2026-07-08
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-08
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் கிடைத்துள்ளதாகவும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜுலை 07) கௌரவ அமைச்சர தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதற்கு அமைய, 177, 170 மற்றும் 190 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பஸ்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னோடி திட்டமாக இந்த கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.முன்னர் நடைமுறையில் இருந்த சாதாரண சேவை, அரை சொகுசு சேவை, சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய நான்கு வகைப்பாடுகளில், அரை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய இரண்டு வகைப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அதற்கான விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு விலைச் சூத்திரத்தை பயன்படுத்துவது நியாயமானதல்ல எனத் தெரிவித்த அமைச்சர், நீண்ட தூர சேவைகளில் ஏற்படும் அதிக செலவுகளை கருத்தில் கொண்டு, அதற்கான பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு தனியான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.பஸ் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும், பயணிகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.எரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குழுத் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். இதன்போது, எரிபொருள் விலை குறைவடைந்தாலும், ஏனைய செலவுகள் தொடர்ந்தும் உயர்ந்த நிலையில் காணப்படுவது சவாலாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.வீதி விபத்துக்களை குறைத்தல், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான பாதைகளை அமைத்தல், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அத்துடன், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளுக்கு தொடர்புடையதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு தலையீடு செய்யுமாறும் குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் வெளியிடப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதியிடப்பட்ட 2480/22 இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குழுவில் ஆராயப்பட்டு, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உற்பத்தியாளர்களால் பாதுகாப்புப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களுக்கு பாதுகாப்புப் பட்டிகளை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த சலுகைக் காலத்தை 2026.03.20 முதல் ஆரம்பித்து 2026.06.19 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக குறித்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.கௌரவ நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-07-07
சுற்றுலாத் துறையை மேம்படுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பற்றியும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இலங்கை வெளிநாடுகளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவை பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்படக் கூடிய திட்டங்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இக்கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கௌரவ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் (பேராசிரியர்) ருவன் சமிந்த ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-06
2025 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் அரசாங்க நிதி செயல்திறன், அரசாங்கத்தின் வருமான சேகரிப்பு, அரசாங்க செலவின முகாமைத்துவம், அரசாங்கத்தின் கடன் நிலைமை மற்றும் கொள்கை ரீதியான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, திலின சமரகோன், நிமல் பலிஹேன, எம்.கே.எம். அஸ்லம், அஜித் அகலகட, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இணைந்துகொண்டார்.2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் ஈட்டல் மதிப்பிடப்பட்ட இலக்குகளை மீறி சாதனை முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவை தங்களது வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர். அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் வருவாய் சேகரிப்பு எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.அரசாங்கத்தின் செலவினங்கள் குறித்து ஆராயப்பட்டபோது, சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள், சுகாதாரத் துறைக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஓய்வூதியத் திட்டத்தின் நீண்டகால நிதி நிலைத்தன்மை தொடர்பில் கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குழு வலியுறுத்தியது. அதேவேளை, மூலதனச் செலவினங்களின் கீழ் வீதி அபிவிருத்திக்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.பொதுப் படுகடன் முகாமைத்துவம், கடன் சேவைச் செலவுகள், வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் வட்டி விகிதங்களின் தாக்கம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.மதுவரித் திணைக்களத்தின் டிஜிட்டல் ஸ்டிக்கர் திட்டத்தின் செலவினம் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்கால கொள்முதல் நடைமுறைகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் செலவுத் திறனை உறுதிப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2025–2026 காலப்பகுதிக்கான முன்னேற்றமும் ஆராயப்பட்டது. இதன்போது RAMIS முறைமையை மேலும் மேம்படுத்துதல், வரி செலுத்துவோருக்காக பயனாளர்களுக்கு நட்பான இணையத்தளத்தையும் கையடக்கத் தொலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கை சுங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகனங்களுக்கான கடன் உறுதிப்படுத்தல் கடிதங்களை திறப்பதில் காணப்படும் எல்லை தாண்டிய விதிமுறைகள் ஏற்பட்டதன் காரணமாக, இன்னும் விடுவிக்கப்படாத பல வாகனங்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. எனவே, தாமதக் கட்டணங்களை அறவிட்டு அல்லது பொருத்தமான தீர்வொன்றை வகுத்து, அவ்வாகனங்களை விரைவாக துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு வலியுறுத்தியது.வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகளவான வரிகள் தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மின்சார மற்றும் கலப்பு வலுசக்தி வாகனங்களுக்கு அவற்றின் விலையை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பதன் மூலம் வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மேலும், இவ்வகை வாகனங்களின் எரிபொருள் திறனையும் வரிக் கொள்கைகளை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.அரச வருவாய் வளர்ச்சி நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், ஓய்வூதியச் செலவுகள், அரச கடன் மற்றும் தொடர்ச்சியான மீண்டெழும் செலவினங்களைக் கட்டுப்படுத்த நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என குழு வலியுறுத்தியது. மேலும், அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் இலத்திரனியல் மயமாக்கலை மேலும் வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.
2026-07-06
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியிருந்தபோதும் அதன்பின்னரான நிபமனங்கள் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை, மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.தென் மாகாணத்தில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதே தேர்வின் அடிப்படையில் மேலும் 704 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டிருந்தன. எனினும், 2025 ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து ஆட்சேர்ப்புகளும் நிறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் கலந்துகொண்ட பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சு மற்றும் தென் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தெற்கு மாகாணத்தில் இதுவரை 1417 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் 2023 போட்டிப் பரீட்சைக்குப் பின்னர் இரண்டு போட்டிப் பரீட்சைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.704 வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ளப் பல தடவைகள் தனியான அனுமதிகளைக் கோரிய போதும், அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி இடம்பெற்ற நீண்ட நேரக் கலந்துரையாடலின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழு, இதுபற்றிய பரிந்துரைகளை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன்படி எதிர்காலத்தில் இதுபற்றி மேலும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.போட்டிப் பரீட்சையின்றி கல்வியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாதது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்வியியல் பட்டதாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது. அரசாங்க அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இப்பிரச்சினை தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவ்விடயத்தை மீண்டும் ஆராய எதிர்பார்ப்பதாகவும் குழு அறிவித்தது.மேலும், 2008/2009-ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட பாடசாலை ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் பாடசாலைப் பாதுகாவலர்களுக்கான சம்பள உயர்வுகளை 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயம் குறித்தும் குழு கலந்துரையாடியது. அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அக்குழுவின் பிரதிநிதிகளும் குழுவிற்கு வரவழைக்கப்பட்டனர்.2008/2009-ல் அவர்கள் நியமிக்கப்பட்டபோது தெற்கு மாகாண சபை தவறான சம்பள விகிதத்தை நிர்ணயித்திருந்தமையே 2018 முதல் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டமைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்புதலை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊழியர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய குறித்த விடயத்தில் தங்களால் இயன்ற மிகவும் நியாயமான ஒரு முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதற்கேற்ப ஒரு நியாயமான தீர்வை வழங்கத் தாங்கள் தலையிடுவோம் என்றும் தெற்கு மாகாண கல்வி அமைச்சிற்குக் குழு வலியுறுத்தியது.அதனைத் தொடர்ந்து, குழு உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் குழுவிற்குத் தலைமையேற்று நடத்திச் சென்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிந்தைய பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பின்முகாமைத்துவ பட்ட ஆய்வு நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், மற்றும் இலங்கை-ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வி.ராதாகிருஷ்ணன், அபுபக்கர் ஆதம்பாவா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகு, சுகத் வசந்த.தசில்வா, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.