பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-09-02
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுர அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு அமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஏற்றுதி அபிவிருத்தி சபையின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, பி.சி.சி இலங்கை லிமிடட் நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, தேசிய உப்பு நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை போன்றவை இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.
இக்குழுக் கூட்டத்தில் நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளின் படி முதலீட்டாளர்களுக்குக் காணிகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு அமைய, புதிய தொழில்களுக்கு ஒரு முதலீட்டாளருக்குக் காணிகளை வழங்க 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு ஏற்ற காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமல், அரசியல் அல்லது வேறு காரணங்களால் பல்வேறு சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் எழுந்துள்ளது என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனவே, நாடு முழுவதிலும் உள்ள கைத்தொழில்களுக்கு ஏற்ற வகையில் 50,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைய, இது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபணரங்கள் அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனம் ஆகியவற்றை ஒன்நிணைக்கத் தீர்மானித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தற்போதைய செயல்திறன் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து அதனை மேம்படுத்துவதற்காக உள்ள ஒரேயொரு நிறுவனம் இது என்றும், ஆடைகள், தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள், தகவல் தொழில்நுட்பம், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிகள் குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட அமெரிக்காவின் வரிக் கொள்கையை முறையாக நிர்வகிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடிந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்றும், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 15 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2028 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய உப்பு நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால், கடந்த காலங்களில் இயற்கை உப்பு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பி.சி.சி லங்கா லிமிடட் நிறுவனம் உயர் மட்டத்திலான தேங்காய் எண்ணெய்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் என்பதுடன், 192 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த நிறுவனத்திற்கு தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லையென அதன் தற்போதைய தலைவர் குழுவில் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையால் பல ஏற்றுமதி வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, SLS மற்றும் ISO உள்ளிட்ட தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்குழுக் கூட்டத்தில் அதன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சட்டத்தரணி சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, கந்தசாமி பிரபு, விஜேசிரி பஸ்நாயக்க, சுரங்க ரத்நாயக்க, திலிண சமரகோன் ஆகியோரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-16
இலங்கை மின்சார சபைக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம்நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (டிச. 11) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், புகையிரதப் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார். அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல், ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடன் தொகையாக அந்த நிதியைப் பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்தத் தொகையை மானியமாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை அவர்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவுவில் தெரிவித்தனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத் தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, அஜித் பி. பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
2025-12-09
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டன.குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.இதற்கு அமைய, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்களுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கைகள் ஆராயப்பட்டன.அத்துடன், பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வது மற்றும் அதிபர்களைச் சேவையில் இணைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ரோஹினி குமாரி விஜேரத்ன, அபூபக்கர் ஆதம்பாவா, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்டோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-09
2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆராய்வதற்கு குழுவின் விசேட கூட்டம்2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் மற்றும் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 2025 டிசம்பர் 03ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது.இக்கூட்டம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஒழுங்குவிதி குறித்து கலந்துரையாடிய குழு, மருந்துகளைப் பதிவுசெய்யும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவுத் தன்மை என்பனவற்றை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் குறித்தும் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இத்திட்டத்திற்கு அமைய 2026ஆம் ஆண்டில் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது, 3,484 நிதிக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள், 1 சுற்றாடல் கணக்காய்வு, 12 விசேட கணக்காய்வுகளை உள்ளடக்கியுள்ளது.சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி கூட்டுறவுகள் என்பன தொடர்பான கணக்காய்வுகளும் 2026ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயதானத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்தும் குழு கரிசனை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வாளர் நாயகம், தற்சமயம் இருக்கும் பணியாளர் எண்ணிக்கையைவிட 10%–15% பணியாளர்களுக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அலுவலகங்கள் மூலம் முன்னோடி கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பெப்ரவரி மாத இறுதிவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியிலிருந்து பணிக்கு அமர்த்துவதன் ஊடாகவோ பணியாளர்களுக்கான தேவை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.மேலும், வருடாந்த வேலைத்திட்டம் கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் படி எந்தவொரு மறுஆய்வு அல்லது பரிந்துரையும் சபாநாயகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுப் பணிகளுக்கு வெளியாட்களுக்கு வழங்குவதை ஆதரிப்பதென்ற கருத்தை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கும் குழு இணங்கியது. இதற்கமைய, முன்னோடித் திட்டத்தை செயற்படுத்தி, 2026 பெப்ரவரி இறுதியில் அது பற்றிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிக் குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதேவேளை, அவசரகால அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சீர்குலைந்த வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒதுக்கீடுகளை குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் வழங்குவதற்கான தீர்மானம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 05ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டியிருந்தது.2025 சனவாி மாதம் 01 ஆம் திகதியில் தொடங்கி 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் நிறைவடைகின்ற நிதியாண்டின் பயன்பாட்டிற்காக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து அல்லது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தற்றுணிவின் பிரகாரம் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாவினை (ரூபா 50,000,000,000) விஞ்சாத மேலதிக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டுமென்றும், அத்தகைய தொகை செலவிடப்படுமென்றும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றியும் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2025-12-05
இலங்கையின் ஏற்றுமதித் துறை புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து உற்பத்தியை மேம்படுத்துதல், சந்தை அணுகல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான ஆதரவு என்பவற்றை வலுப்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்தது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில், 2025.11.26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு கூடியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதிகள் ஒரு தசாப்தமாக அண்ணளவாக 13 – 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக இருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார். ஆனால் அண்மைய சீர்திருத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தத் துறை அதிக வளர்ச்சியை நோக்கிச் செல்ல உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புதிய தேசிய மூலோபாயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதான ஆலோசனைக் குழுக்களை மீண்டும் செயல்படுத்தியுள்ளதுடன், தொழிற்துறைக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் தெளிவான செயற்திறன் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஏற்றுமதியாளர்களில் 78% ஆக உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பங்களிப்பை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமை என்றும், எனினும் அவை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஒரு சிறிய பங்களிப்பை மாத்திரமே செய்கின்றன என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவிச் சேவைகள் மூலம் இந்தப் பங்களிப்பை கணிசமாக விரிவுபடுத்தும் இலக்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) எவ்வாறு கொண்டுள்ளது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய சர்வதேச தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருவது தொடர்பிலும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.அண்மைய ஆண்டுகளில் வலுவான செயற்திறனை எடுத்துக்காட்டும் வகையில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இலங்கை ஏற்றுமதியில் 16 – 17 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதற்கான பாதையில் உள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது. நாடு தனது அடுத்த மைல்கல்லான 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும்போது, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மற்றும் வலுவான தொழில் ஒத்துழைப்பு ஆகியவை இன்றியமையாததாக இருக்கும் என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்தது. இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே. சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பத்தி, (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன், சமிந்த ஹெட்டியாராச்சி, நிஷாந்த ஜயவீர, சந்தன சூரியாரச்சி, திலின சமரகோன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை (EDB) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks