பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-12-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்திற்கு அமைய 04.12.2023 திகதி வரை வரி நிலுவைத் தவணையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், 2023 ஜூன் 30ஆம் திகதியில் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான வரி நிலுவை காணப்படும் வரி செலுத்துபவர்களின் பட்டியலை வழங்குமாறு, 2023.07.24 ஆம் திகதி குழுவில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு குழு அமர்வுகளில் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிய போதும் அதனை இதுவரை வழங்காமை ஏன் என்பது குறித்தும் வழி வகைகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கோரியிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பட்டியலை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில பரிந்துரைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, கால அவகாசம் கோரியமை, பரிந்துரைகளை நிறைவேற்றாமை தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டீப் தவிர ஏனைய நிறுவனங்களின் கோதுமை இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களும் பெருமளவு கோதுமை மா தொகையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 16 ரூபா வீதம் வரி விதித்ததன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கணிசமான இலாபம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அத்துடன், சீனிக்குக் காணப்பட்ட விசேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டதன் மூலம் சீனி இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 8500 டொன் சீனியை சந்தைக்கு விநியோகத்தமையின் காரணமாக கணிசமான இலாபம் சம்பந்தப்பட் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் ஈட்டப்பட்ட அதிக இலாபத்துக்கான வரியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வரி ஏய்ப்புச் செய்த, வரி செலுத்தாத, முறைப்பாடு உள்ள வரி செலுத்துனர்களின் நிலுவை வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்தில் காணப்பம் வரி நிலுவை (Collectable taxes) 173 பில்லியன் ரூபாவை மீண்டும் வசூலிப்பதற்கான திட்டத்த தயாரித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட 39 பரிந்துரைகளில், மதுபான உற்பத்திக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஆகக் குறைந்தது 10 மில்லியன் ரூபாவரைஅதிகரிப்பது தொடர்பான குழுவின் பரிந்துரை மற்றும் மாவட்டத்துக்குள் ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு மேலான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் இவற்றை நிறைவேற்றாமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், மதுவரித் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்கு அமைய ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பதிரத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது காண்பிக்கப்படுவதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு குழு வலியுறுத்தியது.
மேலும், தற்போது 46 கள் உற்பததி நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றைக் கண்காணித்து நாளாந்தம் உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்க குழுவின் பரிந்துரைக்கு அமைய கையடக்கத்தொலைபேசி செயலியை தயாரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுங்க தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஸ்கானர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், நிதி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச தனியார் கூட்டுத்திட்டமாக இதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அனர்த்த முகாமைத்துவம், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள யாசகர்கள் பற்றிய கணக்கெடுப்பு பற்றிய விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் குழுக் கூடு்டத்தில் நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், நலன்புரி நன்மைகள் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்ஹ, கௌரவ இஷாக் ரஹ்மான் மற்றும் கௌரவ சுதத் மஞ்சுளஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

