01

E   |   සි   |  

2026-03-06

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (பெப். 27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. 

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம், (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றனர். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரவீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி சந்திரகலா ஞானேஸ்வரன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். 

புள்ளிவிபரங்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,000ற்கும் அதிகமான இயலாமையுடைய நபர்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களுக்கு 14 அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதாக அமைந்தது. இம்மாவட்டத்தில் உள்ள 183 இயலாமையுடைய மாணவர்களுக்கு 23 கல்வி அலகுகளில் சேவையாற்றுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட 21 ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் எடுத்துக் கூறினார். இயலாமையுடைய நபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்குதல், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் நுழைவதற்குக் காணப்படும் மட்டுப்பாடுகள் குறித்தும் அவர் இங்கு தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம். அரசாங்க வேலைவாய்ப்புக்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் தடைகள் குறித்து கல்வி அமைச்சுடன் இம்மாதத்தில் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதனால் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இணைந்து இதனை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், மட்டக்களப்பில் இதுவரை எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத இயலாமையுடைய நபர்களைக் கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவது முக்கியமானது என வலியுறுத்தினார். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாகப் பெற்றக் கொடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமை உடைய நபர்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பற்றியும், அவ்வாறான நபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றியும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். 

அத்துடன், பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சேவை வழங்கலில் தொடர்ந்து நிலவி வரும் குறைபாடுகளையும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களையும் குறித்து கவனம் செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமைய உடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குழுவிற்கு எடுத்துரைத்தனர். கல்விக்கான மானியங்களை நீடிப்பது, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பரீட்சைகளில் தோன்றும்போது காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் பிரையில் போன்ற மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறச் செய்யும்போது நேர விரயத்தைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குதல், அரசாங்க அலுவலகங்களை நாடும் இயலாமை உடையும் நபர்கள் படிகளில் ஏறவேண்டிய தேவை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தமக்குக் காணப்படும் பிரச்சினைகளை இங்கு முன்வைத்தனர்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், ஏனையவை மாவட்ட அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அத்துடன், சில விடயங்களுக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால கொள்கை மறுசீரமைப்புக்கான தேவையை ஒன்றியம் வலியுறுத்தியது. 

மாவட்ட ரீதியாகச் சென்று நாடு முழுவதிலும் உள்ள இயலாமை உடைய நபர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குத் தேவையான தீர்வுகளை முன்வைப்பதில் ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார். 

இந்த நிகழ்வானது, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-02-24

பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழு, இரண்டு தூதுவர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளரின் நியமனங்களுக்கு ஒப்புதல்

இரண்டு தூதுவர் பதவிகளுக்கும் ஒரு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.இதற்கமைய, எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நிர்மலா இந்துமதி  டயஸ் பரணவிதான அவர்களை நியமிப்பதற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் மொஹமட் இப்ராஹிம் பஸீஹா அஸ்மி அவர்களை நியமிப்பதற்கும் இக்குழு அங்கீகாரம் அளித்தது.இதற்கு மேலதிகமாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின்  செயலாளராக கே.ஏ. விமலேந்திரராஜா அவர்களின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


2026-02-24

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 தொடர்பில் சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்குப் பரிந்துரை

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குழு அவதானம்அனர்த்த முகாமைத்துவ காப்புறுதி குறித்தும் குழு கவனம் செலுத்தியதுபொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அவதானம்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக குழு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும், இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடைமுறைக்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கு  இந்தத் தொகை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமல், தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய வழங்கப்படுவதாகவும், இதனை எந்தவொரு நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், இந்த ரூ.200 தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று வருட காலத்திற்காக தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தக் காலம் முடிவடைந்ததும் இக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குழுவுக்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அரசாங்க நிதி என்பதால் நிதி ஒழுக்கம் இன்றி தனியார் நிறுவனங்களில் சம்பளம் வழங்குமாறு கொடுப்பது பொருத்தமில்லையென குழுத்தலைவர்  சுட்டிக்காட்டினார். இந்தத் தொகை 2026 வரவுசெலவுத்திட்டத்தில் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இக்கொடுப்பனவை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய இந்தக் கொடுப்பனவு ‘அபிவிருத்தி மானியமாக’ காண்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அபிவிருத்தி மானியமானது உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதால், இந்தக் கொடுப்பனவை உற்பத்தி ஊக்கத்தொகை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என திறைசேரியின் பிரதிச் செயலாளர் தெரிவித்தார். இருந்தபோதும், நடைமுறையில் ஜனவரி மாதத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவில் அல்லது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதற்கான தேவை தொடர்பில் குறிப்பிடப்படவில்லையென்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. அத்துடன், நாளொன்றுக்கு ரூ.200 வீதம் வழங்கப்படும் கொடுப்பனவு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணிப்பீட்டிற்கு உட்படாமல் இருப்பது சட்டத்திற்கு ஏற்புடையதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, இந்த விடயத்தில் காணப்படும் இதுபோன்ற சிக்கலான பகுதிகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும், இந்தக் கொடுப்பனவு தொடர்பாக சட்டரீதியான கட்டமைப்பொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி கூடியதுடன், இதில் கௌரவ பிரதியமைச்சர்களான சத்துரங்க அபேசிங்ஹ, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு  அறிவிக்கப்பட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளின் கீழ் இதுவரை சுமார் ரூ. 24.4 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்தல், வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான மானியங்களுக்கான கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், சேத மதிப்பீடு மற்றும் நில அடையாளம் காணல் போன்ற செயல்முறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைப்புச் செய்தல் மற்றும் வாடகை தொடர்பான நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இந்த நடவடிக்கைகள் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் செயல்முறையையும் அதிகாரிகள் விளக்கினர். நிவாரண உதவிகளை நாடுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குழு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர், மேலும் உதவி, குறிப்பாக வீட்டுவசதி, விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.தித்வா சூறாவளிக்குப் பிறகு பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் கோரிக்கைகள் காரணமாக நிதி தீர்க்க வேண்டியுள்ள காப்புறுதி உரிமைகோரல்களுக்காக மறுகாப்புறுதித் தொகையை விடுவிக்க வேண்டியதன் தன்மை குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். தற்போது NITF இலிருந்து எதிர்பார்க்கப்படும் மதிப்பிடப்பட்ட காப்புறுதி உரிமைகோரல்கள் ரூ. 11 பில்லியன் ஆகும் என்பதுடன், NITF இன் ஆபத்து வெளிப்பாடுகள் 2023 முதல் ஒரு சர்வதேச மறுகாப்பீட்டாளருடன் மறுகாப்பீடு செய்யப்படாவிட்டாலும், தற்போதுள்ள கோரிக்கைகளை அவர்கள் தீர்க்கும் திறன் கொண்டவர்கள் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை ஈடுசெய்வதற்கு திறைசேரியில் குறிப்பிடத்தக்க அளவு தொகை இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்படுத்தக்கூடிய தொகை சுமார் ரூ. 750 பில்லியன் என்றும் தெரியவந்தது. டிசம்பரில் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் காரணமாக நிதி இருப்பு இந்த அளவிற்குக் குறைக்கப்பட்டதாகவும், இருப்புக்கள் குறைக்கப்பட்டதால், டிசம்பர் இறுதிக்கும் ஜனவரி நடுப்பகுதிக்கும் இடையில் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவது அதிகரித்துள்ளதாகவும், இதனால் அந்தக் காலப் பகுதியில் வட்டிச் செலவுகள் அதிகரிப்பைப் பாதித்துள்ளதாகவும், இப்போது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தெரியவந்தது. அரசாங்கத்தின் வருடாந்த வட்டி செலவைவிட இந்த இருப்பினை முதலீடு செய்வதினால் கிடைக்கும் நன்மை நூற்றுக்கு 2-3 வீதம் குறைவாக இருப்பதாகவும், நிதி இருப்பைப் பேணும்போது சந்தர்ப்பச் செலவு காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 14 மாதங்களாக நிறுவப்பட்ட இந்த அலுவலகத்தின் (PDMO) மொத்த பணியாளர் ஆட்சேர்ப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளமையும் இங்கு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகாரிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது. மத்திய வங்கியின் ஏல முறை தற்போது பொது படுகடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் அலுவலகம் முழு செயல்பாட்டு சுதந்திரத்துடன் செயல்பட ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.இலங்கையின் மொத்த உள்நாட்டு கடன் இருப்பு ரூ. 31 ட்ரில்லியன் என்றும், அதில் ரூ. 15.6 டிரில்லியன் திறைசேரி உண்டியல்கள் வடிவத்திலும், ரூ. 15.4 ட்ரில்லியன் திறைசேரிப் பத்திரங்கள் வடிவத்திலும் உள்ளன என்பதை அரசாங்க நிதி பற்றிய குழு அவதானித்தது. அந்த மொத்தக் கடனின் சராசரி செலவு 8.73 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் சேவைத் தேவை 2504 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதும் அவதானிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி  2100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 858 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டக் கடன்களாகவும், 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  உலக வங்கியிடமிருந்து வரவுசெலவுத்திட்டத்திற்கான ஒத்துழைப்பாகவும், 380 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் (ADB) மற்றும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலமும் பெறப்பட உள்ளன என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.அதன்படி, அந்த ஆண்டிற்கான கடனைத் தீர்க்க 400 மில்லியன் டொலர்களுக்கு மேலும் கூடுதல் வளமுகாமைத்துவ இடைவெளி இருப்பதும் அவதானிக்கப்பட்டது.


2026-02-24

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் கூடியது

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் 2026.02.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் வலுசக்தித் துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.இந்த உபகுழு மின்சாரத்திற்கான கேள்வி முகாமைத்துவம் (DSM), கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமைகள், LTL ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவனத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், சூரிய சக்தி சமர் திட்டம் மற்றும் வலுசக்தி மூலமாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தது. இந்த உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களைத் தலைமையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவாகும்.


2026-02-20

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டனமோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.(203 அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2463/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி உரிமை அறவீடு தொடர்பான ஒழுங்குவிதியை திருத்துவதற்கும், 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான ஒழுங்குவிதி என்பவற்றுக்கு குழு அனுமதி வழங்கியது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கூடியபோதே இந்த ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர். போக்குவரத்துத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எச்.எம்.தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார். தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள்,  மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), ஆகியோருக்கான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models)  உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார். உப குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்து  அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அதேநேரம், போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய குறைபாடுகள் குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.  இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks