பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் 2026.02.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவர் அப்பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மற்றும் ஆணைக்குழுவை விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அதன் உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனஹா செல்வராஸ் அவர்களால் 2026.02.02 திகதியிடப்பட்டு ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அப்போதைய தலைவராகப் பணியாற்றிய கலாநிதி ரமணி ஜயசுந்தர அவர்களால் 2026 ஜனவரி 20 ஆம் திகதி ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, 2024 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள ஆணையாளர் தொடர்பான வெற்றிடம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றியத்தின் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இம்முறை மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தை நடத்துவதற்கும், அரசியல் ரீதியாக அடிமட்டத்திலுள்ள பெண்களை வலுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை நடத்துவதற்கும், உள்ளூராட்சி மன்ற சங்கங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது தொடர்பாகப் பெண் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்திய பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, நுண் நிதி கடன்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks