logo

E   |   සි   |  

2026-02-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விஜயம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் (ITI), வசதிகள் மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.

சமூகத்தில் குறித்த நிறுவனத்தின் வகிபாகம் மற்றும் அதன் நிலைமை குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இந்த நிறுவனம் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஆராய்ந்து மேம்படுத்தலை ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

இது நாட்டில் மிக உயர்ந்த அளவிலான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாகும். கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் காணப்படும் சான்றளிப்பு (Accreditation) மற்றும் சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தனித்துவமான தொழில்நுட்ப திறன்கள், விசேட பரிசோதனை சேவைகள் மற்றும் அதற்கான வசதிகள், நிலக்கரி மாதிரிகளை பரிசோதிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், உராய்வுநீக்கி எண்ணெய் பரிசோதனைக் கூடத்தின் திறமையின்மை போன்ற விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளும், பரிசோதனை சேவைகளை வழங்கும் 7 பிரிவுகளும் செயற்படுவதுடன், இவற்றில் மருந்துகள், மூலப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள், நுண்ணுயிரியல் பரிசோதனை, அளவுத்திருத்தம், மின்னியல் தொழில்நுட்பம், எச்சங்கள் தொடர்பான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றமை இவ்விஜயத்தின் போது தெரியவந்தது.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது, கைத்தொழில்களுக்குத் தேவையான தொழிற்சாலை வடிவமைப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.

சான்றழிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய காரணி சான்றளிப்பு என்றும்,  இந்நிறுவனம் ISO 17025 (2017) சர்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது என்பதும்  தெரியவந்தது.

ஆரம்பத்தில் சுவீடனில் உள்ள SWEDAC நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தபோதும், 2013ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை (SLAB) மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், மேலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1035 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட அளவுருக்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. ITI நிறுவனம் தேசிய அளவில் முக்கியமான பல பரிசோதனைகளை நடத்துவதுடன், உணவு, நீர் (ஆர்சனிக் போன்றவை), மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்கு அண்மையில் ரூ.143 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் இந்த விஜயத்தின் போது தெரியவந்தது.
அத்துடன், நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒலிப் பரிசோதனை மற்றும் ஒலி வடிவமைப்பை உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலிப்பதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆறு மாத காலங்களுக்கு ரூ 32 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ITI நிறுவனத்தின் அதிகாரிகள், சுமார் ரூ. 350 மில்லியன் ஆரம்ப மூலதன முதலீட்டில் (14 உபகரணங்கள் உட்பட) இந்தப் பரிசீலனளை வசதியை  அங்கீகாரத்துடன் உள்நாட்டிலேயே நிறுவ முடியும் என்று தெரிவித்தனர்.

நுரைச்சோலை பரிசோதனை கூடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்பதால் அதன் அறிக்கை சர்வதேச அளவிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இது ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு பரிசோதனைகூடம் அல்ல என்பது ஒரு பிரச்சனை என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மருந்துகள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை கூடத்தின் திறமையின்மை காரணமாக நிறுவனம் ஏற்கனவே ஏராளமான கணக்காய்வு விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றும், அரசாங்க நிதியில் நிறுவப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்தாமை சிக்கலுக்குரிய விடயம் என்றும், இந்த ஆய்வுகூடங்கள் அரசாங்க பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டன என்றும் தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு ரூ.99 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட மருந்துப் பரிசோதனை கூடம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமையால் செயற்படமுடியாத நிலையில் உள்ளது என்றும், 2017-2020 ஆம் ஆண்டில் ரூ.117 மில்லியன் செலவில் பெட்ரோலியம் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை ஆய்வகம் கட்டப்பட்ட போதிலும், எண்ணெய் மாதிரிகளைப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால் அதை முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

மருந்து சோதனையின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒழுங்குமுறை நிறுவனங்களே சோதனைகளை நடத்துகின்றன, "ஒழுங்குபடுத்துபவரும் புலனாய்வாளரும் பிரிக்கப்பட வேண்டும்" என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை புறக்கணிப்பதால் அக்கறைகளின் முரண்பாடு உள்ளது என்பதும் தெரியவந்தது.

அரசாங்க பரிசோதனைகளுக்கு ITI போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன அரச நிறுவனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொடவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


2026-08-18

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகள் “Voice to Policy“ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாகக் கையளிப்பு

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.


2026-08-11

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks