பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-11
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி அவர்கள் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 2025.03.08ஆம் திகதி அவருடைய தலைமையில் கூடியபோதே கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி கூடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இதில் கௌரவ பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பன்சலை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். குறித்த இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடுவதாகவும், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்க முடிந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு முன்னர் பேரீச்சம் பழங்களைப் பகிர்ந்தளிக்கும் போது மோசடிகள் இடம்பெற்றதாகத் தனக்கு அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், வரலாற்றில் முதல் தடவையாக நியாயமான, வெளிப்படையான முறையில் இந்தப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய காலாசார நிதியத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கலாசார பாதுகாப்பு மற்றும் கட்டுமான தனியார் நிறுவனத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு உதவியாளர் பதவியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் குழுவிற்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் தற்காலிகப் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். இருப்பினும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி சம்பள நிலுவையை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், மத்திய கலாசார நிதியத்திற்கு 55.9 மில்லியன் ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டதாகவும், இந்தத் தீர்ப்புத் தொடர்பில் மத்திய கலாசார நிதியம் ரிட் ஆணை பெற்றுக் கொண்டமையால் குறித்த தொகையைச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளிடமிருந்து சரியான வழிகாட்டுதல் வழங்கப்படாமையால் 2012ஆம் ஆண்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட இந்தக் குழு தொடர்பாக 13 ஆண்டுகளாக முறையான தீர்வொன்று காணப்படவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுடன் பயணிக்க வேண்டிய நிலை தமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும், இதனைப் புத்திசாலித் தனமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கிறிஸ்தவ போதகர்களைப் பதிவுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்தப் பிரச்சினையை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், கிறிஸ்தவப் பிரிவுகள், தேவாலயங்கள் மற்றும் போதகர்களைப் பதிவு செய்வதற்கான ஒரு முறை கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அதற்கான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் கப்புமார்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஏதாவது ஒரு முறையில் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் வாய்ப்புக் குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தில் மாதமொன்றில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் 62 இலட்சம் ரூபா என்பது குறித்த தேவாலயத்தின் பதில் பஸ்நாயக்க நிலமேவாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பொறுப்பாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய கண்ணோட்டத்தில் இதனை நோக்க வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் ஜும்மாஆ பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த வருடத்தில் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் இலங்கையிலிருந்து செல்வதற்கான கோட்டா கிடைத்திருப்பதாகவும், ஒருவருக்கான செலவு 21 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் 3 இலட்சம் ரூபா இலாபம் ஈட்டுவது நியாயமற்றது என்றும், யாத்திரிகர்களுக்கு மேலும் சலுகை வழங்குவது அவசியம் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks