பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-06
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (பெப். 05) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த கொள்கைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறிப்பாக வலுசக்தி பங்குடைமை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆழமான மற்றும் வளர்ந்து வரும் பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தொழிநுட்ப ஆதரவை ஃபெக்டம் (Factum) நிறுவனம் வழங்கியது.
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியது. வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களின் பின்னணியில், நிலையான மற்றும் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்பை அடைவதற்கு இத்தகைய கலந்துரையாடல்களில் முக்கியத்துவத்தை கௌரவ அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்யஞ்சல் பாண்டே, இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்திற்கும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிலையான பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய உந்துசக்தியாக கடன் சார்ந்த நிதி வழங்கலை விட, முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் நிதி வழங்கலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டன. முதலாவது அமர்வில் வலுசக்தி பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் உலக வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய நிர்வாக அதிகாரியுமான சிஷிர் பிரியதர்ஷி மற்றும் இலங்கை மின்சார சபையின் நிலைமாற்றம் தொடர்பான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஆகியோர் இதில் நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர். மின் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கூட்டு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் உள்ளிட்ட வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
இரண்டாவது அமர்வின் போது, இந்து சமுத்திரத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடல்சார் ஒத்துழைப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் துறையில் நிலைபேறான ஒத்துழைப்பு, கடல்சார் மையமாக இலங்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான சவால்கள் குறித்து இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் ஆய்வாளர் கலாநிதி சவி வசிஷ்ட் மற்றும் கடல்சார் ஆய்வாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வை.என். ஜயரத்ன ஆகியோர் இது தொடர்பான நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்தக் கலந்துரையாடல்களை ஃபெக்டம் (Factum) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒமர் ராஜரத்னம் வழிநடத்தினார். இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்வை நிறைவுசெய்யும் வகையில், இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன கருத்துத் தெரிவித்ததுடன், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
2026-02-06
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் கௌரவ வாக்டாங் ஜாவோஷ்விலி, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (பெப். 05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய இரு தரப்பினரும், 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை சுட்டிக்காட்டினர்.இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துவருவதால், வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் உள்ளன என்று கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டதுடன், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் விருந்தோம்பல் குறித்து அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் வளமான பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அனுபவிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோர்ஜிய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஜோர்ஜிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் உயர்கல்வியைத் தொடருவதற்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஜோர்ஜியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பையும் கௌரவ சபாநாயகர் இதன்போது வெளிப்படுத்தினார்.
2026-02-05
புதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமுதிகா ஜயரத்ன அவர்கள் இன்று (பெப். 05) பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இகரசியம் கேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தலைமை அதிபதி மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இந்த இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்.இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் தலைமை அதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
2026-02-05
கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (பெப். 03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கௌரவ பாக் கிவாங், கௌரவ சாங் ஜேபாங் மற்றும் கௌரவ ஜங் ஹேக்யுங், தேசிய சட்டமன்றச் செயலகத்தின் ஆசிய-பசிபிக் அலுவல்கள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் செல்வி லீ ஜெயங் மற்றும் கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ மியோன் லீ ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.இக்கலந்துரையாடலின் போது, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்காகவும், அண்மையில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும் கொரிய அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கல்வி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர் வள அபிவிருத்தி ஆகிய துறைகளில், குறிப்பாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) ஊடாக கொரியக் குடியரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கௌரவ சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார். இலங்கையின் அரச துறைக்காக வழங்கப்பட்ட திறன் விருத்தித் திட்டங்களுக்காகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.இலங்கையின் பொருளாதார நிலை தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கௌரவ சபாநாயகர், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன், எதிர்காலத்தில் கொரியக் குடியரசில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக கௌரவ சபாநாயகருக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இலங்கை - கொரியா இராஜதந்திர உறவுகள் அடுத்த ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மை மற்றும் அபிவிருத்திக்காக மேலும் பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.கொரிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விசா வசதிகளை வழங்குதல், வலுசக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் கொரிய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தை பார்வையிட்டதுடன், பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். அத்துடன் பிரமுகர்களுக்கான கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வையும் பார்வையிட்டனர்.
2026-02-03
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2473/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் உள்ளடக்கப்பட்ட தீர்மானத்தை பெப்ரவரி 6ஆம் திகதி மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (பெப். 3) பி.ப 1.30 மணிக்குக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய அன்றையதினம் விவாதத்திற் எடுத்துக்கொள்ளவிருந்த தனியார் உறுப்பினர் பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றை பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.மேலும், 2026.01.28ஆம் திகதிய 2473/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளையை பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணிக்கு விவாதம் இன்றி அங்கீகரிப்பதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks