E   |   සි   |  

2023-05-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உயர்கல்வியில் பல மறுசீரமைப்புகள் தொடர்பில் கோப் குழு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை

முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை ஒரு மாதத்திற்குள் தயாரித்து பகிரங்கப்படுத்துமாறு அறிவுறுத்தல்

Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக நடைமுறைப் பரீட்சை நடத்தி பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துவதற்குப் பரிந்துரை

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் பரிந்துரை

உயர்கல்வி மற்றும் ஏழு ஆண்டு விடுமுறையின் கீழ் வெளிநாட்டு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய 2 பில்லியன் ரூபாய் நிலுவையை பெற்றுக்கொள்ள விரைவில் வேலைத்திட்டம்

பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்துவதற்கு குழு வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.04.28 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.

இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

  1. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான சிக்கல்கள்
  2. Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சை நடத்துவதால் உயர்ந்த Z புள்ளிகளைக் கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதி
  3. பல்கலைக்கழ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் சரியான முறைமையொன்று இல்லாமை
  4. முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை காரணமாக சட்டவிரோதமாக கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்தல்
  5. தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பான ஒழுங்குவிதி
  6. தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிற் சந்தைக்குப் பொருத்தமான வகையில் பாடநெறிகளை தயாரிப்பதன் அவசியம்
  7. பல்கலைக்கழ சேமலாப நிதியம் (UPF) தவறாகப் பயன்படுத்துவதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியம்
  8. பல்கலைக்கழக கட்டமைப்பின் மனிதவளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுதல்
  9.  அதிகமான வெளிநாட்டு மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம்
  10. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைப்பத்திர மதிப்பீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில்  அந்தப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான தலையீடு செய்தல்

இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழிற் சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 2021 இல் பல்கலைக்கழக நுழைவு கிடைக்கும் 26 வீதமானவர்கள் கலைத்துறையில் உயர்தரத்துக்கு தோற்றியவர்கள் என்றும் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசிப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவாகும் எனவும் இதன்போது புலப்பட்டது. எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் பல்கலைக்கழகம் பிரவேசிப்பவர்கள் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய குழு  இந்தநிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.

இந்நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகள் 2952 உள்ளன எனவும், அவற்றில் 1011 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் எனவும், 1941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அதாவது உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகளில் 65.75%இல் விஞ்ஞானத்துறை இல்லாமை சிக்கலானது என இதன்போது கலந்துரையாடப்பட்டது. STEM கல்வி முறையினூடாக இதற்கு தீர்வு வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் விரைவாகத் தலையிட்டு உயர்கல்விக்கு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் அதிக மாணவர்களை அனுப்புவதற்குத் தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.         

நவீன தகவல் தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதனால் தாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட ஆணைக்குழுவின் வேலைத்திட்டத்தைப் பாராட்டிய கோப் குழு, மேலும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களை சர்வதேச அளவுக்கு தரமுயர்த்த வேண்டும் என தெரிவித்தது. விசேடமாக சர்வதேச மாணவர்களை இந்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு அதிகமாக கொண்டுவருவதற்கு தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
ஒரு வருடத்துக்கு 90,000 ரூபாய்க்கு திறந்த பல்கலைக்கழகத்தினால் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. பொதுவாக தனியார் பல்கலைக்கழகமொன்றில் சுமார் 2 – 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த பட்டத்தை 3 இலட்சம் ரூபாவிற்கும் குறைவான செலவில் கற்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாக இது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவிற்கு குழு உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது. உயர்கல்வி நிறுவனங்களில் தரத்தை உறுதி செய்வதற்கான  (Quality Assurance) புதிய சட்டத்தின் மூலம் தனி நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பான யோசனை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதே மிகவும் பொருத்தமானது என குழு சுட்டிக்காட்டியது. இதற்கான அதிகாரங்கள் ஆணைக்குழுவுக்கு ஏன் வழங்க வேண்டும் என்பதை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் தெரிவிக்குமாறு குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், அது தொடர்பாக தலையிடுவதற்கு கோப் குழு தயாராக இருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபாய் அறவிட வேண்டும் என்பது இதன்போது தெரியவந்தது. இத்தொகையை உரிய உத்தரவாதம் வழங்கியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு வெளிநாடு சென்ற 617 ஆசிரியர்களில் 84 பேரே இதுவரை உரிய கொடுப்பனவுகளை செய்துள்ளதாக தெரியவந்தது. அதன்படி, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

பல்கலைக்கழக பிரவேசத்தின் போது ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் கவனம் செலுத்திய குழு, இதன் மூலம் அதிக Z புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியது. அந்தப் பாடங்களுக்கு உயர்தரப் பரீட்சையின் போதும் நடைமுறைப் பரீட்சை நடத்தப்பட்டு Z புள்ளிகள் வழங்கப்படுவதால் மேலும் நடைமுறைப் பரீட்சை அவசியமில்லை என வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது.

கணக்காய்வாளர் நாயகம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியபடி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் முறைமையொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு கோப் குழு மானியங்கள் அணைக்குழுவுக்குப்பரிந்துரைத்தது.

ஒரு சிலர் பல்வேறு நிறுவனங்களால் சட்டரீதியற்ற வகையில் வழங்கப்படும் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை பயன்படுத்துவது குறித்து குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனால் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்கள் இழிவுபடுத்தப்படுவதால் இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழு தலையிட வேண்டும் என குழு வலியுறுத்தியது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதங்களில் மீண்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-09-08

இளைஞர் யுவதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-07

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பொலிஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் விளக்கம் கோரியது

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் விடயங்கள் கேட்டறிந்தது.குறித்த குழு கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு அமைய தித்வா சூறாவளியின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியத்திஸ்ஸ அவர்களும் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். தித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-07

இயலாமையடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அடுத்த ஆண்டுக்கான செயற்றிட்டம் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,  பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-04

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த  சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks