logo

E   |   සි   |  

2026-07-16

செய்தி வகைகள் : செய்திகள் 

முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை, சிறுவர் பாதுகாப்பு, பௌதீக ரீதியான தண்டனை, அது தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நேர்மறை ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.


கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


இங்கு, முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் (முன்பள்ளிக் கல்வி) கே.டி.டி. விமலசிறி விளக்கமளித்தார். முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர் கையேடும் மாதிரி செயற்பாட்டு நூலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக 108 பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களின் மூலம் மாகாண மட்டத்தில் மேலும் 556 பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், முன்பள்ளிகளுக்கான மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், அடுத்த ஆண்டுக்குள் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை சட்டமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த தேசியக் கொள்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க, குறித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாரச்சி ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்கு, பௌதீக ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள், அவ்வாறான தண்டனைகளால் சிறுவர் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தண்டனையை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்திற்கு மாற்றாக ‘நேர்மறை ஒழுக்கத்தை’ சிறுவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.


இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் உடல் தண்டனைகளையும் தடுக்கும் நோக்கில் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்துவதன் மூலம் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை, சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேசப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சட்டத் திருத்தங்கள் எந்தவொரு தரப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


இந்நிகழ்ச்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.




தொடர்புடைய செய்திகள்

2026-08-19

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.08.19

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஆக. 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2026-08-18

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

விலங்குகள் (திருத்தம்) மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (18) சான்றுரைப்படுத்தினார்.1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் 2026.07.21 திகதியன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026.08.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பிரதான சட்டத்தின் 38ஆம் பிரிவில் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். மேலும், “ஒரு விலங்கு” என்பதற்கான வரைவிலக்கணத்தை மீள வரையறுப்பதன் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் இந்தச் சட்டத்தின் IIஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், சட்டத்தின் IVஆம் பகுதிக்குப் பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளடங்கும் வகையில் வரைவிலக்கணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைமச்சரினால் 2026.07.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.08.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் நவீனமயப்படுத்தப்பட்டு, நீர் வழங்கல், வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் வலுப்படுத்தப்படுகின்றன.கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் உள்ளடக்கும் வகையில் அதன் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பயனுள்ளதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சி சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.


2026-08-18

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று (ஆக. 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதற்கு அமைய, இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை சவாலுக்கு உட்படுத்த எவராவது விரும்பினால், இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் குறித்த விடயத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தி 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அத்துடன், நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைசட் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்) முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக மேல் நீதிமன்ற, மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2026-08-17

சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில், இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்போது, சட்டவாக்கச் செயன்முறை, பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கேள்வி – பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பாராளுமன்ற சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்தை பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) எம். ஜயலத் பெரேரா, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks