2026-02-24
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக குழு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும், இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடைமுறைக்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கு இந்தத் தொகை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமல், தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய வழங்கப்படுவதாகவும், இதனை எந்தவொரு நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், இந்த ரூ.200 தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று வருட காலத்திற்காக தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தக் காலம் முடிவடைந்ததும் இக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குழுவுக்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்க நிதி என்பதால் நிதி ஒழுக்கம் இன்றி தனியார் நிறுவனங்களில் சம்பளம் வழங்குமாறு கொடுப்பது பொருத்தமில்லையென குழுத்தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தொகை 2026 வரவுசெலவுத்திட்டத்தில் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இக்கொடுப்பனவை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய இந்தக் கொடுப்பனவு ‘அபிவிருத்தி மானியமாக’ காண்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அபிவிருத்தி மானியமானது உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதால், இந்தக் கொடுப்பனவை உற்பத்தி ஊக்கத்தொகை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என திறைசேரியின் பிரதிச் செயலாளர் தெரிவித்தார். இருந்தபோதும், நடைமுறையில் ஜனவரி மாதத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவில் அல்லது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதற்கான தேவை தொடர்பில் குறிப்பிடப்படவில்லையென்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. அத்துடன், நாளொன்றுக்கு ரூ.200 வீதம் வழங்கப்படும் கொடுப்பனவு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணிப்பீட்டிற்கு உட்படாமல் இருப்பது சட்டத்திற்கு ஏற்புடையதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, இந்த விடயத்தில் காணப்படும் இதுபோன்ற சிக்கலான பகுதிகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும், இந்தக் கொடுப்பனவு தொடர்பாக சட்டரீதியான கட்டமைப்பொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி கூடியதுடன், இதில் கௌரவ பிரதியமைச்சர்களான சத்துரங்க அபேசிங்ஹ, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளின் கீழ் இதுவரை சுமார் ரூ. 24.4 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்தல், வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான மானியங்களுக்கான கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், சேத மதிப்பீடு மற்றும் நில அடையாளம் காணல் போன்ற செயல்முறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைப்புச் செய்தல் மற்றும் வாடகை தொடர்பான நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இந்த நடவடிக்கைகள் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் செயல்முறையையும் அதிகாரிகள் விளக்கினர். நிவாரண உதவிகளை நாடுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குழு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர், மேலும் உதவி, குறிப்பாக வீட்டுவசதி, விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தித்வா சூறாவளிக்குப் பிறகு பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் கோரிக்கைகள் காரணமாக நிதி தீர்க்க வேண்டியுள்ள காப்புறுதி உரிமைகோரல்களுக்காக மறுகாப்புறுதித் தொகையை விடுவிக்க வேண்டியதன் தன்மை குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். தற்போது NITF இலிருந்து எதிர்பார்க்கப்படும் மதிப்பிடப்பட்ட காப்புறுதி உரிமைகோரல்கள் ரூ. 11 பில்லியன் ஆகும் என்பதுடன், NITF இன் ஆபத்து வெளிப்பாடுகள் 2023 முதல் ஒரு சர்வதேச மறுகாப்பீட்டாளருடன் மறுகாப்பீடு செய்யப்படாவிட்டாலும், தற்போதுள்ள கோரிக்கைகளை அவர்கள் தீர்க்கும் திறன் கொண்டவர்கள் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை ஈடுசெய்வதற்கு திறைசேரியில் குறிப்பிடத்தக்க அளவு தொகை இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்படுத்தக்கூடிய தொகை சுமார் ரூ. 750 பில்லியன் என்றும் தெரியவந்தது. டிசம்பரில் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் காரணமாக நிதி இருப்பு இந்த அளவிற்குக் குறைக்கப்பட்டதாகவும், இருப்புக்கள் குறைக்கப்பட்டதால், டிசம்பர் இறுதிக்கும் ஜனவரி நடுப்பகுதிக்கும் இடையில் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவது அதிகரித்துள்ளதாகவும், இதனால் அந்தக் காலப் பகுதியில் வட்டிச் செலவுகள் அதிகரிப்பைப் பாதித்துள்ளதாகவும், இப்போது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தெரியவந்தது. அரசாங்கத்தின் வருடாந்த வட்டி செலவைவிட இந்த இருப்பினை முதலீடு செய்வதினால் கிடைக்கும் நன்மை நூற்றுக்கு 2-3 வீதம் குறைவாக இருப்பதாகவும், நிதி இருப்பைப் பேணும்போது சந்தர்ப்பச் செலவு காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.
பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 14 மாதங்களாக நிறுவப்பட்ட இந்த அலுவலகத்தின் (PDMO) மொத்த பணியாளர் ஆட்சேர்ப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளமையும் இங்கு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகாரிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது. மத்திய வங்கியின் ஏல முறை தற்போது பொது படுகடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் அலுவலகம் முழு செயல்பாட்டு சுதந்திரத்துடன் செயல்பட ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு கடன் இருப்பு ரூ. 31 ட்ரில்லியன் என்றும், அதில் ரூ. 15.6 டிரில்லியன் திறைசேரி உண்டியல்கள் வடிவத்திலும், ரூ. 15.4 ட்ரில்லியன் திறைசேரிப் பத்திரங்கள் வடிவத்திலும் உள்ளன என்பதை அரசாங்க நிதி பற்றிய குழு அவதானித்தது. அந்த மொத்தக் கடனின் சராசரி செலவு 8.73 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் சேவைத் தேவை 2504 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதும் அவதானிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி 2100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 858 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டக் கடன்களாகவும், 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கியிடமிருந்து வரவுசெலவுத்திட்டத்திற்கான ஒத்துழைப்பாகவும், 380 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் (ADB) மற்றும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலமும் பெறப்பட உள்ளன என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அதன்படி, அந்த ஆண்டிற்கான கடனைத் தீர்க்க 400 மில்லியன் டொலர்களுக்கு மேலும் கூடுதல் வளமுகாமைத்துவ இடைவெளி இருப்பதும் அவதானிக்கப்பட்டது.
2026-07-23
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
2026-07-22
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு, பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
2026-07-22
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.
2026-07-22
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.