சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஒதுக்கீடு (2010)
2010 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும், அத்தகைய முயற்சிகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும், திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் பிரேரித்தார்.
கெளரவ லக்ஷ்மன் கிரியல்ல அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
- அத்தரகல்ல ஐக்கிய பிரஜைகளுக்கான அபிவிருத்தி அமைப்பைக் (கூட்டிணைத்தல்)
- ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பின் நிலையத்தைக் (கூட்டிணைத்தல்)
கெளரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
- பிலியந்தல தர்மசாஸ்தரோதய பிரிவேன் விகாரஸ்த சங்வர்தன சபாவவைக் (கூட்டிணைத்தல்)
- மட்டுப்படுத்தப்பட்ட ஸ்ரீ வித்யாவாச சமூக சேவைகள் சங்கத்தைக் (கூட்டிணைத்தல்)
கெளரவ சந்திம வீரக்கொடி அவர்களுக்கு
"பெளத்த விகாரைகளை மறுசீரமைத்தல் மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 ஜூன் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 68 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் அதற்கு எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1635 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூன் 09 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.