2023-12-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்திற்கு அமைய 04.12.2023 திகதி வரை வரி நிலுவைத் தவணையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், 2023 ஜூன் 30ஆம் திகதியில் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான வரி நிலுவை காணப்படும் வரி செலுத்துபவர்களின் பட்டியலை வழங்குமாறு, 2023.07.24 ஆம் திகதி குழுவில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு குழு அமர்வுகளில் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிய போதும் அதனை இதுவரை வழங்காமை ஏன் என்பது குறித்தும் வழி வகைகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கோரியிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பட்டியலை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில பரிந்துரைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, கால அவகாசம் கோரியமை, பரிந்துரைகளை நிறைவேற்றாமை தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டீப் தவிர ஏனைய நிறுவனங்களின் கோதுமை இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களும் பெருமளவு கோதுமை மா தொகையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 16 ரூபா வீதம் வரி விதித்ததன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கணிசமான இலாபம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அத்துடன், சீனிக்குக் காணப்பட்ட விசேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டதன் மூலம் சீனி இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 8500 டொன் சீனியை சந்தைக்கு விநியோகத்தமையின் காரணமாக கணிசமான இலாபம் சம்பந்தப்பட் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் ஈட்டப்பட்ட அதிக இலாபத்துக்கான வரியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வரி ஏய்ப்புச் செய்த, வரி செலுத்தாத, முறைப்பாடு உள்ள வரி செலுத்துனர்களின் நிலுவை வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்தில் காணப்பம் வரி நிலுவை (Collectable taxes) 173 பில்லியன் ரூபாவை மீண்டும் வசூலிப்பதற்கான திட்டத்த தயாரித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட 39 பரிந்துரைகளில், மதுபான உற்பத்திக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஆகக் குறைந்தது 10 மில்லியன் ரூபாவரைஅதிகரிப்பது தொடர்பான குழுவின் பரிந்துரை மற்றும் மாவட்டத்துக்குள் ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு மேலான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் இவற்றை நிறைவேற்றாமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், மதுவரித் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்கு அமைய ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பதிரத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது காண்பிக்கப்படுவதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு குழு வலியுறுத்தியது.
மேலும், தற்போது 46 கள் உற்பததி நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றைக் கண்காணித்து நாளாந்தம் உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்க குழுவின் பரிந்துரைக்கு அமைய கையடக்கத்தொலைபேசி செயலியை தயாரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுங்க தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஸ்கானர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், நிதி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச தனியார் கூட்டுத்திட்டமாக இதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அனர்த்த முகாமைத்துவம், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள யாசகர்கள் பற்றிய கணக்கெடுப்பு பற்றிய விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் குழுக் கூடு்டத்தில் நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், நலன்புரி நன்மைகள் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்ஹ, கௌரவ இஷாக் ரஹ்மான் மற்றும் கௌரவ சுதத் மஞ்சுளஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2026-07-23
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
2026-07-22
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு, பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
2026-07-22
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.
2026-07-22
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.