E   |   සි   |  

2024-01-24

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற பணியாட் தொகுதியின் சிரேஷ்ட உறுப்பினரான படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவை பாராளுமன்றத்தில் பாராட்டு

3பாராளுமன்றத்தின் கடந்த 42 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றி எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டி ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று (ஜன. 24) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டனர்.

பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் ஒருவர் ஓய்வுபெற்றுச் செல்லும்போது அவருடையை சேவையைப் பாராட்டும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இன்று (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து பி.ப 6.30 முதல் பி.ப 7.30 மணிவரை படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவையைப் பாராட்டுவதற்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவையைப் பாராட்டும் பிரேரணையை சபை முதல்வர்  அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த முன்வைத்தார். பாராளுமன்றத்திற்குள் வெள்ளம் புகுந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சபையைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை சபை முதல்வர் நினைவுகூர்ந்தார். தனது சேவைக் காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன், சக அதிகாரிகளை வழிநடத்தி, அவர்களுக்கு உரிய முறையில் பொறுப்புகளை வழங்கி ஆற்றிய பணி சிறப்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது. கொவிட் நிலைமை உட்பட பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அவர் ஆற்றிய சேவை அளப்பரியது என சபாநாயகர் தெரிவித்தார்.

நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டிய பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, மிகவும் ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றிய அவரது பணி என்றும் அழியாதது என்றும் கூறினார். செங்கோலைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பும் இங்கு பாராட்டப்பட்டது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட தனது கடைசிப் பாராளுமன்ற அமர்வு நாளான இன்றும் இருந்ததாகவும், அந்த அனைத்து சூழ்நிலைகளையும் அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் பிரதி சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டார்.

படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் காண்பித்த அர்ப்பணிப்பு சிறந்த உதாரணம் எனப் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த பாராளுமன்றத்தில் சேவையில் இணைந்துகொண்ட நரேந்திர பெர்னாந்து, தனது 42 வருட சேவையில் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். கொவிட் தொற்றுநோய் காலத்தில் பாராளுமன்ற விவகாரங்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கு அவர் செய்த தியாகம் மறக்க முடியாத சேவையாகும் என்று பிரதமர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்கள்  உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாத நெருக்கடி சூழ்நிலையின்போது பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்து அவர் ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் நரேந்திர பெர்னாண்டோ தனது சேவையின் போது பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறந்த சேவையை ஆற்றியவர் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மிகவும் நேரடியான மற்றும் மென்மையான பண்புகளுடன் நடுநிலையுடன் செயற்பட்ட அவரின் சேவை பாராட்டப்பட வேண்டியது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

படைக்கச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து பற்றிய சிறு அறிமுகம்

கொழும்பு வெள்ளவத்தையில் பிறந்த நரேந்திர மிஹிந்துகுமார பெர்னாந்து கொழும்பு இசிப்பத்தன கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று இந்தியாவில் மனித வள முகாமைத்துவத்தில் வர்த்தகப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்துள்ளார்.

பாராளுமன்றத்தின் உதவி ஹன்சார்ட் ஆசிரியராக இருந்த தனது தந்தையைத் தொடர்ந்து, பெர்னாந்து அவர்கள் 1981ஆம் ஆண்டில் பாராளுமன்றச் சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்டதுடன், 20 வருடங்கள் பாராளுமன்றத்தின் நிர்வாகத் திணைக்களத்திற்குச் சொந்தமான பல அலுவலகங்களில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு இவர் உதவிப் படைக்கலச் சேவிதராகப் பதிவி உயர்வு பெற்று 2002 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் பிரதிப் படைக்கச் சேவிதராக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தின் ஆறாவது படைக்கச் சேவிதராக நியமிக்கப்பட்டார்.

பெர்னாந்து பாராளுமன்றத்தின் படைக்கச் சேவிதராகத் தனது 5 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பாராளுமன்றத்தையும் அதன் அமைப்பையும் பாதுகாப்பதில் பல சவால்களை எதிர்கொண்டார். அவற்றில், 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது எதிர்கொள்ளப்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்தல், கொவிட் தொற்றுநோயின் போது இடையூறு இன்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை வழங்குதல்,  கடந்த போராட்டத்தின் போது பாராளுமன்ற வளாகத்தை பாதுகாத்தல், இதற்காக பாதுகாப்பு படையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தல், வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குள் இருந்து ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவது. , வரலாற்றில் முதன்முறையாக மாண்புமிகு ஜனாதிபதியின் பதவிப் பிரமாண விழாவை பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்தமை, செங்கோலைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

1992-2010 ஆண்டுகளில் பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை, 1987 பாராளுமன்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் அப்போதிருந்த கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்தமை மற்றும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற மாநாட்டை 1995 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளைக் கொழும்பில் நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் இவர் பிரதான அதிகாரியாகச் செயற்பட்டமை விசேட அம்சமாகும்.

அதுமட்டுமின்றி, வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான பலவீனங்களை நீக்கி பலமான பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்தவும் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து நடவடிக்கை எடுத்தார்.

நரேந்திர பெர்னாந்து துஷாந்தி பெர்னாந்துவை மணம்முடித்திருப்பதுடன், இவர்களுடைய புதல்வர் அனுஜ பெர்னாந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-11

புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.


2026-09-11

செப்டெம்பர் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை கௌரவ சபாநாயகர் அவர்கள் சபையில் அறிவிப்பார் என்பதற்கு உட்பட்டதாக, குறித்த இரண்டு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.


2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks