logo

E   |   සි   |  

2024-02-07

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை – 07.02.2024

ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது.  நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும்  நெருக்கடி ஏற்பட்டது.

சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து விடுபட முடிந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் மீள முடியாது.

நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம்  தான் உலகமும்  நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது.

நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்?

புத்தபிரான் போதித்த ஒரு போதனையை  இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“அத்ததீபா – விஹரத”

தங்களுக்குத் தாங்களே ஒளியாக வாழ வேண்டும்.
நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உலகில் எங்கும்  ஏனையவர்களைக் குறைகூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது.

எம்மை எமக்கான ஒளியாக மாற்றாவிட்டால், நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாவிட்டால், நமக்கு நன்மை நடக்காது. நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. நெருக்கடிக்கும் தீர்வு இல்லை.

முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால்  சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டைக் கிழியக் கத்தினாலும்  நாம் அடிப்படையில் இருந்து மாறாவிட்டால் முறைமைய மாற்ற எம்மால் முடியாது.

அதனைச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த காலம் , நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பல விடயங்களை இச்சபையில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

2022 பெப்ரவரியில் இந்த நாடு இருந்த நிலை, நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இந்த வருடம் பெப்ரவரியாகும் போது  கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட  சிறந்த நிலைக்கு  நாடு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு  பெப்ரவரி மற்றும் இந்த பெப்ரவரி வரையான நமது பொருளாதார குறிகாட்டிகள் சிலவற்றை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06 சதவீதமாக இருந்தது. இன்று அது 6.4சதவீதமாக குறைந்துள்ளது.

உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதமாக உள்ளது. இன்று அது 3.3 சதவீதமாக உள்ளது.

அன்று ஒரு டொலரின் பெறுமதி  363 ரூபாய். இன்று 314 ரூபாய்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடங்களில் இலங்கையானது முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்திய 6 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் இருப்புப் பற்றாக்குறை  காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், எங்களால் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவைத் தொகை உபரியை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 12 சதவீதமாக உள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், 52 பிரதான அரச நிறுவனங்கள் 745 பில்லியன் ரூபா நட்டம் ஈட்டின. செப்டம்பர் 2023இற்குள், இந்த 52 நிறுவனங்களும் 313 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் இந்நிறுவனங்கள் கடன் சுமையை தாங்க முடியாத நிறுவனங்களாக காணப்படுகின்றன.

தெரிவுசெய்யப்பட்ட கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி  இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சமயம் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. 2023 டிசம்பர் நிலவரப்படி, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு  4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

குறுகிய காலத்தில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்ணிக்கையை 1,487,303 ஆக அதிகரிக்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

மேலும், 2023இல் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுத்தோம். கோட்டா முறையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.  மீனவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், உற்பத்தித் தொழிற்துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விநியோக வலையமைப்பில் எந்தத் தடையும் இல்லை.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம்.

நமது பொருளாதாரம் விண்கல் வேகத்தில் சரிந்தது. ஆனால்  தற்போது எமக்கு அதனை மாற்ற முடிந்துள்ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளோம். நாங்கள் வீ(V) வடிவ மீட்பு அல்லது வீ(V) வடிவ  மீட்சியைப் பெற்று வருகிறோம்.

நாம் அடைந்த விசேடமான வெற்றியாக அதனைக் குறிப்பிடலாம். வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி மிகவும் கடினமானது மற்றும் வேதனையானது. ஆனால் ஏனைய நாடுகளைப் போல நீண்ட கால சிரமங்கள் மற்றும் வலிகள் இல்லாமல் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.

நான் ஒரு உதாரணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறேன்.

கிரேக்கம் கடன் செலுத்த முடியாமல் 2009ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் பின்னர் முழு நாடும் மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. அந்தக் காலத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. மீண்டும் அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சுமார் 10 வருடங்கள் தேவைப்பட்டது.

நமது நாடு குறுகிய காலத்தில் இத்தகைய விதிவிலக்கான சாதனைகளை எட்டுவது உண்மையில் உலக சாதனையாகும். எங்களால் எப்படி அவ்வாறான சாதனைப் படைக்க முடிந்தது?

2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது  தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், நாங்கள் தயாரிக்கும் கொள்கைகள், நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தையும் அவ்வப்போது நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். மக்கள் முன்னிலையிலும் அவ்வப்போது பகிரங்கமாக அறிவித்தேன். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவை பற்றி கலந்துரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தக் கொள்கைகள்  ஒருபோதும் மறைக்கப்படவில்லை. ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ளோம்.

அரசியல் ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முடிவையும் நாட்டு நலன் கருதியே எடுத்தேன். எமக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்கவில்லை. தனிப்பட்ட இலாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்கு சரியான கொள்கைகளை செயற்படுத்தினோம்.

பாராளுமன்றத்திலுள்ள  சில தரப்பினர் அந்த முடிவுகளை எதிர்த்தனர். ஆனால் பெரும்பான்மையானோர் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களையும் இலக்குகளையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக அந்த முடிவுகளுக்கு ஆதரவாக கையுயர்த்தினர். எதிர்காலத்தில் தேசத்தின் பாராட்டை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் இந்தப் பயணத்தில் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக  அன்றிருந்த நாட்டின் உண்மையான நிலைமையை நான் எடுத்துக் காட்டினேன். பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை நிலையான பாதைக்கு வழிநடத்தும் பல திட்டங்களை முன்வைத்தேன். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான  மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்டமாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் நாங்கள் செயல்படுத்திய பொருளாதார  மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கைகள் காரணமாக, நாங்கள் தற்போது நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான பாதைக்கு பிரவேசித்திருக்கிறோம். அத்தோடு சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் இலக்குகள் மற்றும் பயணம் குறித்து  மகிழ்ச்சியடைந்துள்ளன.

இருண்ட பொருளாதார சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நாம் தற்போது சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தைக் காண்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருளாதாரம் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் பலர் நினைத்துப் பார்க்க முடியாத இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர்.  மேலும் சிலர் தங்கள் வருமான வழிகளை இழந்தனர். சிலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். இன்னும் சிலர் உரிமைகளை இழந்தனர். பெரும்பாலான  துன்பங்கள் சாதாரண மக்களுக்குத்தான் சொந்தமானது.

இழந்த வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு வழங்க தற்போது நாம் முயற்சிக்கிறோம். மக்களின்  இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வேலைத் திட்டத்தை  'உரித்து' என்ற பெயரில் அண்மையில் ஆரம்பித்தோம். உரித்து வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம். ஒன்று காணி மற்றது வீடு.

இங்கு காணி உரிமை பிரதான இடத்தைப் பெறுகிறது. 1897 தரிசு நிலச் சட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை காலனித்துவப் பிரித்தானிய அரசு பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும், பறிக்கப்பட்ட காணி உரிமைகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த காணி உரிமையை மீள வழங்கும் பணியை  நாம் ஆரம்பித்துள்ளோம். இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக எமது சமூகத்தில்  இணைக்கின்றோம். இது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மற்றும் புரட்சிகரமான நகர்வாகும். அரிசியில் தன்னிறைவு பெற பல தசாப்தங்களாக விவசாயிகள் அனுபவித்த கடின உழைப்பக்கு வழங்கப்படும் ஒரு  கௌரவமாகும்.

மேலும், இந்நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு முறையான வருமானம் கிடையாது.  பொருத்தமான வீடு இல்லை. இந்த மக்களுக்கு வருமான வழி மற்றும் வீட்டு உரிமை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். நகர்புர, குறைந்த வருமானமுடைய 50,000இற்கும் மேற்பட்டோருக்கு முழுமையான வீட்டுரிமை வழங்கப்படும்.
வெற்றிகரமான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் போது நாட்டின் அனைத்துத் தரப்பினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக வறிய மற்றும் நிர்க்கதியான மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்தோம்.

இந்த ஆண்டு அஸ்வெசும  ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை. வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும்.

2022 ஓகஸ்ட் மாதமளவில், ஜனாதிபதி நிதியம் முற்றிலும் செயலிழந்தது. 9,000இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள், பணம் இல்லாமல் குவிந்திருந்தன. ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை   மேலும் 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்தன. அவை அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டது.  2023 ஆம் ஆண்டில்  4,917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. தற்போது பணம் செலுத்துவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று அல்லது ஜந்து வேலை நாட்களுக்குள் பணம் செலுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மருத்துவ உதவிகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவித் தொகைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நாம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கினோம்.  ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தை உயர்த்தினோம். 2016 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு சமாந்தரமாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் அடைந்துவரும் வளர்ச்சி சமூகத்தில் பேசப்படும் தலைப்புகளில் பிரதிபலிக்கிறது. சில காலம் முன்பு மின் வெட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அப்போது, எவ்வளவு கொடுத்தாலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று நாம் மின்சாரக் கட்டணத்தைப் பற்றி பேசுகிறோம். சில காலத்திற்கு முன்பு கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 3000 ரூபாவிற்கு வாங்கப்பட்டது குறித்து பேசப்பட்டது. எரிபொருள் வரிசைகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செலவிடுவது பற்றி பேசப்பட்டது. இன்று நாம் இலங்கையில் முதலீடு செய்யும் புதிய எரிபொருள் நிறுவனங்கள் பற்றி பேசுகிறோம். காய்கறி வாங்க வழியில்லை என்று பேசிக்கொண்டனர். இன்று ஒரு கேரட்டின் விலை பற்றி பேசுகின்றனர். புத்தகம் அச்சடிக்க காகிதம் இருக்கவில்லை என்று அன்று கூறப்பட்டது. இன்று வற் வரி பற்றிப் பேசுகிறோம்.

ஆம். வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன. 2023 இறுதியில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1,000,029 ஆக உயர்ந்துள்ளது. இது 130 சதவீத அதிகரிப்பு. வரி வலையமைப்பு விரிவடையும் போது, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஏற்படும் வரிச்சுமை குறையும். மேலும், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைத் தொடரும்போது, பொருளாதாரம் ஸ்திரமாகும்போது, வரிச்சுமையைக் குறைப்போம். "வற்" வரியின் சதவீதத்தை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

மலையளவு கடனைச் சுமந்துகொண்டுதான் இதையெல்லாம் செய்கிறோம். கடந்த காலம் முழுவதும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்து மீள் திட்டத்தைத் தயாரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். முதல் கட்டமாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது. தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த சிக்கலான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இது நமது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமையும். மேலும் கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையின் மையமாக இது மாறிவிட்டது.

IMF, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த ஆண்டு 2% முதல் 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணித்துள்ளன. 2025இல் அதை 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

2021 ஆம் ஆண்டில், தீயில் விழிந்திருந்த நாட்டை மீட்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்தோம். 2021 ஐ விட சில விடயங்களை 2022ஆம் ஆண்டு மேம்படுத்திக் கொண்டோம். 2022 ஐ விட 2023 எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொண்டோம். 2024. இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், 2025 இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆனால் அதில் மாத்திரம் திருப்தி அடைய முடியுமா?

வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. ஆனால் மறுசீரமைப்புக்குப் பிறகு நாம் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை மீளச் செலுத்த ரூபாவைப் போன்று டொலர்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.

2023 செப்டெம்பர் மாத மளவில் மொத்தக் கடன் 91 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. இந்த கடன்களை செலுத்த நீண்ட காலம் அவசியப்படும்.  அதற்காக நாம் தேசிய மட்டத்தில் வருமானம் ஈட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் கடன் பிடிக்குள் சிக்கிக்கொள்வோம்.

கடன் மறுசீரமைப்பு காரணமாக வருடமொன்றிற்காக நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கடனில் சிக்கியிருக்க முடியாது. அதேபோல் கடன் பெறவும் முடியாது.

அதேபோல் எமது வரவு செலவுக்கு இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை பாரதூரமானது. இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும்.

1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் தொடர்ந்து கடன் வாங்கிவந்துள்ளோம். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியுள்ளோம். ஆட்சியாளர்களும் கடன் வாங்கப் பழகினர். மக்களும் இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு ஏற்றார்போல் இசைவாக்கமடைந்தனர். அரிசி இலவசமாக வழங்கப்படும், மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும், சம்பளம் அதிகரிக்கப்படும், இலட்சக்கணக்கில் அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவை கடன் பெற்று நிறைவேற்றப்பட்டன.இந்தக் கடன் மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும்.  கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபடாவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. எதிர்காலம் ஒன்று இல்லாமல் போகும்.

எனவே கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு நமக்கான வலுவான பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.

இவற்றை அடைவதற்கு ஏற்றுமதி வருமானத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் விரைவாக அதிகரிப்பது இன்றியமையாதது. அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம். போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க எதிர்பார்க்கிறோம்.ஊழலை  ஒழித்தல் மற்றும் சமூக நவீன மயமாக்கல் எ



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks