04

E   |   සි   |  

2026-02-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

  • போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன


மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

(203 அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2463/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி உரிமை அறவீடு தொடர்பான ஒழுங்குவிதியை திருத்துவதற்கும், 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான ஒழுங்குவிதி என்பவற்றுக்கு குழு அனுமதி வழங்கியது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கூடியபோதே இந்த ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர். 

போக்குவரத்துத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.

முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எச்.எம்.தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார். தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள்,  மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), ஆகியோருக்கான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models)  உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார். 

உப குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்து  அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

அதேநேரம், போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய குறைபாடுகள் குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.  இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-02-20

இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி கௌரவ பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர். மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார்.அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-02-20

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நாட்டின் இளைஞர்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கொள்கை மற்றும் எண்ணக்கரு ரீதியான விடயங்களை ஒன்றியத்தின் ஊடாக விருத்தி செய்து அவற்றை அரச துறையிலுள்ள பொறிமுறைகள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையை ஒன்றியத்தின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.  இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, உத்தேச கொள்கை வரைபு தொடர்பில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், இளைஞர்களுடன் தொடர்புபட்ட சட்டங்களுக்கு மறுசீரமைப்புகளை பரிந்துரைத்தல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் இளைஞர்களுக்கான சர்வதேச ஒன்றியங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷன கமகே மற்றும் தனுர திசாநாயக உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-02-19

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விஜயம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் (ITI), வசதிகள் மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.சமூகத்தில் குறித்த நிறுவனத்தின் வகிபாகம் மற்றும் அதன் நிலைமை குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இந்த நிறுவனம் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஆராய்ந்து மேம்படுத்தலை ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இது நாட்டில் மிக உயர்ந்த அளவிலான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாகும். கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் காணப்படும் சான்றளிப்பு (Accreditation) மற்றும் சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தனித்துவமான தொழில்நுட்ப திறன்கள், விசேட பரிசோதனை சேவைகள் மற்றும் அதற்கான வசதிகள், நிலக்கரி மாதிரிகளை பரிசோதிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், உராய்வுநீக்கி எண்ணெய் பரிசோதனைக் கூடத்தின் திறமையின்மை போன்ற விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளும், பரிசோதனை சேவைகளை வழங்கும் 7 பிரிவுகளும் செயற்படுவதுடன், இவற்றில் மருந்துகள், மூலப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள், நுண்ணுயிரியல் பரிசோதனை, அளவுத்திருத்தம், மின்னியல் தொழில்நுட்பம், எச்சங்கள் தொடர்பான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றமை இவ்விஜயத்தின் போது தெரியவந்தது.சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது, கைத்தொழில்களுக்குத் தேவையான தொழிற்சாலை வடிவமைப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.சான்றழிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய காரணி சான்றளிப்பு என்றும்,  இந்நிறுவனம் ISO 17025 (2017) சர்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது என்பதும்  தெரியவந்தது.ஆரம்பத்தில் சுவீடனில் உள்ள SWEDAC நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தபோதும், 2013ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை (SLAB) மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், மேலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1035 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட அளவுருக்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. ITI நிறுவனம் தேசிய அளவில் முக்கியமான பல பரிசோதனைகளை நடத்துவதுடன், உணவு, நீர் (ஆர்சனிக் போன்றவை), மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்கு அண்மையில் ரூ.143 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் இந்த விஜயத்தின் போது தெரியவந்தது.அத்துடன், நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒலிப் பரிசோதனை மற்றும் ஒலி வடிவமைப்பை உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலிப்பதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆறு மாத காலங்களுக்கு ரூ 32 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ITI நிறுவனத்தின் அதிகாரிகள், சுமார் ரூ. 350 மில்லியன் ஆரம்ப மூலதன முதலீட்டில் (14 உபகரணங்கள் உட்பட) இந்தப் பரிசீலனளை வசதியை  அங்கீகாரத்துடன் உள்நாட்டிலேயே நிறுவ முடியும் என்று தெரிவித்தனர்.நுரைச்சோலை பரிசோதனை கூடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்பதால் அதன் அறிக்கை சர்வதேச அளவிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இது ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு பரிசோதனைகூடம் அல்ல என்பது ஒரு பிரச்சனை என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.மருந்துகள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை கூடத்தின் திறமையின்மை காரணமாக நிறுவனம் ஏற்கனவே ஏராளமான கணக்காய்வு விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றும், அரசாங்க நிதியில் நிறுவப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்தாமை சிக்கலுக்குரிய விடயம் என்றும், இந்த ஆய்வுகூடங்கள் அரசாங்க பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டன என்றும் தெரியவந்தது.2019 ஆம் ஆண்டு ரூ.99 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட மருந்துப் பரிசோதனை கூடம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமையால் செயற்படமுடியாத நிலையில் உள்ளது என்றும், 2017-2020 ஆம் ஆண்டில் ரூ.117 மில்லியன் செலவில் பெட்ரோலியம் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை ஆய்வகம் கட்டப்பட்ட போதிலும், எண்ணெய் மாதிரிகளைப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால் அதை முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.மருந்து சோதனையின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒழுங்குமுறை நிறுவனங்களே சோதனைகளை நடத்துகின்றன, "ஒழுங்குபடுத்துபவரும் புலனாய்வாளரும் பிரிக்கப்பட வேண்டும்" என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை புறக்கணிப்பதால் அக்கறைகளின் முரண்பாடு உள்ளது என்பதும் தெரியவந்தது.அரசாங்க பரிசோதனைகளுக்கு ITI போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன அரச நிறுவனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.இந்த விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொடவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks