பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-11-07
செய்தி வகைகள் : செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.
புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
2026-01-27
மனித-வனவிலங்கு சகவாழ்வு தொடர்பில் பொட்ஸ்வானாவின் காபரோனில் 2026 ஜனவரி 19 முதல் 21 வரை நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் பொட்ஸ்வானா, ஏனைய ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு அழுத்தம், வாழ்விட இழப்பு மற்றும் சனத்தொகை மாற்றங்கள் ஆகியவற்றால் தீவிரமடைந்து வரும் ஒரு சமூக-சுற்றுச்சூழல் சவாலான மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்து இந்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் நிலையான சகவாழ்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கை அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் இதில் ஒன்றிணைந்தனர்.சுற்றாடல் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், குறிப்பாக மனித-யானை மோதல் சவாலை எதிர்கொள்வதில் இலங்கையின் தேசிய கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கை அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.2026 ஜனவரி 19 ஆம் திகதி, 'மனித-வனவிலங்கு சகவாழ்வு: மோதலுக்கான முக்கிய தூண்டுதல்கள் மற்றும் காரணிகள்' என்ற அமர்வில் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி உரையாற்றினார். இதன்போது, மனித-யானை மோதலை முகாமைத்துவம் செய்வதில் இலங்கையின் விரிவான அனுபவத்தை விவரித்த அவர், எதிர்வினையாற்றும் குறுகிய கால தீர்வுகளில் இருந்து விரிவான மற்றும் முன்னோக்கிய கொள்கை மற்றும் சட்ட ரீதியான தீர்வுகளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வனவிலங்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு நிலையான அணுகுமுறையாக நிர்வகிக்கப்பட்ட யானை வலயங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட வலயங்களை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆராய்ச்சி அடிப்படையிலான கொள்கை மேம்பாடு, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.2026 ஜனவரி 20 ஆம் திகதி, 'மனித நடவடிக்கைகளில் வனவிலங்கு தாக்க முகாமைத்துவம்: சமூகம் சார்ந்த இயற்கை வள முகாமைத்துவ மற்றும் நலப்பகிர்வு மாதிரிகள்' என்ற அமர்வில் கௌரவ கின்ஸ் நெல்சன் உரையாற்றினார். இலங்கையில், குறிப்பாக மனித-யானை மோதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து அவரது உரையில் கவனம் செலுத்தப்பட்டது. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் வெற்றிகரமான சகவாழ்வை அடைவதற்கு அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு, நியாயமான நலப்பகிர்வு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதாரத் தேவைகளுடன் பாதுகாப்பு நோக்கங்களை சமநிலைப்படுத்தும், சமூகத்தை மையமாகக் கொண்ட கொள்கைகள், உள்ளூர் ஆட்சி பொறிமுறைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.இந்தக் கலந்துரையாடல்களில், செயலூக்கமான கொள்கை மற்றும் சட்டங்கள், சமூக வலுவூட்டல், இழப்பீடு மற்றும் காப்பீட்டு பொறிமுறைகள் ஊடான பொருளாதார பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கொள்கை புத்தாக்கம் மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் மனித-யானை மோதலைத் தீர்ப்பதில் இலங்கையின் அனுபவங்கள் சர்வதேச பாராளுமன்ற உரையாடலுக்கு வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பங்களிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டன.மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த சர்வதேச பாராளுமன்ற மாநாடு 2026 ஜனவரி 21 ஆம் திகதி நிறைவடைந்தது. நிலையான மற்றும் அமைதியான மனித-வனவிலங்கு சகவாழ்வை மேம்படுத்துவதில் சட்டமன்றங்களின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய பாராளுமன்ற பரிந்துரைகள் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டன.
2026-01-26
தொழில்முயற்சியாளரின் பிணையில்லாமல் கடன் பெறும் முறைமை மற்றும் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.பொருளாதார அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.நிதி அணுகலுக்கான பிரதான தடைகளாக உள்ள அதிக வட்டி வீதங்கள் மற்றும் பிணையில்லாமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதிக வட்டி வீதங்களுக்கான தீர்வாக அரசாங்க அல்லது அபிவிருத்திப் பங்காளிகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மறுநிதியளிப்புக் கடன் திட்டங்களை (Re-financing loans) அறிமுகப்படுத்துதல் மற்றும் வட்டி மானியம் (Interests subsidy loans) வழங்கப்படும் கடன் திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்காக 95,686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கமைய, தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழிற்படு மூலதனக் கடன்களை (Working capital loans) வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16 முதல் 3 அரச வங்கிகள் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் தற்போது இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 0 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி வீதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி 2026 ஆம் ஆண்டிற்காக 10,000 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை 5 சதவீத வட்டி வீதத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற முடியும் என்றும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும் கடன் பெறும் போது தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிணைகளைச் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வாக நிறுவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கடன் உத்தரவாத நிறுவனம் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட கடன் தொகையில் 67 சதவீதத்திற்குப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 80 சதவீதப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். ஒரு தொழில்முயற்சியாளர் பெறும் கடன் தொகையில் 67 சதவீதத்திற்கு மட்டுமே பிணை கிடைப்பதால், எஞ்சிய 33 சதவீதத்திற்குப் பிணை இல்லாதது நடைமுறை ரீதியாக ஒரு சிக்கலாக இருப்பதால், அது குறித்து அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.அதேபோன்று இந்தக் கடன்களைப் பெறும்போதும் பிணைகள் குறித்தும் சரியான முறைமை மற்றும் தகவல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இன்னும் முறையாகச் சென்றடையவில்லை என்பது ஒரு சிக்கல் என்றும், அதைச் சரியாகத் தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.விவசாயச் சமூகத்தின் வாழ்வாதார நிலைமையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும் கடன் வசதிகளை வழங்குவது பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன் கீழ் 50 இலட்சம் ரூபா கடன் தொகை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் ஏனைய கடன் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அவை தொடர்பாக உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தில் அமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோன்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷ மற்றும் அதிகாரிகள் குழுவொன்றும், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உட்பட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-01-26
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஜீஸ் அவர்கள், இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதையின் நிமித்தம் அண்மையில் (ஜன. 22) சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.இந்தச் சந்திப்பின் போது, தனது பதவிக்காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக உயர்ஸ்தானிகர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், தனது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து சபாநாயகரிடம் விளக்கினார். மக்களின் நலனுக்காகவும், அண்மைய பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்காகவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட முயற்சிகளை கௌரவ சபாநாயகர் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை நினைவு கூர்ந்த கௌரவ சபாநாயகர், தேவையான தருணங்களில் குறிப்பாக சர்வதேச அரங்குகளில் மற்றும் 30 ஆண்டு கால யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஆதரவிற்காக இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார்.அத்துடன், புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக உயர்கல்வி, விவசாய ஒத்துழைப்பு மற்றும் கால்நடைத் தொழில் தொடர்பான தொழில்நுட்பப் பகிர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2026-01-23
பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதற்கமைய, பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் மூன்று தினங்களும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் 2396/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 5ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் ஏற்கனவே முதலாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் உரிமமளித்தல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பிட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிடின் இவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதமும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ் காணப்படும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணைகள்கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிதேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவுப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்பினை வழங்குதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்காக நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்கௌரவ லால் பிரேமநாத்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்கௌரவ ரோஹண பண்டாரபேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ நலின் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்கௌரவ ரவீந்திர பண்டாரபைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அரசியலமைப்புப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்அல்லாத உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், அரசியலமைப்பின் 41 அ (4) மற்றும் (5) யாப்புகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரின் பெயர்களடங்கிய பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சபையின் விசேட அனுமதியுடன் இன்றையதினமே (23) பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks