பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-11-21
செய்தி வகைகள் : செய்திகள்
• பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு
• குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜத ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வ சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றி இவர், முன்னாள மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2026-07-30
மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பும்போது அவர்களை அரசியல்வாதிகளாக அன்றி இராஜதந்திரிகளாகவே அனுப்ப வேண்டும் என கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி வலியுறுத்தினார். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும், இராஜதந்திரிகள் பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, “சட்டத்தை மதிக்காத மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய அனர்த்தத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது பாராளுமன்றத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தெரிவுசெய்து அனுப்பப்பட வேண்டியவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் சட்டத்திற்கு கட்டுப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றக்கூடியவர்கள் அவர்களே.பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவதற்காக தங்களது அதிகபட்ச ஆற்றலை அர்ப்பணிக்கும் ஆசிரியர்களை மதியுங்கள். அவர்களுக்கு செவிசாயுங்கள். அவர்களது ஆசீர்வாதத்தை எப்போதும் பெற்றுக்கொள்ளுங்கள். மாணவர்களான நீங்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், உங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் எப்போதும் ஆசிரியர்களாகவே இருப்பார்கள்.நீங்கள் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதனை அன்புடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் மகிழ்ச்சியடையுங்கள். அதற்கு மதிப்பும் மரியாதையும் அளியுங்கள். தொழிலில் ஈடுபடும்போது நேர்மையாக இருங்கள்.தங்களைவிட தமது பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களே பெற்றோர்கள். உங்களை வளர்த்து ஆளாக்கும் அவர்களை மதியுங்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பின்பற்றுகின்றனர். எனவே, தமது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.சட்டத்தை மதிக்கும்போது, தான் சட்டத்தை மதிக்கும் பிரஜை என்ற உணர்வு ஏற்படுகிறது. மாணவர்களான நீங்கள் இன்று இந்த இடத்திலிருந்து வெளியேறும்போது சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக மாறுவோம் என்ற எண்ணத்தை மனதில் பதித்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மக்கள் ஆணைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பாராளுமன்றம் மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தினர். மக்கள் ஆணைக்கு பொறுப்புக்கூறும், பொறுப்புணர்வுடன், கட்டுப்பாடும் ஒழுக்கமும் முன்னுதாரணமும் கொண்ட நிறுவனமாக பாராளுமன்றத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பானதொரு பாராளுமன்ற அமர்வை நடத்தியுள்ளனர். நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை இதன் மூலம் காண முடிந்தது. எதிர்காலத்தில் மாணவர்களான நீங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, உங்களுக்குப் பின்னர் வரும் தலைமுறைக்காக உங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படும் பிரதான மூலாதாரங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்களான மாணவிகள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவிகள் தமது அமைச்சுக்களின் ஊடாக பாடசாலையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு கௌரவ பிரதிச் சபாநாயகர் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில் கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரி அதிபர் கங்கானி திலகரத்ன மெணிகே நன்றியுரை நிகழ்த்தினார். ஜனாதிபதி செயலகமும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும், கேகாலை ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-07-30
பாராளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவுள்ளது.குறித்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள ஓகஸ்ட் 05ஆம் திகதி தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைரப்பு மதிப்பீட்டு மற்றும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.ஓகஸ்ட் 05ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை மீது எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.ஓகஸ்ட் 06ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் தேசிய வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச்சட்டமூலம் ஆகியவை தொடர்பான (இவ்விரண்டு சட்டமூலங்களும் அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிட்டால்) இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகந்தசாமி பிரபுபால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல்ஹெக்டர் அப்புஹாமிசதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்எம்.எஸ். உதுமாலெப்பைமட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல்இம்ரான் மகரூப்கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல்சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கரஇரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்சுசந்த குமார நவரத்னஇலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல்சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-07-28
பால் பண்ணையாளர்களைக் கட்டியெழுப்பும் தேசிய பால் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக கௌரவ கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.தேசிய பால் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 325 Dairy Hub சங்களின் ஊடாக பால் பண்ணையாளர்களை அபிவிருத்தியடையச் செய்வதற்கும், வருடாந்தம் பால் உற்பத்தியை 410 மில்லியன் லீற்றர் முதல் 1,200 மில்லியன் லீற்றர் வரை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இனப்பெருக்க பண்ணைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் நிக்கவெரட்டிய பால் பண்ணை அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், மாகாண விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களங்களின் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக தேசிய வரவுசெலவுத்திட்டத்திலிருந்து 2026ஆம் ஆண்டில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2026-07-24
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மேலதிக வாக்குகளால் இன்று (ஜுலை 24) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை 11.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிராக 2026 ஜூலை 21ஆம் திகதி எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks