பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-11
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி அவர்கள் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 2025.03.08ஆம் திகதி அவருடைய தலைமையில் கூடியபோதே கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி கூடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இதில் கௌரவ பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பன்சலை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். குறித்த இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடுவதாகவும், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்க முடிந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு முன்னர் பேரீச்சம் பழங்களைப் பகிர்ந்தளிக்கும் போது மோசடிகள் இடம்பெற்றதாகத் தனக்கு அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், வரலாற்றில் முதல் தடவையாக நியாயமான, வெளிப்படையான முறையில் இந்தப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய காலாசார நிதியத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கலாசார பாதுகாப்பு மற்றும் கட்டுமான தனியார் நிறுவனத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு உதவியாளர் பதவியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் குழுவிற்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் தற்காலிகப் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். இருப்பினும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி சம்பள நிலுவையை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், மத்திய கலாசார நிதியத்திற்கு 55.9 மில்லியன் ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டதாகவும், இந்தத் தீர்ப்புத் தொடர்பில் மத்திய கலாசார நிதியம் ரிட் ஆணை பெற்றுக் கொண்டமையால் குறித்த தொகையைச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளிடமிருந்து சரியான வழிகாட்டுதல் வழங்கப்படாமையால் 2012ஆம் ஆண்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட இந்தக் குழு தொடர்பாக 13 ஆண்டுகளாக முறையான தீர்வொன்று காணப்படவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுடன் பயணிக்க வேண்டிய நிலை தமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும், இதனைப் புத்திசாலித் தனமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கிறிஸ்தவ போதகர்களைப் பதிவுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்தப் பிரச்சினையை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், கிறிஸ்தவப் பிரிவுகள், தேவாலயங்கள் மற்றும் போதகர்களைப் பதிவு செய்வதற்கான ஒரு முறை கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அதற்கான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் கப்புமார்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஏதாவது ஒரு முறையில் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் வாய்ப்புக் குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தில் மாதமொன்றில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் 62 இலட்சம் ரூபா என்பது குறித்த தேவாலயத்தின் பதில் பஸ்நாயக்க நிலமேவாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பொறுப்பாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய கண்ணோட்டத்தில் இதனை நோக்க வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் ஜும்மாஆ பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த வருடத்தில் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் இலங்கையிலிருந்து செல்வதற்கான கோட்டா கிடைத்திருப்பதாகவும், ஒருவருக்கான செலவு 21 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் 3 இலட்சம் ரூபா இலாபம் ஈட்டுவது நியாயமற்றது என்றும், யாத்திரிகர்களுக்கு மேலும் சலுகை வழங்குவது அவசியம் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-08
2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியதுடன், இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.இலங்கையில் தொலைத்தொடர்பு துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பது மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தியை மேம்படுத்துவது என்ற இலக்கை அடைவது இத்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவில் புதிதாக அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அறவிடப்படும் வரியில் தற்காலிக நிவாரணம் வழங்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்தாண்டு வரி விலக்கு அளிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.அத்துடன், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீடு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய வரி விகிதத்தை சட்டரீதியாக ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது, வரி ஏய்ப்பின் போது (Bad Debts) பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை விளக்குவது மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி விகிதம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வரி முகாமைத்துவத்தை வெளிப்படைத்தன்மையாக முன்னெடுப்பது இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு வரி விகிதத்தை முறைப்படுத்துவது மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருத்தத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டதுடன், செலுத்தப்படாத கட்டணங்கள் மீதான வரிகளைத் (Telecom Levy) குறைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய வாடிக்கையாளர்களினால் வரி செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் வரியைக் கணக்கிடுவது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் இன்மையால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத கட்டணங்களிலிருந்து வரிகளைக் கழிப்பதற்கு சேவை வழங்குனர்களுக்கு அனுமதி அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இருப்பினும், சிறு வணிகங்களுக்கு இதுபோன்ற நிவாரணம் கிடைக்காத சூழலில், ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிவாரணத்தை வழங்குவது நியாயமற்றது என்று குழு வலியுறுத்தியது. ஒரு பெரிய நிறுவனம் 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்த வரி நிவாரணத்தைக் கோரி வருவதாகவும், இது சந்தையின் ஒட்டுமொத்த நேர்மைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. நுகர்வோரிடமிருந்து வரிகளை வசூலிப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறுவது அரசாங்க வருவாயைக் குறைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது என்றும் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார். இதற்கமைய செலுத்தப்படாத கட்டணங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடர்பில் மேலும் விளக்கங்களைப் பெறவேண்டியிருப்பதால் இது குறித்த விதியைப் எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அதேநேரம், இணையவழி கசினோ நடவடிக்கைகளுக்கு அரசாங்க முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் அரசாங்க முத்திரையைப் பயன்படுத்தி "உரிமம் பெற்றது" என்று குறிப்பிடும் இணையவழி கசினோ விளம்பரங்கள் குறித்து குழு விசாரணை நடத்தியதுடன், இதுவரை எந்தவொரு இணையவழி கசினோ நிறுவனத்திற்கும் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி குழுவிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் குழு முடிவெடுத்தது.அத்துடன், நிதி, வரி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், இவற்றுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வகைப்பாடு மற்றும் வரிவிதிப்பை நெறிப்படுத்தும் நோக்கில் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மற்றும் மதுவரியின் கீழ் ஒருங்கிணைந்த வகைப்பாட்டுக் குறியீடுகளுக்கு (HS குறியீடுகள்) புதிய தேசிய உப பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான கட்டளைகளும் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், தேசிய ஆடை துறைக்கு நியாயமான போட்டிச் சந்தையை உருவாக்கும் நோக்கில் அறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு அறவிடப்பட்ட செஸ் வரியை நீக்கி 2026 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்18% பெறுமதி சேர் வரியை அறிவிடும் கட்டளையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தின் காரணமாக இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய வரியின் அளவு அதிகரித்திருந்தாலும், சேர் பெறுமதி வரிக்கு (VAT) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அந்த வரித் தொகையை வரவுப் பற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், இது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனர்த்த நிவாரண பண ரசீதுகளுக்கு முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கும் கட்டளையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.
2026-06-08
அனுராதபுரம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் (05) கூடியது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், இவ்வழக்கிற்கான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்பில் தற்பொழுது அனுராதபுரத்திற்கு மேலதிகமாக அத்தனகல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், இந்த வழக்கு மூன்று நீதிமன்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கப்பாட்டை வெளியிட்டது.சம்பந்தப்பட்ட சிறுமியின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒன்றியம் பரிந்துரைத்தது.அதேநேரம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இது விடயத்தில் எதிர்கால நடவடிக்கைகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளை அறிக்கையிடும்போது சிறுவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவர்களின் கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் ஊடக மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு தலையீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் ஏற்படுகின்ற சட்ட மற்றும் நடைமுறை ரீதியான தடைகளை தாண்டுவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உபகுழு செயற்படும்.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் நிகழ்நிலை (சூம்) தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.
2026-06-03
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.
2026-06-03
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks