பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-08-15
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி அறிவுறுத்தல் வழங்கினார்.
புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ பத்து லட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டபோதிலும் அவர்களில் 23% பேர் மட்டுமே வெளிநாடு சென்றதாகவும், எஞ்சிய 77% பேர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அதனால் அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் முடிந்தவரை மக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் தெரிவித்தார். எனினும், பணம் செலுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதனால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவுத் மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார். அவ்வாறில்லை எனில் திணைக்களமும் அரசாங்கமும் மக்கள் மத்தியில் கடும் வெறுப்புக்கு ஆளாவதை தடுக்க முடியாது என குழுவின் தலைவர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தியா மற்றும் நேபாளம் செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலித்த குழு அது தொடர்பில் அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2024 ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை 2017 இல் வரைபு செய்ய ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார். குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் 1971 இன் 53 ஆம் இலக்கமுடைய வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளியேறல் அனுமதிப் பத்திரச் சட்டம் என்பன தற்போதைய சமூக, தொழில்நுட்ப நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. விசேடமாக இந்நாட்டில் மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்தப் புதிய சட்டமூலம் ஊடாகத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், புதிய தொழில்நுட்பத்துடன் திணைக்களம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருபோருக்குப் பொருந்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளிட்ட புதிய சட்டங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டுள்ளது. பலரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக இலுக்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக தாமதமான இந்த சட்டமூலம் காலத்துக்கேற்ற முக்கியமானது சட்டமூலம் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்கள ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், இச்சட்டத்தை மேலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு இது தொடர்பான முன்மொழிவுகளை 2 வாரங்களுக்குள் குழுவிடம் வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு குழு அறிவித்தியது.
அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ ஜயந்த வீரசிங்க, கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகிய குழு உறுப்பினர்களும், குழுவின் உறுப்பினர்களல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
