பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-11-21
செய்தி வகைகள் : செய்திகள்
• பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு
• குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜத ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வ சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றி இவர், முன்னாள மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2026-07-10
பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய (14வது பிரிவு) விசேட பெரும்பான்மையுடனும், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றியும், பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றியும் இன்று (ஜுலை 09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்தச் சட்டமூலங்களின் ஊடாக பணம் தூய்தாக்கல்,பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதிக்குற்றங்களைத் தடுப்பதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை சர்வதேசத் தரங்களுக்கு இணங்க மேலும் வலுப்படுத்தவும், நிதிக் கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகள் மீதான ஒழுங்குமுறைச் செயல்முறையை மிகவும் திறமையானதாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026-07-08
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள், பாராளுமன்ற இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான பொறிமுறையாக விளங்குகின்றனக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் இவை பெறுமதிவாய்ந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் எகிப்து இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்தார்.அதேநேரம், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-07-07
இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் இன்றையதினம் (ஜுலை 07) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த நல்லெண்ண சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை வகிக்கும் பங்கு, அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கையின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், மக்களின் நலனுக்காகவும் இலங்கை கடற்படை ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பாராட்டினார். வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கான வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார்.இதன்போது கருத்துத் தெரிவித்த வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், சபாநாயகரின் வாழ்த்துகளுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், தேசிய பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் பொறுப்பை கடற்படை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார்.இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, ஏனைய நாடுகளுடனும் நடுநிலையான இராஜதந்திர உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.மேலும், இலங்கை கடற்படை வணிக நோக்கில் படகுகள் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்கு வருவாய் ஈட்டுவதற்கும் உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் காணப்படும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வடக்கு மாகாணத்தின் தீவுப் பகுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட இலங்கை கடற்படை தயாராக இருப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
2026-07-03
பாராளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன.பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை (188ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணிவரை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, (235ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பவற்றுக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் வெளிநாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பற்றிய விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒழுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் என்பவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைநலின் பண்டார ஜயமஹ அவர்கள்எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உரிமம் அளிக்கும் செயன்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.உபுல் கித்சிறி அவர்கள்இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய மடுவன்வெல பிரபுமனை (வலவ்வ) முதற்கொண்டு இலங்கையின் புராதன பெறுமதி வாய்ந்த தலங்களைப் பாதுகாத்தல்.(கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள்“இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்.சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ அவர்கள் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counsellor) ஒருவரை நியமித்தல்.ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள்“ரட்டவிருவன்” (புலம்பெயர் வீரர்கள்) என்றழைக்கப்படும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை வகுத்தல்.ருவன்திலக்க ஜயகொடி அவர்கள்இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிலுள்ள உணவகங்களில் மாணவர்களுக்கு பாதகமான உணவு வகைகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறையொன்றை உருவாக்குதல்.றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks