logo

E   |   සි   |  

2020-12-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டம்

நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக கௌரவ ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  சிறப்புத் திட்டமொன்று ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சுத் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று(03) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல ஆறுகள் வேகமாக மாசுபடுவதாகவும், இதன் விளைவாக ஏராளமான கழிவுகள் கடலிலும் அதைச் சுற்றியுள்ள சூழலிலும் ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, குறித்த திட்டம் மக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படும். ஆறுகள் உருவாகும் பகுதிகளின் தூய்மைப்படுத்துவதற்கான பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது எதிர்காலத்தில் 'ஆறுகளைப் பாதுகாப்போம்' என்ற முதன்மைத்திட்டமாக இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தெங்கு பயிரிடப்படும் நிலங்களில் மணல் அகழ்வதற்கான உரிமங்கள் வழங்குவது இடைநிறுத்தம்

வடமேற்கு மாகாணத்தில் ஒரு பெரிய அளவிலான மணல் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக மதிப்புமிக்க தெங்கு நிலங்கள் விரைவாக இழக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறித்த செயற்பாட்டுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது உத்தரவிட்டார்.

அம்பாறையிலுள்ள உள்ள ஹெட ஓயா பகுதியில் பல்வேறு  அரசியல்வாதிகளின் பெயர்களைப் பயன்படுத்தி மணல் அகழ்வு மற்றும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தனது  அல்லது வேறு  அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தி மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் மத்திய சுற்றாடல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

கல் மற்றும் மணல் பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி செயலணி

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, இலங்கையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மணல், கல் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கான செயல்முறை மிகவும் முறைசாரா செயல்முறையாக மாறியுள்ளது என்றார். இதனால் கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களையும், களிமண் போன்ற தொழில்துறை மூலப்பொருட்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் வழங்குவதற்கான ஒரு வழிமுறையை வகுக்க 'ஜனாதிபதி செயலணி' ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த செயலணியில் உறுப்பினராக உள்ளவர் என்ற வகையில் செயலணியின் அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் குறித்த விடயங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர், கட்டுமான மூலப்பொருட்கள் துறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும் என்றும், கடத்தல் காரர்களுக்கு பதிலாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை பெற்றுத்தர முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

வெல்லவாய, தனமன்வில, புத்தல மற்றும் பிற பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான பல உண்மைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார அவர்கள் வெளிப்படுத்தினார். குறித்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் மற்றும் மத்திய சுற்றாடல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, வீரசுமன வீரசிங்க, அஜித் ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசிங்க, ரோஹன திசாநாயக்க, குணதிலக்க ராஜபக்ஷ, மஞ்சுலா திசனாயகே, வருண லியானகே, காதர் மஸ்தான், எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்டவர்களும் அரசு அதிகாரிகள் பலரும் இவ் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks