logo

E   |   සි   |  

2026-08-04

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று நிதிச் சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (04) சான்றுரைப்படுத்தினார்.

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக (14ஆம் உறுப்புரைக்கு) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதுடன், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம்  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி 2026.07.09 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக, பணம் தூயதாக்கலைத் தடுப்பதற்குத் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்பு வலுப்படுத்துவது, நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை வினைத்திறன்மிக்கதாக முன்னெடுப்பதும், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இலங்கையின் சட்டக் கட்டமைப்பை நவீனப்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கமைய, பணம் தூயதாக்கல் குற்றங்களின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல், அடிப்படைக் குற்றம் தொடர்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும் பணம் தூயதாக்கல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல், சந்தேகத்திற்கிடமான சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் செயன்முறையை வலுப்படுத்துதல் ஆகியன இத்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.
 
அத்துடன், தடுத்து வைக்கப்பட்ட சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அகற்றுதல், குற்றச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், விசாரணை அதிகாரங்களை விரிவுபடுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பணச் சலவை குற்றத்திற்கான தண்டனைகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான புதிய ஏற்பாடுகளும் இச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் இலங்கையில் பணம் தூயதாக்கதலைத், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது தொடர்பான சர்வதேச தரநிலைகளுடன் இணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன:

ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் உரிய கவனத்துடன் செயற்படுதல் தொடர்பான தேவைகளை முறைப்படுத்துதல்;

அறிக்கையிடும் நிறுவனங்களுக்கான பொறுப்புகளின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல்;

•    தற்போது நடைமுறையில் உள்ள ஏதேனும் எழுத்துமூல சட்டங்களுக்கு உட்பட்டு, மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களை 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடுதல் சட்டத்தில் உள்ள “நிதி வணிகம்” என்ற வரைவிலக்கணத்திற்குள் உள்ளடக்குதல்;

•    நிதிப் புலனாய்வுப் பிரிவை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் பொறுப்புகளை வலுப்படுத்துதல்;

•    பரிவர்த்தனைகளை இடைநிறுத்துவதற்கான உத்தரவுகளின் காலத்தை ஏழு நாட்களிலிருந்து 14 வேலை நாட்களாக நீடித்தல்;

•    அறிக்கையிடும் நிறுவனங்களின் இணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நிர்வாகத் தண்டனைகளை விரிவுபடுத்துதல்;

•    பணம் தூயதாக்கல் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது தொடர்பான தேசியக் குழுவை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்;

•    பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இலக்கிடப்பட்ட நிதித் தடைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதை மேம்படுத்துதல்;

•    சட்டத்தின் தெளிவை மேம்படுத்துவதற்காக புதிய வரைவிலக்கணங்களை அறிமுகப்படுத்துதல்;

•    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகளை அறிக்கையிடுதல் சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் திருத்துதல் ஆகியன அடங்குகின்றன.

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் 

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலத்தின்  மூலம், 2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குவதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திருத்தங்களின் மூலம், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான இலங்கையின் சட்ட நடவடிக்கைகள் சர்வதேச தரநிலைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயங்களுக்கு அமைவாக மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. அத்துடன், எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்குத் தயாராகுவதற்கும் இது உதவியாக அமையும்.

இதன் மூலம் இலங்கையின் நிதி முறைமையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கை செயலணியின் (Financial Action Task Force – FATF) கட்டமைப்பின் கீழ் இலங்கை நிறைவேற்ற வேண்டிய சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துதல் ஆகியன சாத்தியமாகும்.

இதற்கமைய, பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலங்கள் முறையே, 2026ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமாகவும், 2026ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமாகவும், மற்றும் 2026ஆம் ஆண்டின் 18ஆம் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமாகவும் அமுலுக்கு வருகின்றன.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks