01

E   |   සි   |  

2026-03-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள்  சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும்,  தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks