் கித்சிறி அவர்கள் | இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய மடுவன்வெல பிரபுமனை (வலவ்வ) முதற்கொண்டு இலங்கையின் புராதன பெறுமதி வாய்ந்த தலங்களைப் பாதுகாத்தல். |
| (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் | “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல். |
| சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ அவர்கள் | பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counsellor) ஒருவரை நியமித்தல். |
| ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள் | “ரட்டவிருவன்” (புலம்பெயர் வீரர்கள்) என்றழைக்கப்படும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை வகுத்தல். |
| ருவன்திலக்க ஜயகொடி அவர்கள் | இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிலுள்ள உணவகங்களில் மாணவர்களுக்கு பாதகமான உணவு வகைகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறையொன்றை உருவாக்குதல். |
| றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்கள் | யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல். |
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
2026-07-02
தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களும், பாராளுமன்ற பணியாளர் பெளத்தச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த “தியவன்னா பௌத்த பக்தி கீதம்” நிகழ்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் இணைந்த சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த பௌத்த பக்தி கீதம் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், இலங்கையின் கலாசாரம் அடிப்படையில் பெளத்த தத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்கள் நாகரிகமான சமூகமாக உருவெடுப்பதற்கு பெளத்த தத்துவம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நல்லொழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மட்டுமன்றி, சிந்தனைகள் மற்றும் மனப்பாங்குகளின் அபிவிருத்தியும் அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துரைத்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள், இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாராளுமன்ற பணியாளர்களில் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பங்களிப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும், பாராளுமன்ற பணியாளர்கள், இலங்கைப் பொலிஸ் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் இணைந்த சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இதனுடன் இணைந்ததாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தினால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிறீம் தன்சல் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நுகசெவன நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஐஸ்கிறீம் சதன்சல் வழங்கும் நிகழ்வை கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி மற்றும் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.இதேவேளை, பெசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெளத்தச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம சொற்பொழிவு நிகழ்வொன்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குருநாகல் பிரதான சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய இராஜாங்கனை சுமனசார தேரர் இந்த தர்மச் சொற்பொழிவை வழங்கினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-02
இராஜதந்திர சேவையில் உள்ள பெண்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இலங்கையில் பணியாற்றும் பெண் தூதுவர்கள் மற்றும் பெண் இராஜதந்திரப் பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்கும் விசேட சந்திப்பொன்றை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தது.உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்காக பெண்கள் வழங்கிவரும் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டுவது, சர்வதேச ரீதியில் தீர்மானமெடுக்கும் சென்முறைகளில் பெண்களின் சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பது இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவவகார அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், பெண் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவரும் இராஜதந்திரிகள் குழுவின் தலைவருமான தெவ்வி கஸ்டினா டொபிங் (Dewi Gustina Tobing) அவர்கள் கருத்துத் தெரிவித்தார். உலகின் முதலாவது பெண் பிரதமர் இலங்கையிலிருந்து உருவானமையை நினைவுகூர்ந்த அவர், இது இந்நாட்டின் பெண் தலைமைத்துவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும் எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தின் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதையும் அவர் பாராட்டினார்.இதன் பின்னர், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், இலங்கையில் பணியாற்றும் பெண் தூதுவர்களுக்கும் இடையில் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. இதன்போது, பெண் தலைமைத்துவம், இராஜதந்திர சேவை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பது குறித்த விடயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இது விடயத்தில் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதனையடுத்து இராஜதந்திரிகள் குழுவினர் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், இக்குழுவினரை வரவேற்று சபையில் அறிவிப்பொன்றும் விடுக்கப்பட்டது. இவர்கள் சபை அமர்வுகளையும் நேரில் பார்வையிட்டனர்.இந்த நிகழ்வில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், ஒன்றியத்தின் செயலாளரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-02
இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (United Nations Population Fund - UNFPA) என்பவற்றுக்கிடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சார்பில் இலங்கைக்கான பதில் வதிவிடப் பிரதிநிதி ஃபன்ஷோ வென்ங்யல் (Phuntsho Wangyel) அவர்களும் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி அலெக்ஸான்டர் சஷா பொடிரோஸா (Aleksandar Sasha Bodiroza) அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சட்டவாக்க செயன்முறை மேலும் வலுப்படுத்தப்படவிருப்பதுடன், பாராளுமன்றத்தின் நிறுவனத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் தொகை மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு புதிய மட்டத்திற்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், சனத்தொகை தாங்குதிறன் (Demographic Resilience), பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் தீங்கிழைக்கும் சமூக நடைமுறைகள் தொடர்பில் ஆதாரபூர்வமான சட்டவாக்கத் தீர்மானங்களை எடுக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், அண்மைய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் சனத்தொகை ஆய்வுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு தகவல்களை பாராளுமன்றத்திற்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படவுள்ளனர்.மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பங்கேற்புடன் திறன் பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் உயர்மட்ட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதாரபூர்வமான கொள்கை ஆலோசனைகள் மற்றும் சுருக்க அறிக்கைகளை வழங்குதல், பயிற்சி நிகழ்ச்சிகள், செயலமர்வுகள் மற்றும் அனுபவப் பகிர்வு அமர்வுகளை நடத்துதல் ஆகியவற்றுக்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.மேலும், சனத்தொகை இயக்கவியல், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலின சமத்துவம் தொடர்பான சர்வதேச கொள்கைக் கட்டமைப்புக்கள், அரசாங்கங்களுக்கு இடையிலான செயல்முறைகள் மற்றும் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேசப் பொறுப்புகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான ஆதரவை வழங்குவதற்கும் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் பங்கெடுத்தனர்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையும் மக்கள்தொகை குறித்த சவால்கள் பற்றி ஆழமான பகுப்பாய்வு அவசியம் எனக் குறிப்பிட்டார். இளைஞர்களின் தொழில் இலக்குகளுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையின்மை, குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் சமூகப் பராமரிப்பு சேவைகளில் நிலவும் சமச்சீரின்மை ஆகியவை தொடர்பில் கொள்கை மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.அத்துடன், நீண்டகால நோக்குடன் சனத்தொகை இயக்கவியல் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பாக உரிய கொள்கை வழிகாட்டல் வழங்கப்படுவது இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், குழந்தைப் பராமரிப்பிற்கான வலுவான சமூகக் கொள்கைகளின் அவசியம், சனத்தொகை மாற்றத்தை திறம்பட முகாமைத்துவம் செய்தல், குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துதல், எதிர்காலத் தலைமுறையின் தேவைகளைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களில் அரசு, பாராளுமன்றம் மற்றும் ஏனைய தரப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
2026-07-01
சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமிக்க மற்றும் நாகரிகமான சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாவதாக கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.ஒழுக்கம், சட்டத்தை மதிப்பது மற்றும் நாகரிகப் பண்புகளைக் கொண்ட நபர்களை மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்து அனுப்புவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (30) ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சிச் செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில், கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், ஆசிரியர்கள் தங்களது முழுமையான அர்ப்பணிப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக செலவிடுகின்றனர் என்பதால், அவர்களுக்கு எப்போதும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் எந்த உயர்ந்த நிலையை அடைந்தாலும், கல்வி கற்பித்த ஆசிரியர்களை மறக்காமல் மதித்து, அவர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், ஒருவர் மேற்கொள்ளும் தொழிலை மதித்து, அதில் திருப்தியுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, தத்தமது துறைகளில் திறமையாளர்களாக உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மாணவர்கள் பெற்றோரைப் பின்பற்றி வளர்வதால், நன்நடத்தை மற்றும் ஒழுக்கத்தை முன்மாதிரியாக வெளிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும், இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாக உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கருத்துரைத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாள் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்தார். கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், கொழும்பிற்கு வருகை தராமல், தாங்கள் வசிக்கும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாகவே அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகர் தெரிவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் என்பன இடம்பெற்றன. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக பாடசாலையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் முன்வைத்தனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக பாராளுமன்றத்தின் பிரதி பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷிணி புலத்சிங்கள மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவில், நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் அதிபர் டபிள்யூ.ஆர்.ஆர். சில்வா நன்றியுரையாற்றினார்.ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடரின் மேலும் ஒரு கட்டமாக இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத், புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.