E   |   සි   |  

2021-09-01

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் - சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும்  வெற்றிகொள்ள சீன அரசாங்கம்  முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், எமது நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார். சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் இடையில் நேற்று (31) நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் மூன்றாவது பிரஜையும், சீன ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் எனக் கருதப்படும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் உபதலைவர் (பிரதி சபாநாயகர்) வூ வெஹ்வா அவர்கள், சீன நிதி அமைச்சர் லியூ குன் அவர்கள் உட்பட அந்நாட்டின் பிரபல அமைச்சர்கள் குழு வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்ட இந்தக் கூட்டம் கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்பட்ட பின்னர் சீன பாராளுமன்றம் நடத்திய முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டம் என்பது விசேடமாகும்.

எமது நாட்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ சபாநாயகருக்கு மேலதிகமாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள், பாராளுமன்றத்தின் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்கள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்,இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், பிராந்திய ஒத்துழைப்பு விவகாரத்துக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அவர்கள் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தற்பொழுது நிலவும் கொவிட் சூழலுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சபாநாயகர் இதன்போது கோரியிருந்ததுடன், இது தொடர்பில் சீன ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சீன சபாநாயகர் உறுதியளித்தார்.

1957ஆம் ஆம் ஆண்டு இலங்கை-சீன இராஜதந்திர உறவுகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்  இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு வளர்ச்சியடைந்தது என சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கையின் இறையாண்மை, மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்று ஏனைய சவால்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கையின் உண்மையான நண்பனாக சீன அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புத் தொடர்பில் இலங்கை பாராளுமன்றம் மற்றும் இலங்கை மக்களின் சார்பில் சபாநாயகர் சீன அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்தார். விசேடமாக தற்பொழுது நிலவும் கொவிட் சூழலை வெற்றிகொள்ள சீன அரசாங்கம் வழங்கிவரும் சகல ஒத்துழைப்புக்களுக்கும் விசேடமாகத் தனது நன்றியைத் தெரிவித்த சபாநாயகர், சீனா 3 மில்லியன் தடுப்பூசிகளை எமது நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய இதுவரை 18 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இற்றைக்கு 07 வருடங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதி அவர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த சர்வதேச முதலீடுகளின் மூலம் இலங்கை எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டங்களுக்காக சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு சீன அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இந்த முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் ஏனைய உலக நாடுகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், சீன சபாநாயகர் உள்ளிட்ட குழுவினரை இந்நாட்டுக்கு வருமாறும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார். எமது நாட்டு சபாநாயகரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீன சபாநாயகர், கொவிட் சூழல் தணிந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்தார். அத்துடன், கொவிட் சூழல் தணிந்ததும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் சீன சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நாட்டில் கொவிட் சவாலை வெற்றிகொள்ள சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பு அளப்பரியது என இங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். சர்வதேச அரங்கில் சீனா எப்பொழுதும் நெருக்கமான நண்பராக இலங்கைக்கு ஆதரவாக நிற்பதாகவும், எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதி, அதிவேக நெடுஞ்சாலைகள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட திட்டங்கள் சீன அரசாங்கத்தின் தலையீட்டினாலேயே  இந்நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன், தற்பொழுது நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இருநாட்டு மத்திய வங்கிகளுக்கும் இடையில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் சில தொழில்நுட்பக் காரணங்களினால் நடைமுறைப்படுத்த முடியாதுள்ள பின்னணியில், இது தொடர்பில் தயவு செய்து கவனம் செலத்துமாறும் அமைச்சர், சீன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கை சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஆடைகள், தேயிலை மற்றும் மாணிக்கக் கல் போன்ற கைத்தொழில்கள் சீன சந்தையில் நுழைவதற்கான வசதிகளை மேலும் விஸ்தரித்துக் கொடுக்குமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் அமைப்பதற்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட ஏனைய முதலீடுகளுக்கு சீனா முதலீட்டு வசதிகளை வழங்குவதாக சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ இங்கு சுட்டிக்காட்டினார். சீனாவின் நெருங்கிய நட்புநாடாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், இந்தக் கலந்துரையாடலை மேலும் விரிவான முறையில் எதிர்காலத்துக்கு முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் சீன சபாநாயகர் இங்கு உறுதியளித்தார். நிலவும் கொவிட் சூழல் தணிந்ததும் இரு நாட்டுத் தூதுக் குழுக்களின் விஜயங்களின் ஊடாக முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பொதுச் செயலாளர் யங் சென்வூ, சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சட்டக் குழுவின் தலைவரும், இலங்கை சீன நட்புறவு சங்கத்தின் தலைவருமான லீ ஃபெ, தேசிய மக்கள் காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் சாங் ஜெசி, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹூ சியோலி, உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சீனத் தூதுவருமான வூ ஜியாம்காவோ, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு பொது அலுவலகத்தின் ஆய்வு அலுவலகப் பணிப்பாளர் சொங் ரூய் ஆகியோர் சீனத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1.jpg 2

3 4

5 6

7 8

9 10

11

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரில்

கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு  பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.


2026-08-28

பாராளுமன்றம் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஆக. 20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, .ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்த்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறும்.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைநலீன் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுக்ள ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவருதல்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இலங்கை பைத்துல்மால் நிதியம் என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்அஜித் பி.பெரேராஇலங்கை குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்ஹர்ஷ.த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்சுஜீவ திசாநாயக்கபிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்ததல்நந்த பண்டாரமலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்ரீ.கே.ஜயசுந்தரகித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks