பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-04-04
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தற்போது நடைமுறையில் உள்ள அரச நிறுவங்களை மீள்கட்டமைப்பு செய்யு திட்டம் மற்றும் மீள்கட்டமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்தில் கொள்ளப்பட்டது. இந்தக் குழு அண்மையில் (ஏப். 01) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் கூடிய போதே இந்த விடயம் கருத்திற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்ய நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அரச தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இந்தப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்ததுடன், அவர்களின் பணிகள் தொடர்பில் குழுவுக்கு விளக்கமளித்தனர். அதற்கமைய, தற்போது 07 நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்வதற்குத் வேலைத்திட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். Srilankan Airlines Ltd, Sri lanka Telecom PLC, Sri Lanka Insurance Corporation Ltd, Hotel Developers Ltd, Canwill Holdings (Pvt) Ltd, Litro Gas and Litro Gas Terminals Ltd, Lanka Hospitals Corporation PLC ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. மீள்கட்டமைப்பு செய்வதன் கீழ் அலகுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்து கருத்து தெரிவித்த அந்த அதிகாரிகள், இந்த நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து சுயாதீனமாக்குவது மற்றும் அதனையடுத்து கேள்விப்பத்திரம் கோரல் ஊடாக தனியார் துறையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாகும் எனக் குறிப்பிட்டனர். அத்துடன், ஏற்கனவே பல நிறுவனங்கள் தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு (EOI) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மீள்கட்டமைப்பு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதற்கமைய, கடந்த 10 வருடங்களில் மீள்கட்டமைப்புக்கான நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் முழுமையான தரவுகள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் வழங்குமாறு அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அலகின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், இந்நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் நடவடிக்கையின் மூலம் வழங்கப்படும் பங்களிப்பு குறித்து அறிக்கை தயாரித்து குழுவுக்கு வழங்குமாறும் குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், இந்த அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேலதிக கலந்துரையாடலுக்காக தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்துவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். குழுவின் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயங்கள் குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் வெளிப்படித்தன்மையுடனும் வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் கடன் தகவல் பணியகத்திற்கு (CRIB) வழங்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம், பொதுமக்கள் தாம் CRIB இல் உள்ளடங்குவதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக இதற்கு உதாரணமாக குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எதிர்வரும் காலங்களில் அந்த செயற்பாடுகளை செயற்படுத்தத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கெளரவ (வைத்தியகலாநிதி) கயாஷான் நவனந்த, கௌரவ டபிள்யூ.எச்.எம். தர்மசேன, கௌரவ சஹன் பிரதீப் விதான, வண. அதுரலியே ரத்ன தேரர், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ அசங்க நவரத்ன, கெளரவ ஜகத் பிரியங்கர மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

