பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-08-06
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கையின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி பயிலும் 91,495 மாணவர்களுக்கு தற்போது மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்கள் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயிலும் 60,380 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், இலங்கை பிக்கு பல்கலைக்கழகம், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப தொழிற்கல்வி பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயிலும் 31,115 மாணவர்களுக்கு மாணவர் உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு மாதாந்தம் வழங்கப்படும் மொத்தத் தொகை ரூ.10,000 ஆகும். இதில் திறைசேரியின் பங்களிப்பாக ரூ.5,200 மற்றும் மஹாபொல நிதியத்தின் பங்களிப்பாக ரூ.4,800 வழங்கப்படுகின்றது.
மாணவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், திறைசேரியின் பங்களிப்பாக ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூ.9,000 வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கான மஹாபொல புலமைப்பரிசிலாக ரூ.7,500 மற்றும் மாணவர் உதவித்தொகையாக ரூ.9,000 வழங்கப்படுகின்றது.
அத்துடன், தொழில்நுட்ப தொழிற்கல்வி பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக்கழகங்களில் (திறன் மாணவர் சக்தி உதவித்தொகை திட்டத்தின் கீழ்) கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாடநெறிக்கான மாதாந்த கல்வி நேரத்தில் குறைந்தது 90% வருகையை பூர்த்தி செய்திருந்தால் முழுமையான உதவித்தொகையாக ரூ.7,500 வழங்கப்படுகின்றது.
விரிவுரைகளுக்கான வருகை 75% முதல் 89% வரை காணப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6,500 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், 75% இற்கும் குறைவான வருகையைக் கொண்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பிக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை வழங்குவதற்குத் தேவையான திறைசேரி பங்களிப்பு நிதியை மாதத்தின் ஆரம்ப நாட்களில் பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்கின்றது. குறித்த நிதி கிடைக்கப்பெற்றவுடன், அது மஹாபொல நம்பிக்கை நிதியம் மற்றும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
மேலும், தொழில்நுட்ப தொழிற்கல்வி பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக்கழகங்களின் (திறன் மாணவர் சக்தி உதவித்தொகை திட்டம்) மாணவர்களுக்கு, தொழிற்பயிற்சி நிறுவனங்களிடமிருந்து காலாண்டு அடிப்படையிலான மதிப்பீடுகள் கிடைத்த பின்னர், உரிய முன்பணங்கள் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, மாதாந்த உதவித்தொகைகள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படுகின்றன என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks