பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-04
செய்தி வகைகள் : குழு செய்திகள்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்றையதினம் (மார்ச் 03) அவருடைய தலைமையில் நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார். கௌரவ பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமைச்சின் பணிகள் மற்றும் அதன் நோக்கம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்த அமைச்சு அதிகாரிகள், இதுவரை ஏறத்தாழ 1.7 மில்லியன் பேர் அஸ்வெசும பயனாளிகளாக இருப்பதாகவும், எதிர்வரும் 5 வருடங்களில் இதில் 1.5 மில்லியன் பேரை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம் என்றும் தெரிவித்தனர். அத்துடன், 2025ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளிகளில் 3 இலட்சம் பேரை வலுவூட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி ஆகிய துறைகளின் கீழ் 10 நிறுவனங்கள் அமைச்சின் கீழ் செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பாடசாலை மட்டங்களில் போதைப்பொருள் தடுப்புக் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களை வினைத்திறனான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சில அஸ்வெசும பயனாளிகள் கூட போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகவும் இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஓய்வூதியம் மற்றும் அதற்கு சமமான சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல், சமூக வலுவூட்டல் மாதிரிக் கிராமங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஸ்மார்ட் கிராமம்’ திட்டம், கிராமப் புறங்களில் காணப்படும் நுண்நிதிப் பிரச்சினை, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள், சிறுநீரக நோயாளிகளின் பிரச்சினை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-03
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கூடியதுடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்தக்கூடிய மாற்று தேர்தல் முறைகள் குறித்து இங்கு விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பழைய விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் பட்சத்தில், வேட்பாளர் பட்டியல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குதல், தொகுதி எல்லை நிர்ணயத்துடன் தொடர்புடைய சட்டரீதியான தடைகளை நீக்கி கலப்பு தேர்தல் முறைக்கு மாறுதல், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.மேலும், வேட்பாளர் பட்டியல் மட்டத்தில் மட்டுமன்றி, சபையின் மொத்த அமைப்பிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் சட்டரீதியாக உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் கவனம் செலுத்தியது. அதன்படி, சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதற்கான நடைமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.விருப்பு வாக்கு முறையின் கீழ் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள், தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் சர்வதேச அனுபவங்களும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. அதேவேளை, தேர்தல் முறையின் ஊடாக இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் பயனுள்ளதாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.மேலும், மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கருத்துக்கள், விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையையும் பரிந்துரைகளையும் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.
2026-07-01
இயலாமையுடைய நபர்களுக்கான விசேட கல்வி மற்றும் விசேட பாடசாலைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இத்துறையில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிய இடம்பெற்றதுடன், இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறையின் போது விசேட கல்வித் துறையும் பிரதான அங்கமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைமையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.அத்துடன், விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் தொழில்சார் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், பாடத்திட்ட மேம்பாடு, விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.விசேட கல்விக்கான துறையில் நடைமுறை அனுபவமுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும் எதிர்கால கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது கருத்திற்கொள்ளப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் விசேட பாடசாலைகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், இயலாமையுடைய நபர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் திலக் தர்மரத்ன, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் அதிகாரிகள், இயலாமையுடைய மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் நிர்வாகிககள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-25
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 23) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பளிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து, குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
2026-06-23
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021-2023 மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் இத்திணைக்களத்தின் செயலாற்றுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் சொத்துக்களைப் பெறும் பல்வேறு வழிகள், ஒவ்வொரு சொத்தும் பெறப்பட்ட காலப்பகுதிகள், அச்சொத்துக்கள் யாரால் மாற்றப்பட்டன, அந்த மாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் போன்றவை அடங்கிய ஒரு அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறு 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் வினவினார். இதடன் தொடர்புடைய தரவுகள் அடங்கிய அறிக்கை குழுவிற்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திடம் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.காலி பத்தேக, சுதுவலிபொத்த பகுதியில் அமைந்துள்ள ஹரி ஹபுகொட பெருந்தோட்டத்திற்குச் சொந்தமான 113 ஏக்கர் காணியை குத்தகைக்கு கேள்விப்பத்திரம் கோரல் குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மதிப்பிடப்பட்ட பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த நிலத்தின் சில பகுதிகள் பல்வேறு தரப்பினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இங்கு தெரியவந்தது.ரிச்மண்ட் காசல் கட்டடத்தின் பராமரிப்பு குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜூலை மாதத்திற்குள் இந்தக் கட்டடடத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இங்கு காணப்படும் தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இக்குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களனா சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிக்கா அதாவுட, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரிஆரச்சி, அஜந்த கம்மத்தகே, லால் பிரேம்நாத், ருவன்திலக ஜயக்கொடி மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks