பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (25) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) நான்கு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 19.01.2023ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றிருந்ததுடன், இதில் பின்வரும் விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது,
1. சந்தையில் முட்டைக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில் உற்பத்திச் செலவை மதிப்பீடு செய்யப் பரிந்துரை
கடந்த கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வர்த்தக மற்றும் கமத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், முட்டை தொடர்பான செலவீனங்களை கணக்கில் கொண்டு முட்டைக்கான விலையைத் தீர்மானிக்கும் விலைச் சூத்திரத்தை இங்கு முன்வைத்தனர்.
முன்வைக்கப்பட்ட விலைச்சூத்திரம் மற்றும் அது தொடர்பான ஆழமான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, விலைச்சூத்திரத்தை பயன்படுத்துவதில் காணப்படும் நடைமுறை ரீதியான அக்கறைகள் இருப்பதால் விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்யுமாறு கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை வழங்கினார்.
குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்வதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறையின் பாதுகாப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கோப் குழு வலியுறுத்தியதுடன், அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
கோழிப் பண்ணைத்துறை ஸ்திரம் அடையும் வரை ஒன்றரை மாத காலங்களுக்கு முட்டையொன்றின் விலை 51 ரூபாவாகப் பேணப்படுமாயின் அதன் பின்னர் முட்டை விலையைக் குறைக்க முடியும் என கோழிப் பண்ணைகளின் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.
கோழிப் பண்ணைத்துறையைப் பாதுகாக்கும் அதேநேரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாவனையாளர்கள் மற்றும் ஏனைய சகல தரப்பினரின் பக்கத்திலிருந்து இவ்விடயத்தை நோக்கி, அதற்கமைய செயற்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது.
3. சந்தையில் முட்டைக்குக் காணப்படும் தட்டுப்பாடு குறித்து கூர்ந்தாய்வு
நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 மில்லியன் முட்டைக்கான தற்காலிக தட்டுப்பாடு காணப்படுவதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இதற்குத் தீர்வாகக் கோழிப் பண்ணைத் துறையில் துரித நடவடிக்கைகள் எதுவும் இல்லையென இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டையை இறக்குமதி செய்ய இணங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
4. நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு முட்டையை வழங்குவது குறித்து அவதானம்
கோப் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாவனையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கோப் குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.
எனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பொது மக்களுக்குத் தெரிவிக்கவும், கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வைக் காண்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துமாறும் கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக, கௌரவ நிமல் லான்சா, கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த, கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


