பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-11-21
செய்தி வகைகள் : செய்திகள்
• பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு
• குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜத ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வ சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றி இவர், முன்னாள மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2026-05-22
கௌரவ இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் தலைமையிலான இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், கியூபா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் (மே 20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வது இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த கௌரவ அமைச்சர், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையே பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூப தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதில் கியூப – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களின் உறுப்பினர்களிடையே நெருங்கிய தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். கியூபாவின் தலைவரான ஃபிடெல் கஸ்ட்ரோவின் பிறந்த தினத்தின் நூற்றாண்டையொட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கலந்துகொள்ளுமாறும் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார். சர்வதேச மட்டத்தில் இலங்கை கியூபாவுக்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். அத்துடன், கியூபா தற்பொழுது எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்தும் அந்நாட்டுத் தூதுவர் இங்கு விரிவாக விளக்கமளித்தார்.
2026-05-19
பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (மே 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இச்சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புரையுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெறிருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய, வாசகம் 22 மற்றும் வாசகம் 39 தவிர, சட்டமூலம் பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், நீதிமன்றம் பரிந்துரைத்தபடி வாசகம் 22 மற்றும் வாசகம் 39 திருத்தப்பட்டால், அந்த வாசகங்களையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் அவர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.குறித்த சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (19) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமெனவும் சபாநாயகர் கட்டளையிட்டார்.
2026-05-18
காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (மே 14) நடைபெற்றது. காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தலைமைத்துவத்தில் மிகுந்த அனுபவத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் வீண் விரயத்தைக் குறைப்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ, மாணவர் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிகாட்டியதோடு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் விளக்கமளித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா புலத்சிங்கள அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து மாணவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வின் இறுதியில் காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் அதிபர் என்.ஜீ.ஆர்.சுமேதா காரியவசம் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-14
பாராளுமன்றத்தை மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் மே மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மே 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.மே 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08 மற்றும் 2482/12 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் (2026.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தின் 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 11ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளக்கப்பட்டுள்ளன) என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை என்பன எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks