logo

E   |   සි   |  

2023-09-06

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கைப் பாராளுமன்றத்தில் இயலாமையுடன் கூடியவர்களின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பில் நிகழ்ச்சித்திட்டம்

இலங்கைப் பாராளுமன்றத்தில் இயலாமையுடன் கூடியவர்களின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு சில தெரிவு செய்யப்பட்ட பணியாட்தொகுதி அங்கத்தவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2023 ஆகஸ்ட் 18 முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது.  

இதில் இயலாமையுடன் கூடியவர்களை உள்வாங்குவதற்கான பாராளுமன்ற செயலணி, பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு மற்றும் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு, பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இயலாமையுடன் கூடியவர்களை உள்வாங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை வலுப்படுத்தும் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட முடியும்.

முழுப் பாராளுமன்ற வழக்கத்தையும், டிஜிட்டல் மற்றும் சமூக வெளிகளை இயலாமையுடன் கூடியவர்களுக்கு நட்புறவானதாக மாற்றுவதற்கு தற்பொழுது இலங்கை பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இயலாமையுடன் கூடியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு பிரவேசிப்பதற்கான இயலுமை தொடர்பான விரிவான பகுப்பாய்வு இந்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கைக்கு அமைய, பௌதிகக் கட்டடங்கள், பாராளுமன்ற இணையத்தளம் மற்றும் டிஜிட்டல் பொதுவெளி என்பன இயலாமையுடன் கூடியவர்களுக்கு நட்புறவானதாக மாற்றுதல் மற்றும் பணியாட்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இயலுமை அபிவிருத்தி உள்ளிட்ட விருத்தி செய்யப்பட வேண்டிய பல துறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இது தொடர்பில் தொடர்ச்சியாகவும் நிலைபேறான முறையுடனும் பணியாற்றுவதற்காக இயலாமையுடன் கூடியோரை உள்ளடக்குவது மீதான விசேட செயலணியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியமித்தார். செயலணியானது அனைத்து திணைக்களங்களினதும் தலைவர்களை உள்ளடக்கியிருப்பதுடன் பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகத்தினால் தலைமை தாங்கப்படுகிறது. மேலும் மதிப்பீட்டு அறிக்கையின் சிபார்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றச் செயலகம் என்பவற்றின் சூழமைவில் இயலாமையுடன் கூடியவர்களை உள்ளடக்கிக்கொள்ளும் பல்வேறு அம்சங்கள் மீது கவனம் குவிக்கும் மொடியுல்களுடன் ஒரு பயிற்சிக் கையேடு விருத்தி செய்யப்பட்டது. கையேடானது உள்ளுர் கருத்துப் பரிமாற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் என்பதுடன் எதிர்காலத்தில் இயலுமையை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

சூழல், மனப்பாங்கு மற்றும் நிறுவன ரீதியாகக் காணப்படும் தடைகளுக்கு முகங்கொடுக்கும் இயலாமையுடன் கூடியவர்கள், அங்கவீனம் மாத்திரமல்லாமல் சமூகத்தில் பொதுவான பிரஜையாக இருப்பதற்கும் தடைகள் காணப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த அமர்வுகளின்பொழுது பங்குபற்றுனர்கள் ஒரு அடிப்படை உணர்வூட்டல் ஊடாக கொண்டு செல்லப்பட்டதுடன், அதிலே மனித உரிமைகள் பார்வைநோக்கிலிருந்து இயலாமையுடன் கூடியோரைப் புரிந்துகொள்ளுதல் மற்றும்  கருத்துருவாக்கத்தின் முக்கியத்துவம்  என்பனவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன. இம் மாதிரியானது இயலாமையுடன் கூடிய ஆட்களுக்கான எல்லா மனித உரிமைகளையும் முழுமையாகவும் சமனாகவும் அனுபவிப்பதை உறுதிப்படுத்துகிறது, அவர்களது பிறப்புரிமையாக வந்த மகத்துவத்தை மதித்தல், சம சந்தர்ப்பங்கள் மீது கவனம் குவித்தல் என்பவற்றுடன் சமூகத்தில் பாரபட்சமின்மை மற்றும் பங்குபற்றுகையை அமுல்படுத்துவதை இது ஊக்கவிக்கிறது. இயலாமையுடன் கூடிய ஆட்களை  சமூக அனுதாபம் தேவையான ஆட்களாக அல்லாமல் சம உரிமை கொண்டவர்களாக சமூகம் பார்ப்பதை இது உறுதி செய்கிறது.

ஆகவே இவ்வாறான தடைகளை அகற்றினால் இயலாமையுடன் கூடிய பின்னணி ஏற்படுவதில்லை என்பதுடன், சமூகம் மற்றும் நிறுவன ரீதியாக, இயலாமையுடன் கூடியவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தடைகள் இன்றி சாதாரண நபர் ஒருக்கு போன்று சமூகத்தில் பங்கெடுக்கக் கூடிய வகையில் தடைகளை நீக்குவதற்கு நம் முயற்சிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்கள் இயலாமையுடன் கூடியவர்களின்  யதார்த்தங்களை நன்கு புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் பிரயோக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒரு தொகுதி உள்நாட்டுப்  பயிற்சியாளர்கள் அவதானிப்பாளர்களாக நிகழ்ச்சிகளில் இணைந்து கொண்டதுடன், இந்த துறை தொடர்பான பல வருடங்கள் அனுபவம் கொண்ட சர்வதேச பயிற்சியாளர் ஒருவரால் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு தேசிய ஜனநாயக நிறுவகத்தினால் ஆதரவளிக்கப்பட்டதுடன் USAID இனால் நிதி அனுசரணை வழங்கப்பட்டது.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks