2026-05-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-06
2025 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் அரசாங்க நிதி செயல்திறன், அரசாங்கத்தின் வருமான சேகரிப்பு, அரசாங்க செலவின முகாமைத்துவம், அரசாங்கத்தின் கடன் நிலைமை மற்றும் கொள்கை ரீதியான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, திலின சமரகோன், நிமல் பலிஹேன, எம்.கே.எம். அஸ்லம், அஜித் அகலகட, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இணைந்துகொண்டார்.2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் ஈட்டல் மதிப்பிடப்பட்ட இலக்குகளை மீறி சாதனை முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவை தங்களது வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர். அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் வருவாய் சேகரிப்பு எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.அரசாங்கத்தின் செலவினங்கள் குறித்து ஆராயப்பட்டபோது, சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள், சுகாதாரத் துறைக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஓய்வூதியத் திட்டத்தின் நீண்டகால நிதி நிலைத்தன்மை தொடர்பில் கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குழு வலியுறுத்தியது. அதேவேளை, மூலதனச் செலவினங்களின் கீழ் வீதி அபிவிருத்திக்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.பொதுப் படுகடன் முகாமைத்துவம், கடன் சேவைச் செலவுகள், வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் வட்டி விகிதங்களின் தாக்கம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.மதுவரித் திணைக்களத்தின் டிஜிட்டல் ஸ்டிக்கர் திட்டத்தின் செலவினம் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்கால கொள்முதல் நடைமுறைகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் செலவுத் திறனை உறுதிப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2025–2026 காலப்பகுதிக்கான முன்னேற்றமும் ஆராயப்பட்டது. இதன்போது RAMIS முறைமையை மேலும் மேம்படுத்துதல், வரி செலுத்துவோருக்காக பயனாளர்களுக்கு நட்பான இணையத்தளத்தையும் கையடக்கத் தொலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கை சுங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகனங்களுக்கான கடன் உறுதிப்படுத்தல் கடிதங்களை திறப்பதில் காணப்படும் எல்லை தாண்டிய விதிமுறைகள் ஏற்பட்டதன் காரணமாக, இன்னும் விடுவிக்கப்படாத பல வாகனங்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. எனவே, தாமதக் கட்டணங்களை அறவிட்டு அல்லது பொருத்தமான தீர்வொன்றை வகுத்து, அவ்வாகனங்களை விரைவாக துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு வலியுறுத்தியது.வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகளவான வரிகள் தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மின்சார மற்றும் கலப்பு வலுசக்தி வாகனங்களுக்கு அவற்றின் விலையை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பதன் மூலம் வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மேலும், இவ்வகை வாகனங்களின் எரிபொருள் திறனையும் வரிக் கொள்கைகளை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.அரச வருவாய் வளர்ச்சி நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், ஓய்வூதியச் செலவுகள், அரச கடன் மற்றும் தொடர்ச்சியான மீண்டெழும் செலவினங்களைக் கட்டுப்படுத்த நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என குழு வலியுறுத்தியது. மேலும், அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் இலத்திரனியல் மயமாக்கலை மேலும் வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.
2026-07-06
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியிருந்தபோதும் அதன்பின்னரான நிபமனங்கள் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை, மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.தென் மாகாணத்தில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதே தேர்வின் அடிப்படையில் மேலும் 704 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டிருந்தன. எனினும், 2025 ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து ஆட்சேர்ப்புகளும் நிறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் கலந்துகொண்ட பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சு மற்றும் தென் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தெற்கு மாகாணத்தில் இதுவரை 1417 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் 2023 போட்டிப் பரீட்சைக்குப் பின்னர் இரண்டு போட்டிப் பரீட்சைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.704 வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ளப் பல தடவைகள் தனியான அனுமதிகளைக் கோரிய போதும், அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி இடம்பெற்ற நீண்ட நேரக் கலந்துரையாடலின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழு, இதுபற்றிய பரிந்துரைகளை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன்படி எதிர்காலத்தில் இதுபற்றி மேலும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.போட்டிப் பரீட்சையின்றி கல்வியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாதது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்வியியல் பட்டதாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது. அரசாங்க அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இப்பிரச்சினை தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவ்விடயத்தை மீண்டும் ஆராய எதிர்பார்ப்பதாகவும் குழு அறிவித்தது.மேலும், 2008/2009-ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட பாடசாலை ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் பாடசாலைப் பாதுகாவலர்களுக்கான சம்பள உயர்வுகளை 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயம் குறித்தும் குழு கலந்துரையாடியது. அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அக்குழுவின் பிரதிநிதிகளும் குழுவிற்கு வரவழைக்கப்பட்டனர்.2008/2009-ல் அவர்கள் நியமிக்கப்பட்டபோது தெற்கு மாகாண சபை தவறான சம்பள விகிதத்தை நிர்ணயித்திருந்தமையே 2018 முதல் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டமைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்புதலை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊழியர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய குறித்த விடயத்தில் தங்களால் இயன்ற மிகவும் நியாயமான ஒரு முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதற்கேற்ப ஒரு நியாயமான தீர்வை வழங்கத் தாங்கள் தலையிடுவோம் என்றும் தெற்கு மாகாண கல்வி அமைச்சிற்குக் குழு வலியுறுத்தியது.அதனைத் தொடர்ந்து, குழு உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் குழுவிற்குத் தலைமையேற்று நடத்திச் சென்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிந்தைய பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பின்முகாமைத்துவ பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், மற்றும் இலங்கை-ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வி.ராதாகிருஷ்ணன், அபுபக்கர் ஆதம்பாவா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகு, சுகத் வசந்த.தசில்வா, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-03
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கூடியதுடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்தக்கூடிய மாற்று தேர்தல் முறைகள் குறித்து இங்கு விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பழைய விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் பட்சத்தில், வேட்பாளர் பட்டியல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குதல், தொகுதி எல்லை நிர்ணயத்துடன் தொடர்புடைய சட்டரீதியான தடைகளை நீக்கி கலப்பு தேர்தல் முறைக்கு மாறுதல், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.மேலும், வேட்பாளர் பட்டியல் மட்டத்தில் மட்டுமன்றி, சபையின் மொத்த அமைப்பிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் சட்டரீதியாக உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் கவனம் செலுத்தியது. அதன்படி, சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதற்கான நடைமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.விருப்பு வாக்கு முறையின் கீழ் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள், தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் சர்வதேச அனுபவங்களும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. அதேவேளை, தேர்தல் முறையின் ஊடாக இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.மேலும், மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கருத்துக்கள், விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையையும் பரிந்துரைகளையும் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.
2026-07-01
இயலாமையுடைய நபர்களுக்கான விசேட கல்வி மற்றும் விசேட பாடசாலைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இத்துறையில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிய இடம்பெற்றதுடன், இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறையின் போது விசேட கல்வித் துறையும் பிரதான அங்கமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைமையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.அத்துடன், விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் தொழில்சார் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், பாடத்திட்ட மேம்பாடு, விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.விசேட கல்விக்கான துறையில் நடைமுறை அனுபவமுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும் எதிர்கால கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது கருத்திற்கொள்ளப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் விசேட பாடசாலைகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், இயலாமையுடைய நபர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் திலக் தர்மரத்ன, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் அதிகாரிகள், இயலாமையுடைய மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் நிர்வாகிககள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.