logo

E   |   සි   |  

2026-06-12

செய்தி வகைகள் : செய்திகள் 

எதிர்காலத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றனர் – மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் வலியுறுத்து

நாளைய தலைவர்களான மாணவ சமூகத்தினர் பெரியோரை மதிப்பவர்களாகவும், தார்மீக விழுமியங்களைப் பாதுகாப்பவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது அவசியம் என கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் வலியுறுத்தினார். 

கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர்,மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படும் நபர்கள் சட்டங்களை மதிக்கும் ஒழுக்கசீலர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும், இந்த நிதியத்தை பிரதேச செயலகங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா அவர்கள், பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார். 
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். 

அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.

இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு பிரதி சபாநாயகர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், கண்டி வித்யார்த்த கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எஸ். ஸ்ரீலால் நன்றியுரை  நிகழ்த்தினார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, கண்டி வித்யார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




தொடர்புடைய செய்திகள்

2026-08-18

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

விலங்குகள் (திருத்தம்) மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (18) சான்றுரைப்படுத்தினார்.1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் 2026.07.21 திகதியன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026.08.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பிரதான சட்டத்தின் 38ஆம் பிரிவில் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். மேலும், “ஒரு விலங்கு” என்பதற்கான வரைவிலக்கணத்தை மீள வரையறுப்பதன் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் இந்தச் சட்டத்தின் IIஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், சட்டத்தின் IVஆம் பகுதிக்குப் பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளடங்கும் வகையில் வரைவிலக்கணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைமச்சரினால் 2026.07.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.08.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் நவீனமயப்படுத்தப்பட்டு, நீர் வழங்கல், வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் வலுப்படுத்தப்படுகின்றன.கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் உள்ளடக்கும் வகையில் அதன் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பயனுள்ளதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சி சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.


2026-08-18

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று (ஆக. 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதற்கு அமைய, இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை சவாலுக்கு உட்படுத்த எவராவது விரும்பினால், இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் குறித்த விடயத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தி 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அத்துடன், நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைசட் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்) முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக மேல் நீதிமன்ற, மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2026-08-17

சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில், இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன்போது, சட்டவாக்கச் செயன்முறை, பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கேள்வி – பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பாராளுமன்ற சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்தை பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) எம். ஜயலத் பெரேரா, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-14

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இணையதளத்திற்கான வெள்ளி விருதை வென்றது

அரச துறையில் சிறந்த இணையதளமாகவும்  பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றதுஇலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.இந்த அங்கீகாரம், பாராளுமன்றம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் பயனருக்கு எளிதான வகையில் பாராளுமன்றத் தகவல்களை வழங்குவதற்கும், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks