logo

பார்க்க

E   |   සි   |  

2026-02-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விஜயம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் (ITI), வசதிகள் மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.

சமூகத்தில் குறித்த நிறுவனத்தின் வகிபாகம் மற்றும் அதன் நிலைமை குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இந்த நிறுவனம் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஆராய்ந்து மேம்படுத்தலை ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

இது நாட்டில் மிக உயர்ந்த அளவிலான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாகும். கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் காணப்படும் சான்றளிப்பு (Accreditation) மற்றும் சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தனித்துவமான தொழில்நுட்ப திறன்கள், விசேட பரிசோதனை சேவைகள் மற்றும் அதற்கான வசதிகள், நிலக்கரி மாதிரிகளை பரிசோதிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், உராய்வுநீக்கி எண்ணெய் பரிசோதனைக் கூடத்தின் திறமையின்மை போன்ற விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளும், பரிசோதனை சேவைகளை வழங்கும் 7 பிரிவுகளும் செயற்படுவதுடன், இவற்றில் மருந்துகள், மூலப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள், நுண்ணுயிரியல் பரிசோதனை, அளவுத்திருத்தம், மின்னியல் தொழில்நுட்பம், எச்சங்கள் தொடர்பான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றமை இவ்விஜயத்தின் போது தெரியவந்தது.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது, கைத்தொழில்களுக்குத் தேவையான தொழிற்சாலை வடிவமைப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.

சான்றழிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய காரணி சான்றளிப்பு என்றும்,  இந்நிறுவனம் ISO 17025 (2017) சர்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது என்பதும்  தெரியவந்தது.

ஆரம்பத்தில் சுவீடனில் உள்ள SWEDAC நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தபோதும், 2013ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை (SLAB) மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், மேலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1035 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட அளவுருக்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. ITI நிறுவனம் தேசிய அளவில் முக்கியமான பல பரிசோதனைகளை நடத்துவதுடன், உணவு, நீர் (ஆர்சனிக் போன்றவை), மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்கு அண்மையில் ரூ.143 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் இந்த விஜயத்தின் போது தெரியவந்தது.
அத்துடன், நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒலிப் பரிசோதனை மற்றும் ஒலி வடிவமைப்பை உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலிப்பதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆறு மாத காலங்களுக்கு ரூ 32 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ITI நிறுவனத்தின் அதிகாரிகள், சுமார் ரூ. 350 மில்லியன் ஆரம்ப மூலதன முதலீட்டில் (14 உபகரணங்கள் உட்பட) இந்தப் பரிசீலனளை வசதியை  அங்கீகாரத்துடன் உள்நாட்டிலேயே நிறுவ முடியும் என்று தெரிவித்தனர்.

நுரைச்சோலை பரிசோதனை கூடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்பதால் அதன் அறிக்கை சர்வதேச அளவிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இது ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு பரிசோதனைகூடம் அல்ல என்பது ஒரு பிரச்சனை என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மருந்துகள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை கூடத்தின் திறமையின்மை காரணமாக நிறுவனம் ஏற்கனவே ஏராளமான கணக்காய்வு விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றும், அரசாங்க நிதியில் நிறுவப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்தாமை சிக்கலுக்குரிய விடயம் என்றும், இந்த ஆய்வுகூடங்கள் அரசாங்க பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டன என்றும் தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு ரூ.99 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட மருந்துப் பரிசோதனை கூடம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமையால் செயற்படமுடியாத நிலையில் உள்ளது என்றும், 2017-2020 ஆம் ஆண்டில் ரூ.117 மில்லியன் செலவில் பெட்ரோலியம் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை ஆய்வகம் கட்டப்பட்ட போதிலும், எண்ணெய் மாதிரிகளைப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால் அதை முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

மருந்து சோதனையின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒழுங்குமுறை நிறுவனங்களே சோதனைகளை நடத்துகின்றன, "ஒழுங்குபடுத்துபவரும் புலனாய்வாளரும் பிரிக்கப்பட வேண்டும்" என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை புறக்கணிப்பதால் அக்கறைகளின் முரண்பாடு உள்ளது என்பதும் தெரியவந்தது.

அரசாங்க பரிசோதனைகளுக்கு ITI போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன அரச நிறுவனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொடவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-22

எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளால் இலங்கையிலுள்ள ஈரூடக மற்றும் கடல்வாழ் பல்லுயிர்களைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராய்வு

எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக எல் நினோ நிலைமை, இலங்கையின் சமுத்திக் கட்டமைப்பு, கரையோரம், பல்லுயிரினம் மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வாதார போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதினால் பவளப் பாறைகள் வெளுத்தல் (Coral Bleaching), மீன் இனங்களின் இடப்பெயர்வு மாற்றம், பாசிப் பெருக்கம் (Algal Blooms), ஒட்சிசன் குறைந்த வலயம் (Dead Zones) உருவாதல் மற்றும் நீர்க் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.அத்துடன், வறட்சியின் விளைவாக ஆற்று நீர்மட்டம் குறைவதாலும், ஆற்று அமைப்புகளில் கடல்நீர் கலப்பதாலும் குடிநீர் விநியோகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நாரா நிறுவனம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனங்களுக்கு இடையே மேலும் திறமையான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் ஏற்பட் கூடிய எல் நினோ (El Niño) சூழ்நிலையை வெற்றிகரமாக முகங்கொடுக்க கடல்சார் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கடல் முகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்த ஒன்றியம் வலியுறுத்தியது.காலநிலை மாற்றம்  ஈரூடகவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள், இனப்பெருக்க முறைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்க்வையும் பாதிக்கின்றன என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை தவளைகள் உட்பட பல ஈரூடகவாழ் உயிரினங்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks