logo

E   |   සි   |  

2026-07-24

செய்தி வகைகள் : செய்திகள் 

பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கௌரவ கீ சென்ஹொங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஜுலை 23) சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு பல்வேறு துறைகளில் சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் அசைக்க முடியாத நட்பும் ஆதரவும் காரணமாக, கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் மதிப்பையும் அன்பையும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வென்றிருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில், தூதுவரின் மதிப்புமிக்க சேவைக்கும் இலங்கை–சீனா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கும் கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், இனவாதம் அல்லது பாகுபாட்டிற்கு எந்தவித இடமும் இல்லாத வகையில் செயல்படுவதற்கும், அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் முழுவதும் தனக்கும் தூதரகத்திற்கும் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக, இலங்கையின் போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் கௌரவ சபாநாயகர் கோரினார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து சீனத் தூதுவருக்கு, கௌரவ சபாநாயக அவர்கள் மதியபோசன விருந்துபசாரமொன்றை வழங்கினார். அதன் பின்னர், தூதுவரும் அவரது குழுவினரும் சபாநாயகரின் கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிட்டனர். 

அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், கௌரவ சீனத் தூதுவரையும் அவரது குழுவினரையும் சபையின் சார்பில் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீனத் தூதுவரின் துணைவியார் ஜின் குயின், அமைச்சு ஆலோசகரும் பிரதி சீனத் தூதுவருமான சூ யான்வேய் மற்றும் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சாங் லுடிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks