பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-10-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.10.19ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) அரச ஈட்டு முதலீட்டு வங்கி அழைக்கப்பட்டிருந்தது.
இதில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2020, 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை என்பன ஆராயப்பட்டன. இதில் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.
முழுமையாக தனியங்கி வங்கிக் கட்டமைப்பை நிறுவுவதில் தாமதம்
இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய முழுமையாகத் தானியங்கி வங்கிக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
போட்டித் தன்மை நிறைந்த வங்கியாகச் செயற்படுவதற்கான அவசியம்
வங்கியின் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் மேம்பட்ட நிலையை அடைவதற்கும் வணிக மட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. வங்கியின் பிரதான நோக்கங்களில் இருந்து முற்றாக விலகாமல், போட்டித் தன்மை நிறைந்த வங்கியாகப் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, வங்கியின் நாமத்தைப் பொதுமக்கள் மத்தியில் புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான முறையில் (மறுபெயரிடுதல்) ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்துக் கடன் பெற்றமையால் 68 மில்லியன் ரூபா நட்டம்
2017ஆம் ஆண்டு, சிலர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன்களைப் பெற்றதன் காரணமாக, வங்கிக்கு ஏற்பட்ட 68 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஈடுசெய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. வங்கியில் பணியாற்றிய சில அதிகாரிகளின் உதவியுடன் கடன்களுக்கு விண்ணப்பித்த 49 பேருக்கு உரிய கடன் தொகையை கொடுத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளமையும் இங்கு வெளிப்பட்டது. சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக 8 மில்லியன் ரூபா கிடைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன், இந்தப் பணத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது. இந்த விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
செயற்படாத கடன் விகிதத்தை உயர்ந்த மட்டத்தில் பேணவும்
வங்கியின் செயற்படாத கடன் விகிதத்தின் சராசரி மதிப்பைவிட,10 கிளைகள் அதிக செயல்படாத கடன் விகிதத்தை பதிவு செய்திருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதால், நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


