பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-03-06
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (பெப். 27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம், (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றனர். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரவீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி சந்திரகலா ஞானேஸ்வரன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
புள்ளிவிபரங்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,000ற்கும் அதிகமான இயலாமையுடைய நபர்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களுக்கு 14 அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதாக அமைந்தது. இம்மாவட்டத்தில் உள்ள 183 இயலாமையுடைய மாணவர்களுக்கு 23 கல்வி அலகுகளில் சேவையாற்றுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட 21 ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் எடுத்துக் கூறினார். இயலாமையுடைய நபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்குதல், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் நுழைவதற்குக் காணப்படும் மட்டுப்பாடுகள் குறித்தும் அவர் இங்கு தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம். அரசாங்க வேலைவாய்ப்புக்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் தடைகள் குறித்து கல்வி அமைச்சுடன் இம்மாதத்தில் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதனால் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இணைந்து இதனை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், மட்டக்களப்பில் இதுவரை எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத இயலாமையுடைய நபர்களைக் கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவது முக்கியமானது என வலியுறுத்தினார். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாகப் பெற்றக் கொடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமை உடைய நபர்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பற்றியும், அவ்வாறான நபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றியும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சேவை வழங்கலில் தொடர்ந்து நிலவி வரும் குறைபாடுகளையும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களையும் குறித்து கவனம் செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமைய உடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குழுவிற்கு எடுத்துரைத்தனர். கல்விக்கான மானியங்களை நீடிப்பது, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பரீட்சைகளில் தோன்றும்போது காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் பிரையில் போன்ற மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறச் செய்யும்போது நேர விரயத்தைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குதல், அரசாங்க அலுவலகங்களை நாடும் இயலாமை உடையும் நபர்கள் படிகளில் ஏறவேண்டிய தேவை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தமக்குக் காணப்படும் பிரச்சினைகளை இங்கு முன்வைத்தனர்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், ஏனையவை மாவட்ட அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அத்துடன், சில விடயங்களுக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால கொள்கை மறுசீரமைப்புக்கான தேவையை ஒன்றியம் வலியுறுத்தியது.
மாவட்ட ரீதியாகச் சென்று நாடு முழுவதிலும் உள்ள இயலாமை உடைய நபர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குத் தேவையான தீர்வுகளை முன்வைப்பதில் ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வானது, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2026-03-30
2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-30
விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-03-30
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-03-24
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு அமைய தேவையான அடிப்படை விழிப்புணர்வைப் பெறுவதற்காக, இந்த விசேட குழுவின் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.அதேநேரம், இந்த விசேட குழு அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் செயற்படும் என்பதால் தேவைப்படும் சில சில தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட துறை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அவ்ப்போது அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த விசேட குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதாவது 2026.06.19ஆம் திகதியாகும்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் விரைவில் கூட்டங்களை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் கூறினார். குழுவின் செயற்பாட்டு வரம்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தித்வா புயல் போன்ற எதிர்கால நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இதில் உள்ளடக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks