பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-16
பொது மனுக்கள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.காமினி ரத்னாயக்க அவர்களினால் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பொது மக்களுக்கள் பற்றிய குழுவில் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொது மனுக்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் குழுவின் கண்காணிப்புக்களை உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 125 (5) இற்கு அமைவாக இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த காலப் பகுதியில் பொது மனுக்கள் பற்றிய குழு 15 அமர்வுகளை நடத்தியிருப்பதுடன், 89 பொது மனுக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இவற்றில் 43 பொது மனுக்கள் பற்றிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், 33 மனுக்களுக்கான நிவாரணங்கள் இதில் பரிந்துரைக்கப்படவில்லையென்பதுடன், 13 மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குழுவினால் கவனத்தில் எடுக்கப்பட்ட 89 மனுக்கள் தொடர்பான விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழு பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 (5) ற்கு அமைவாக அதன் முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகளை முறையே (பாராளுமன்ற வெளியீடு இலக்கம் 250 மற்றும் 390) 2025 ஓகஸ்ட் 7ஆம் திகதி மற்றும் 2025 டிசம்பர் 5ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
2026-06-12
பிரான்ஸிற்கான புதிய இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஆகிய பதவிகளுக்கான நியமனத்திற்கு அண்மையில் (ஜுன் 10) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய பிரான்ஸ் குடியரசிற்கான இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு ஒழுங்கமைப்பிற்கான (யுனெஸ்கோ) இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பி.ஆர்.எஸ்.எஸ்.குணரத்ன அவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் கௌரவ அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஸாட் பதியுதீன், குமார ஜயக்கொடி, கதிரவேல் சண்முகம் குகதாசன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-06-11
பொதுப் படுகடன் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியிடம் காணப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமற்போனமை தொடர்பாக, நிதி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்காக அக்குழு அண்மையில் (ஜுன் 08) பாராளுமன்றத்தில் கூடியது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுக்கூட்டத்தில், கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிரி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.இக்கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை கணினி அவசர தாயார்நிலைக் குழுவின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வறிக்கையைப் பரிசீலித்த பின்னர் இது தொடர்பிலான தங்களது பிறிதொரு அறிக்கையையும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, இவ்விரு அறிக்கைகளையும் பரிசீலித்த பின்னர் இறுதி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.
2026-06-09
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (COPA) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றைய தினம் (ஜுன் 09) வழங்கப்பட்டது.இந்த அறிக்கை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இது 2025 ஜூலை 25 ஆம் திகதி வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 இன் கீழ் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, தொடர்புடைய அறிக்கை நிதி அமைச்சரினதும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் அவதானிப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவ்வமைச்சர்களின் பதில்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், 2026 மார்ச் 04 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இவ்விடயங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.அதன்போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய, “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, 2025 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 ஐக் கொண்ட அறிக்கை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்” எனும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையொன்று, இதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குமாக இவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இத்தகையதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks