04

E   |   සි   |  

2026-03-11

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

வடமத்திய மாகாணசபை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில்

  • வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை


2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வடமத்திய மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வடமத்திய மாகாணசபையின் அதிகாரிகளுக்கு அண்மையில் பரிந்துரைத்தது. 

2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் வடமத்திய மாகாண சபையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு தலைமையதிபதியினால் முன்வைக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் 2025 ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழு கூட்டத்தில் ஆராயப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்தது.

இந்த நிலையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (03) பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்குறிந்த பரிந்துரை வழங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த முறைகேட்டுடன் சம்பந்தப்பட்ட 10 அதிகாரிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணம் இதுவரை அறவிடப்படவில்லையென்றும், இதில் சிலர் தற்பொழுது உயிருடன் இல்லையென்றும், ஏனையவர்களிடம் அறவிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் பதிலளித்தனர். இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது. 

அத்துடன், பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கமொன்றை அமைப்பதற்கான திட்டம் பூர்த்தியாக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமையும் இங்கு தெரியவந்தது.  இத்திட்டத்திற்காக செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தை முன்னெடுத்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அதனை ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிவிக்குமாறு கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். 

மேலும், வடமத்திய மாகாண சுற்றுலாத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தரமான ஆவணப்படமொன்றைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத் தொகையான ரூ.15,797,500 இல் ரூ.12,144,500 செலுத்தப்பட்டுள்ளபோதும் எவ்வித வீடியோவும் ஒப்பந்த நிறுவனத்தினால் கையளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. குறித்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆற்றுப்படுத்துமாறு குழு அறிவுறுத்தியது. 

பொலன்னறுவை பொது வர்த்தகக் கட்டடத்தொகுதியின் கட்டுமானப் பணிகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தொகை பணத்தைச் செலவு செய்து ஒப்பந்த நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கக் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட ஒப்பந்த நிறுவனமே இக்கட்டடத் தொகுதியின் ஒப்பந்தத்தையும் முன்னெடுத்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியது பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டது. இது பற்றி விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.  

அத்துடன், வடமத்திய மாகாணத்திற்கு ரயில் மூலம் அனுப்பப்பட்ட திரிபோஷா பக்கற் தொகுதிகள் உரிய நேரத்தில் பெறப்படாது ரயில் திணைக்களத்தின் களஞ்சியத்தில் இருந்தமையால் காலவதியாகியமை, அதிலுள்ள சில பக்கற்றுக்கள் காணாமல் போனமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்த சமபோஷ பொதிகளின் பெறுமதி ரூ.1,094,657 என்பதும் இங்கு தெரியவந்தது. இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான மாகாண சபையினால் விசாரணை நடத்தப்பட்டபோதும் இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விடயம் தொடர்பில் உள்ளக கணக்காய்வு விசாரணை நடத்துவதுடன், அமைச்சு மட்டத்திலான விசாரணைகளையும் முன்னெடுத்து அதனைக் குழுவுக்கு அறிவிக்குமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, நளின் ஹேவகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சுசந்த குமார நவரத்ன, டி.கே. ஜயசுந்தர, ஜே.சி அலவத்துவல, சுனில் ரத்னசிறி மற்றும் சானக மதுகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-04-02

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது.பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுகின்றமை இங்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பீடி இலைகள் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை இறக்குமதி செய்து இத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான தேவையை குழு வலியுறுத்தியது. அத்துடன், சட்டவிரோத பீடி இலைகளைப் பயன்படுத்தி பீடி தொழில் மேற்கொள்பவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிடமுடியாத நிலை இருப்பதால் இதனைத் தடுத்து, அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தை ஈட்டுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக கௌரவ பிரதியமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, ருவான் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்செய் பெரேரா, (கலாநிதி) நன்தன மில்லகல்ல, திலின சமரக்கோன், நிலந்தி ஹொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், நிதி அமைச்சு, உண்ணாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-04-02

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 20) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு) அவர்களின் நியமனத்திற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளராக எல்.மொஹமட் நவவி அவர்களின் நியமனத்திற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க அவர்களின் நியமனத்திற்கும், துறைமுகங்கள் மற்றும் சிவிர் விமான சுவைகள் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள அவர்களின் நியமத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது.


2026-03-31

உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று 2026 மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் கௌரவ சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.மார்ச் 24ஆம் திகதி இலங்கைத் தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர். அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரசபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் புதுடில்லி மாநகரசபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் கௌரவ சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. 


2026-03-30

தொல்பொருளியல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks