பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-12-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்திற்கு அமைய 04.12.2023 திகதி வரை வரி நிலுவைத் தவணையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், 2023 ஜூன் 30ஆம் திகதியில் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான வரி நிலுவை காணப்படும் வரி செலுத்துபவர்களின் பட்டியலை வழங்குமாறு, 2023.07.24 ஆம் திகதி குழுவில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு குழு அமர்வுகளில் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிய போதும் அதனை இதுவரை வழங்காமை ஏன் என்பது குறித்தும் வழி வகைகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கோரியிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பட்டியலை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில பரிந்துரைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, கால அவகாசம் கோரியமை, பரிந்துரைகளை நிறைவேற்றாமை தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டீப் தவிர ஏனைய நிறுவனங்களின் கோதுமை இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களும் பெருமளவு கோதுமை மா தொகையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 16 ரூபா வீதம் வரி விதித்ததன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கணிசமான இலாபம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அத்துடன், சீனிக்குக் காணப்பட்ட விசேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டதன் மூலம் சீனி இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 8500 டொன் சீனியை சந்தைக்கு விநியோகத்தமையின் காரணமாக கணிசமான இலாபம் சம்பந்தப்பட் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் ஈட்டப்பட்ட அதிக இலாபத்துக்கான வரியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வரி ஏய்ப்புச் செய்த, வரி செலுத்தாத, முறைப்பாடு உள்ள வரி செலுத்துனர்களின் நிலுவை வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்தில் காணப்பம் வரி நிலுவை (Collectable taxes) 173 பில்லியன் ரூபாவை மீண்டும் வசூலிப்பதற்கான திட்டத்த தயாரித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட 39 பரிந்துரைகளில், மதுபான உற்பத்திக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஆகக் குறைந்தது 10 மில்லியன் ரூபாவரைஅதிகரிப்பது தொடர்பான குழுவின் பரிந்துரை மற்றும் மாவட்டத்துக்குள் ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு மேலான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் இவற்றை நிறைவேற்றாமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், மதுவரித் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்கு அமைய ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பதிரத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது காண்பிக்கப்படுவதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு குழு வலியுறுத்தியது.
மேலும், தற்போது 46 கள் உற்பததி நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றைக் கண்காணித்து நாளாந்தம் உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்க குழுவின் பரிந்துரைக்கு அமைய கையடக்கத்தொலைபேசி செயலியை தயாரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுங்க தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஸ்கானர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், நிதி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச தனியார் கூட்டுத்திட்டமாக இதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அனர்த்த முகாமைத்துவம், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள யாசகர்கள் பற்றிய கணக்கெடுப்பு பற்றிய விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் குழுக் கூடு்டத்தில் நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், நலன்புரி நன்மைகள் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்ஹ, கௌரவ இஷாக் ரஹ்மான் மற்றும் கௌரவ சுதத் மஞ்சுளஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

