2024-02-06
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து அச்சட்டம் இயற்றப்பட்டமை தொடர்பான தவறான தகவல்களைத் திருத்தி உண்மையினைத் தெளிவுபடுத்துவதற்காகப் பொதுமக்களின் நலன் கருதி இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்காகவும் சட்டமியற்றல் செயன்முறை ஆரம்பத்தில் இருந்து விளக்கப்படுகின்றது.
சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில், அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அச்சட்டமூலத்தினை உயர் நீதிமன்றத்தின் முன் சவாலுக்குட்படுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம், உயர் நீதிமன்றம் அவற்றினைப் பரிசீலித்த பின்னர், சம்பந்தப்பட்ட தீர்ப்பு சபாநாயகருக்கு மூன்று வாரங்களினுள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அதன் பின்னர், அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வின் முதலாம் நாளன்று சம்பந்தப்பட்ட அத்தீர்ப்பினைச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்பதுடன் முழுமையான தீர்ப்பு அன்றைய நாளுக்கான ஹன்சாட் அதிகார அறிக்கையில் வெளியிடப்பட வேண்டும் என அவர் கட்டளையிடவும் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயன்முறையினைத் தொடர்ந்து, 2023 ஒக்டோபர் 03 அன்று நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், உயர் நீதிமன்றத் தீர்ப்பினை 2023 நவம்பர் 07 அன்று பாராளுமன்றத்தில் வாசித்த சபாநாயகர், அத்தீர்ப்பு அன்றைய நாளுக்கான ஹன்சாட் அதிகார அறிக்கையில் வெளியிடப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதன் பின்னர், ஆர்வமுள்ள எத்தரப்பினாலும் அணுகக் கூடிய விதத்தில் அது ஒரு பகிரங்க ஆவணமாக மாறியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சு (இந்த விடயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு) சட்ட வரைஞர் திணைக்களத்தின் உதவியுடன் உத்தேச திருத்தங்களை ஒருங்கிணைக்கின்றது. இத்திருத்தங்களை ஒருங்கிணைப்பது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக, அரசியலமைப்புடன் பொருந்தும் வகையில், சட்டமூலத்தினைச் சமர்ப்பித்த தரப்பினால் நிறைவேற்றப்படுகின்றது. திருத்தங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மும்மொழிகளிலும் விநியோகிக்கப்படுகின்றன. இதே செயன்முறை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்திற்கும் பின்பற்றப்பட்டதுடன், இச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தின் முதலாம் நாளான 2024 சனவரி 23 அன்று காலையில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தங்கள் மும்மொழிகளிலும் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டதுடன், குழு நிலையானது இரண்டாம் நாளான 2024 சனவரி 24, பி.ப. 5.00 மணிக்கு ஆரம்பமானது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட திருத்தங்களின் பட்டியலின் பிரகாரம், ஒவ்வொரு திருத்தத்தினையும் நிறைவேற்றுவதற்காக அதனை வாசகம் வாசகமாகச் சபாநாயகர் சபையில் சமர்ப்பித்தார். அச்சந்தர்ப்பத்தில், சட்டத்துறைத் தலைமையதிபதியினைப் பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்தில் அரசாங்க அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில் சமூகமளித்திருந்த மேலதிக மன்றாடியார் நாயகம், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைவாகச் சகல கட்டாயமான திருத்தங்களும் குழு நிலையின் போது திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதைச் சபாநாயகருக்கு அறிவித்தார். இச்சந்தர்ப்பதில் கௌரவ எம். ஏ. சுமந்திரன் சில கரிசணைகளை எழுப்பிய சந்தர்ப்பத்தில், இது தொடர்பாகக் கௌரவ உறுப்பினருக்கு மேலும் விளக்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகத்தினைச் சபாநாயகர் வேண்டியமைக்கு மேலதிக மன்றாடியார் நாயகம் இயைபுற்றார்.
குழு நிலையின் போது குறிப்பிட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் எந்தச் சட்டமூலத்திற்கும் ஏற்புடையதான செயன்முறையின் பிரகாரம் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் மூன்றாம் மதிப்பீட்டின் பின்னர் பாராளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் வழிகாட்டப்பட்டவாறாக, இந்தத் திருத்தங்கள் அரசியலமைப்புடன் பொருந்துகின்றன எனும் சான்றறிவிப்பினைச் சட்டத்துறைத் தலைமையதிபதி வழங்கினார்.
இந்த ஒட்டுமொத்தச் செயன்முறையின் போதும், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு தரப்பினாலும் எந்தத் திருத்தத்தினையும் / திருத்தங்களையும் மற்றும் / அல்லது விதப்புரையினையும் / விதப்புரைகளையும் முன்மொழிவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ சபாநாயகருக்கு எவ்விதமான வகிபாத்திரமோ அல்லது அதிகாரமோ இல்லை என்பதுடன், இங்கே இவ்வாறான செயற்பாட்டிற்கான முழு அதிகாரமும் பாராளுமன்றச் சபையிடம், அதாவது, உறுப்பினர்களிடமே, பொதுவாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டமூலமொன்று உரிய முறையில் நிறைவேற்றப்பட்டதும், அரசியலமைப்பின் 79 ஆம் மற்றும் 80 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அச்சட்டமூலத்திற்கான சான்றறிவிப்பினை அங்கீகரிப்பதற்குச் சபாநாயகர் கடப்படுத்தப்பட்டுள்ளார். இதன் பிரகாரம், 2024 பெப்ரவரி 01 அன்று நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்திற்கான சான்றறிவிப்பினைச் சபாநாயகர் அங்கீகரித்து அதனை, 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டமாக ஆக்கினார்.
எனவே, சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவாறாக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது என்பதைச் சபாநாயகரின் அலுவலகம் வாக்குமூலமாகத் தெரிவிக்கின்றது. பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயன்முறை சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்துடனும் சட்ட வரைஞர் திணைக்களத்துடனும் சேர்ந்து கூட்டாக இடம்பெறுவதால் சட்டமூலம் ஒன்று தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணான விதத்திலோ அல்லது அரசியலமைப்பினை மீறும் விதத்திலோ செயற்படுவதற்கு வாய்ப்பில்லை.
இச்செயன்முறையினை நன்கறிந்திருக்க வேண்டியவர்களே வேறு விதமாக இது பற்றிக் குறிப்பிடுவது மனம் வருந்தத் தக்கது என்பதுடன் சபாநாயகர் அவரின் தற்றுணிபுக்கு ஏற்பச் சட்டங்களை இயற்றலாம் மேலும் சட்டமூலங்களுக்குத் திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்கின்ற அவர்களின் மறைமுகக் குறிப்பீடுகள் அவர்களுக்கேயுரிய சட்ட அறிவிக்கும் அரசியலமைப்பு அறிவுக்கும் இழுக்கானதாகும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்களுடன் இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கு இறுதிக் குழு நிலையின் போது சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களம் சமூகமளிப்பதற்கு (2017 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் முதல்) எந்த உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் போதிய ஆதாரமாக இருந்ததோ அந்த உறுப்பினர்களின் உளச்சான்றில் முன்னேற்றத்தினைக் காண்பது ஊக்கமளித்தாலும், என்னென்ன விதப்புரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதைச் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கூறினால், மேலே விளக்கப்பட்டவாறு இவ்வாறான விடயங்களில் சபாநாயகருக்கு தற்றுணிபு இல்லை என்கின்ற காரணத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இயலுமாக இருக்கும்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டத்தினை நிறைவேற்றியமை தொடர்பிலான சகல ஆவணங்களையும் நடவடிக்கைமுறைகளையும் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வந்து ஆராயுமாறும் விடயங்களைச் சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்காக விடயத்தில் அறிவுடைய அதிகாரிகளைக் கலந்தாலோசிக்குமாறும் அழைக்கப்படுகின்றனர்.
ஒரு சனநாயக முறைமையில் சட்டவாக்கத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துவதோ அல்லது அதன் நம்பகத்தன்மையினைக் கீழறுப்பதோ நன்மை பயக்கும் ஓர் உபாயமார்க்கமல்ல. சனநாயக முறைமையில் ஒட்டுமொத்த மதிப்பீடும் சட்டவாக்கம் உள்ளிட்ட சகல பாகங்களினதும் கூட்டுச் செயற்பாட்டினையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதைச் சகல உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அலுவலகம் மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றது.
2026-09-14
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததாகச் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்களின் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-09-11
சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
2026-09-11
அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை கௌரவ சபாநாயகர் அவர்கள் சபையில் அறிவிப்பார் என்பதற்கு உட்பட்டதாக, குறித்த இரண்டு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026-09-09
பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.