பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் 2026.02.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவர் அப்பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மற்றும் ஆணைக்குழுவை விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அதன் உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனஹா செல்வராஸ் அவர்களால் 2026.02.02 திகதியிடப்பட்டு ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அப்போதைய தலைவராகப் பணியாற்றிய கலாநிதி ரமணி ஜயசுந்தர அவர்களால் 2026 ஜனவரி 20 ஆம் திகதி ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, 2024 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள ஆணையாளர் தொடர்பான வெற்றிடம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றியத்தின் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இம்முறை மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தை நடத்துவதற்கும், அரசியல் ரீதியாக அடிமட்டத்திலுள்ள பெண்களை வலுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை நடத்துவதற்கும், உள்ளூராட்சி மன்ற சங்கங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது தொடர்பாகப் பெண் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்திய பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, நுண் நிதி கடன்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2026-02-11
அரசியலமைப்பின் 154ண (4)(அ) யாப்புக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து நிதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்யப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலிண சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்குபற்றலில் 2026.02.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூடிய போதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களினால் 2026 ஆம் ஆண்டிற்கான மாகாண மூலதன மற்றும் மீண்டெழும் செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்வது குறித்து குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது. மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெருமளவிலான பாடசாலைகள் மாகாண சபைகளின் கீழ் உள்ளதால், அதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாண சபைகளின் மூலதனச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை நிலவுவதாக நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அந்தப் பற்றாக்குறையை முடிந்தவரை ஈடுசெய்ய முயற்சிப்பதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், பிரதேச சபைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தில் போதிய மதிப்பீட்டு அதிகாரிகள் இல்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு அதிகாரிகளைப் பதவிக்கு அமர்த்துவதற்கும், மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுத்தால், அதற்காக மேலதிக நிதி தேவைப்படலாம் என நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. மேலும், மாகாண சபைகளின் வருமானம் ஈட்டுதல் மற்றும் அந்த வருமானத்தைச் செலவிடுதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த அறிக்கை மீதான பரிசீலனையை நிறைவு செய்த குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, இந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனத் தெரிவித்தார்.
2026-02-06
சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் நேற்று (பெப். 05) கோரிக்கை விடுத்துள்ளது.அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும்" பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின்" ஒரு பகுதியாக ஆண்டுதோறும் "செம்மஞ்சள் தினம்" போன்ற அடையாள நிகழ்வுகளை நாங்கள் நடத்தியிருந்தாலும், இந்த சபையின் செயல்பாடுகள் மூலம் அவற்றை அர்த்தமுள்ள வகையில் விளக்க முடியவில்லை என்பது தமது அவதானிப்பாகும் என பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சாரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியிலான துஷ்பிரயோகம் இடம்பெறும் போக்கு அண்மைய காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றுகள் முன்னால் உள்ள சவால் வெறுமனே தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக மக்களின் இறையாண்மை மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமையை இலக்காகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு பாதகமான முன்னுதாரணமாகவும் அமைகிறது என்றும் ஒன்றியத்தின் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் நடத்தை அல்லது கூற்றுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பரிந்துரையாகும். நிலையியற் கட்டளைகளின் கீழ் "பாராளுமன்றத்தில் ஒழுக்கம்" பிரிவின் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில், புதிய நிலையியற் கட்டளையைச் சேர்த்து நிலையியற் கட்டளைகளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
2026-02-03
இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் தேசிய அபிவிருத்திக்கான அவர்களின் பங்களிப்பு குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்திற்கும் (AKASA) இடையில் கடந்த ஜன. 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் செல்வி என்.ஜி. கமலாவதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.இங்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் பணிகளும், தற்போது இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இயலாமையுள்ள சமூகத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமைகள் மற்றும் சவால்கள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.பொது இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் இல்லாமை மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சில வசதிகள் தரமானதாக இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள், சில வங்கிகள் மூலம் கணக்கொன்றைத் தொடங்கக்கூட முடியாமை உள்ளிட்ட சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.இயலாமையுள்ள சமூகத்தினரை அனுதாபத்துடன் நோக்குவதை விடுத்து, அவர்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தினர்.வரலாற்றில் முதன் முறையாக இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்தமை ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்தினருக்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த ஆரம்பகட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-01-30
தித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் 2026.01.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என அந்தந்த அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் வினவினார். அதற்கமைய, ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகக் குழுவிற்குச் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளும் தமது நிறுவனங்கள் வசமுள்ள தரவுகளைக் குழுவில் சமர்ப்பித்தனர்.தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்தச் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் அந்த இழப்பீடுகளைக் கணக்கிடும் முறை குறித்துக் குழுவின் தலைவர் வினவினார். அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இழப்பீடு வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக அந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதன்போது, இழப்பீடு வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையைத் தயாரிப்பது முக்கியம் எனச் சுட்டிக்காட்டிய குழு, இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியது. அத்துடன், தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்தந்த அமைச்சுகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.இந்தச் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் உபுல் கித்சிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks