பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-16
செய்தி வகைகள் : செய்திகள்
கொரியா குடியரசின் (தென்கொரியா) இலங்கைத் தூதுவர் மண்புமிகு மியூன் லீ அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (ஜூலை 10) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.
தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், இலங்கைக்கும் கொரியா குடியரசிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன், இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது கொரியா குடியரசு வழங்கிய ஆதரவிற்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, கொரியா குடியரசில் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, அமைதியானதும் முதலீட்டிற்கு உகந்ததுமான சூழலை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், நாட்டில் உருவாகி வரும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தென்கொரியத் தூதுவர் மாண்புமிகு மியூன் லீ அவர்கள், பல்வேறு துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க கொரியா குடியரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். மேலும், இலங்கையின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளதை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த முக்கிய மைல்கல் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார். இதனையொட்டி, ஆண்டு முழுவதும் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் கொரியா குடியரசின் அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணிகள் தொடர்பாகவும் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்ற இச்சந்திப்பின் நிறைவில், நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் பரஸ்பர அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
2026-07-16
நியாயமான அடிப்படை இன்றி தன்னிச்சையாக பொருட்களின் விலையை நிர்ணயித்து நுகர்வோரை பாதிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நாடு முழுவதும் 272 விசாரணை அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை அதிகாரிகள் மாவட்ட செயலகங்களுடன் இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் தங்களது அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நுகர்வோரை அநியாயத்திற்கு உள்ளாக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ருவன் திலக ஜயகொடி வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கௌரவ வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.நியாயமற்ற விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல்முறை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடம் உள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. அவற்றை நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை இத்தகைய மீறல்களுக்கு எதிராக கணிசமான அளவு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தினசரி சந்தை ஆய்வுகளையும், பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனுடன், கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் விசேட மேற்பார்வைத் திட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-07-16
முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை, சிறுவர் பாதுகாப்பு, பௌதீக ரீதியான தண்டனை, அது தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நேர்மறை ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் (முன்பள்ளிக் கல்வி) கே.டி.டி. விமலசிறி விளக்கமளித்தார். முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர் கையேடும் மாதிரி செயற்பாட்டு நூலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக 108 பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களின் மூலம் மாகாண மட்டத்தில் மேலும் 556 பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.அத்துடன், முன்பள்ளிகளுக்கான மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், அடுத்த ஆண்டுக்குள் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை சட்டமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தேசியக் கொள்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க, குறித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாரச்சி ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்கு, பௌதீக ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள், அவ்வாறான தண்டனைகளால் சிறுவர் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தண்டனையை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்திற்கு மாற்றாக ‘நேர்மறை ஒழுக்கத்தை’ சிறுவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் உடல் தண்டனைகளையும் தடுக்கும் நோக்கில் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்துவதன் மூலம் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை, சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேசப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சட்டத் திருத்தங்கள் எந்தவொரு தரப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
2026-07-15
இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் ஊடாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கருவியாக விளங்குகின்றன என்று தெரிவித்தார். இவை, இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து, அனுபவ மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றங்களுக்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்தக் கூட்டம் பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயற்பாடுகளின் ஆரம்பத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாகவும், 1994 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ஜனநாயகம், சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இச்சங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்ச்சியான உரையாடல்களையும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். அரசியல் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பும் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக அமைந்தது. விவசாயம், சுரங்கத் தொழில், சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், எக்ஸ்போ 2027 வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தையும் தென்னாப்பிரிக்கத் தரப்பினர் முன்வைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விளையாட்டு உறவுகளை கருத்திற்கொண்டு, கிரிக்கெட் மற்றும் ரக்பி ஊடாக விளையாட்டு அடிப்படையிலான இராஜதந்திரத்தை மேம்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பல்கலைக்கழக கூட்டாண்மைகள், புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.இலங்கையின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் நன்றியுரையாற்றினார்.
2026-07-15
சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், இலங்கையின் தேயிலைத் தொழில்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்ட "சிலோன் டீ வில்லேஜ்" (Ceylon Tea Village) எனும் 500 தேயிலை கிராமங்கள் திட்டம் ஜூலை 15 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.தேயிலைத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2030 ஆம் ஆண்டுக்குள் வருடாந்த தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாக உயர்த்துவது அரசின் இலக்காகும். தற்போது இது சுமார் 264 மில்லியன் கிலோகிராம் ஆக உள்ளது. மேலும், கடந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியிலிருந்து கிடைத்த அமெரிக்க டொலர் 1.5 பில்லியன் வருவாயை 2030 ஆம் ஆண்டளவில் அமெரிக்க டொலர் 2.5 பில்லியனாக உயர்த்தவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுஜீவ திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார். தற்போது இயங்கிவரும் சிறு தேயிலைத் தோட்டக் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக, இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் "சிலோன் டீ வில்லேஜ்" திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன் தேசிய ஆரம் விழா நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறவுள்ளது. இதனுடன் இணைந்து, பங்கேற்கும் 11 மாவட்டங்களிலும் தனித்தனியான தொடக்க நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது இலங்கையில் சுமார் 418,000 சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்களின் உழைப்பு பல இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதோடு, தேசிய பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.2030 ஆம் ஆண்டளவில் அமெரிக்க டொலர் 2.5 பில்லியன் தேயிலை ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதில் சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியின் சுமார் 75 சதவீதத்தை அவர்கள் வழங்குகின்றனர்.இந்த "சிலோன் டீ வில்லேஜ்" திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், பச்சைத் தேயிலை இலை உற்பத்தியை அதிகரித்தல், பச்சை இலைகளுக்கு நியாயமான மற்றும் உயர்ந்த விலையை உறுதி செய்தல், மேலும் அவர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துதல் என்பனவாகும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks