பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-01
செய்தி வகைகள் : செய்திகள்
சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமிக்க மற்றும் நாகரிகமான சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாவதாக கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
ஒழுக்கம், சட்டத்தை மதிப்பது மற்றும் நாகரிகப் பண்புகளைக் கொண்ட நபர்களை மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்து அனுப்புவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (30) ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சிச் செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில், கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், ஆசிரியர்கள் தங்களது முழுமையான அர்ப்பணிப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக செலவிடுகின்றனர் என்பதால், அவர்களுக்கு எப்போதும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் எந்த உயர்ந்த நிலையை அடைந்தாலும், கல்வி கற்பித்த ஆசிரியர்களை மறக்காமல் மதித்து, அவர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒருவர் மேற்கொள்ளும் தொழிலை மதித்து, அதில் திருப்தியுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, தத்தமது துறைகளில் திறமையாளர்களாக உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் பெற்றோரைப் பின்பற்றி வளர்வதால், நன்நடத்தை மற்றும் ஒழுக்கத்தை முன்மாதிரியாக வெளிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும், இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாக உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்துரைத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாள் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்தார். கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், கொழும்பிற்கு வருகை தராமல், தாங்கள் வசிக்கும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாகவே அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகர் தெரிவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் என்பன இடம்பெற்றன. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக பாடசாலையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் முன்வைத்தனர்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக பாராளுமன்றத்தின் பிரதி பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷிணி புலத்சிங்கள மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவில், நுகேகொட புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் அதிபர் டபிள்யூ.ஆர்.ஆர். சில்வா நன்றியுரையாற்றினார்.
ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடரின் மேலும் ஒரு கட்டமாக இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத், புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-01
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் மற்றும் மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் என்பவற்றை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (ஜுன் 30) சான்றுரைப்படுத்தினார்.2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் 2026 மே மாதம் 19 ஆம் திகதி முதலாம் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2026 ஜூன் மாதம் 23 ஆம் திகதி திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டத்தின் மூலம் பாரம்பரிய நிதித் துறைகளையும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் இலக்காகக் கொண்டு தேசிய வரிக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. வதிவுள்ளவரல்லாத எண்ணிம சேவை வழங்குநர்களைப் பதிவு செய்தல், வரி விதிப்பிற்காக புதிய முறையியலொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக விற்பனை முனைப் பொறிகளை (point-of-sale machines) பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல் ஆகியன இச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஏற்பாடுகளுள் அடங்கும்.மேலும், வரி ஏய்ப்புகள் மற்றும் மோசடியான முறையில் வரி நன்மைகளைப் பெறுவதற்கு எதிராகக் காணப்படும் தண்டனை ஏற்பாடுகளைக் கடுமையாக்குவதன் மூலம், வரி இணங்கியொழுகுகையையும் பொது நிதித் தொடர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் இச்சட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.அதேபோன்று, மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் 2025 ஜூலை மாதம் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் முதலாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 ஜூன் மாதம் 11 ஆம் திகதி திருத்தங்களின்றி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டத்தின் மூலம் குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகளை மத்தியஸ்தம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தலும், 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, இலங்கை வர்த்தக மத்தியஸ்த மத்திய நிலையச் சட்டத்தை நீக்குதலும், அவற்றோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுகளைச் செய்தலும் நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய, இவ்விரு சட்டமூலங்களும் முறையே 2026 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டம் மற்றும் 2026 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டம் என அமுலுக்கு வருகின்றன.
2026-06-24
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை-பஹ்ரைன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவுசெய்யப்பட்டார்.குறித்த பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (ஜுன் 23) இடம்பெற்றபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்ஹ இச்சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இலங்கை – பஹ்ரைன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் லால் பிரேம்நாத் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, 1992ஆம் ஆண்டு ஆரம்பமான இலங்கைக்கும் பஹ்ரைன் நாட்டுக்கும் இடையிலான தூதரக உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்துறைகளில் முன்னேறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைச் சமூகம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு இந்த நட்புறவு சங்கம் முக்கிய தளமாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும்போது நாடுகள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.இலங்கைக்கும் பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இடையிலான தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சங்கத்தின் புதிய தலைவர், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற மட்டத்தில் தீவிரமான தலையீடுகள் தேவை என்று சுட்டிக்காட்டினார். பஹ்ரைனில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரின் நலனுக்கும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நட்புறவு சங்கம் முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பொதுவான இலக்குகளை அடைவதில் தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற அளவிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இச்சங்கத்தின் செயலாளர், இத்தகைய சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே நட்பையும் புரிதலையும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-24
சுயாதீன ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மகளிர் ஆணைக்குழு சுயாதீனமாகவும், வலுவான நிலையிலும் செயற்படுவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவைப் பாராளுமன்றம் வழங்கும் எனப் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் (ஜுன் 23) தன்னைச் சந்தித்த தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசிர்வாதம் (Ms. Grace Asirwatham) உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.பத்தாவது பாராளுமன்றத்தினால் இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவான தேசிய மகளிர் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு கௌரவ சபாநாயகர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இலங்கையின் மக்கள் தொகையில் 51 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களுக்காக தேசிய மகளிர் ஆணைக்குழுவிற்கு பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கை என்றும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டுப் பெண்கள் சமூகத்தில் முன்னோக்கி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார். எனவே, இலங்கைப் பெண்களை மேலும் வலுவாக அதிகாரப்படுத்துவதற்காக சரியான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்கு தேசிய மகளிர் ஆணைக்குழு செயற்பட வேண்டும் என கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.தேசிய மகளிர் ஆணைக்குழுவில் தற்போது காணப்படும் நிர்வாக மற்றும் ஏனைய உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசிர்வாதம், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஸ்ரீன் சாரூர் ஜனஹா செல்வராஸ், ஜயந்தி உத்பலா, வைத்தியர் பத்மா குணரத்ன, கலாநிதி கலன சேனாரத்ன மற்றும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-06-24
பாடநெறிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படாமல், தலைமைத்துவப் பண்புகள், குழுவாகப் பணியாற்றுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன் போற்றவற்றை வெளிப்படுத்தவும் அவற்றை மேம்படுத்துவதற்கும் மாணவர் பாராளுமன்றம் தனித்துவமான தளமாக அமையும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைக் குறிப்பிட்டார்.தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மத்தியில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் நல்ல மனப்பான்மைகளுடன் ஒரு சமூகத்தை உருவாக்குவது மாணவர்களின் பொறுப்பு என்பதை நினைவுகூர்ந்த குழுக்களின் பிரதித் தவிசாளர், வறுமை ஒழிப்பு, வலுசக்தி சேமிப்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் போன்ற தேசிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் புதிய யோசனைகளை முன்மொழிய முடியும் என்றார்.இங்கு கருத்துத் தெரிவித்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, அறிவை புரிதலாக வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆராய்ச்சி என்பது அன்றாட வாழ்வில் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு செயல்முறை என்று சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் ஆர்வத்தையும் பகுப்பாய்வு சிந்தனையையும் வளர்ப்பது மற்றும் அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.மேலும், இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன கமகே, ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார். அதேவேளை, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மாணவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடையே உரையாற்றும் போது, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த குடிமக்களாக மாறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷினி புலத்சிங்கல அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தின் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அழைக்கப்பட்ட பாடசாலைகளின் சார்பில் கலந்துகொண்ட கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் டி.எம். லால் திசநாயக்க மாணவர் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிழ்வின் இறுதியாக கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் சுமேதா ஜயவீர நன்றியுரையாற்றினார்.கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, கொழும்பு 07, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks