logo

E   |   සි   |  

2026-01-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்து கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

  • இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிலுள்ள வளங்களைக் கொண்டு ஆரம்பிக்க உடன்பாடு
  • அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழு
  • கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை இந்த வருடம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை 
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படக் கலையகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் கலந்துரையாடல் 


இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னெடுப்பில் அண்மையில் (ஜன. 22) இடம்பெற்றது. 

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலர், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், ஒப்பனை கலைஞர்கள் சங்கம், சார்க் கலாசார நிலையம், திரைப்படக் கல்வி தொடர்பான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் திரைப்படத் துறைசார்ந்த நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முன்வைத்தனர். இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. 

திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி இதனை ஆரம்பிக்கவும், பின்னர் படிப்படியாக அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடிப்படைப் பணிகளை முன்னெடுப்பதற்காக இதன்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டது. 

இதற்கமைய, கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம், இலங்கை மன்றக் கல்லூரி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் திரைப்படத் துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நிறுவப்பட்டது.

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் சீதா பண்டார, அரச திரைப்படத் துணைக் குழுவின் தலைவர் (கலாநிதி) செனேஷ் திஸாநாயக்க பண்டார, சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் (கலாநிதி) கௌஷல்ய குமாரசிங்க உள்ளிட்ட திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டனர். 

அத்துடன், இந்தப் பாடசாலையின் பாடத்திட்டம் உள்ளிட்ட கல்விச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக திரைப்படத் துறை நிபுணர்களைக் கொண்ட மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டது. 

அத்துடன், தற்போது செயலற்ற நிலையில் உள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை (International Film Festival, Colombo) மீண்டும் இந்த வருடம் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கும், நீண்டகாலம் நிலையான முறையில் இவ்விழாவை முன்னெடுப்பதற்கும் தேவையான நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான தலையீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.

இதேவேளை, திரைப்படத் தயாரிப்புப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலையக வளாகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கொழும்புக்கு அருகில் பொருத்தமான ஓரிடத்தில் இதனை நிர்மாணிப்பதற்கான அவசியம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாநாயக்கார, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாப்பலகம, சுகத் வசந்த டி சில்வா, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, உபுல் கித்சிறி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks