பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-01-06
செய்தி வகைகள் : செய்திகள்
2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டன.
கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 05) கூடிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களும் கலந்துகொண்டார்.
சேற்று நண்டின் மேலோட்டின் மிகப்பரந்த பாகத்தில் அளவிடப்பட்ட 130 மில்லிமீற்றருக்கு குறைவான மேலோட்டு அகலத்தைக் கொண்ட சேற்று நண்டுகளைப் பிடித்தலோ, விற்பனை செய்தலோ, உடமையில் வைத்திருத்தலோ, பதனிடுதலோ அல்லது ஏற்றுமதி செய்தலோ கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியினால் தடைசெய்யப்படுகின்றது. மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இதனை மதிப்பாய்வு செய்து ஒழுங்குவிதியைத் திருத்துவது என்ற அடிப்படையில் இதனை சமர்ப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், மீனவர்களின் பங்களிப்புடனான ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் என்றும், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து மீன்பிடி அமைச்சு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் அதிகமான மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக கௌரவ பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகளைத் தடுப்பது உள்ளிட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-01-05
2026 புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 05) முற்பகல் இடம்பெற்றது.பாராளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வை, பெலவத்த மயுரபாத பிரிவென் விஹாரையின் சத்தர்ம கீர்தி ஸ்ரீ விசித்ர தர்ம கதிக பூகெந்தயாயே குணரதன தேரர் நடாத்தினர். பாராளுமன்ற குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்களும், இணைந்த சேவைகளின் பணியாளர்களும், இலங்கை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-01-01
அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளை உச்ச வகையில் பாதுகாப்பதாகவும், அதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கெரளவ சபாநாயகர் வலியுறுத்தினார்பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாாடுகள் உள்ளிட்ட விடயங்களுக்காக வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்கு வசதிகளை வழங்குவது உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் பணியாட் தொகுதியினர் வழங்கிவரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்புபாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதனால் பத்தாவது பாராளுமன்றத்திற்கு விசேடமான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தினார். இதற்கு அமைய, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்றப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இது விடயத்தில் சாதகமான முன்னேற்றங்களைக் காண முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சமூக மேம்பாடு ஏற்படும்போது நியாயம் மற்றும் சமத்துவம் பாராளுமன்றத்தில் உள்ள சகல பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தனது உரையில் தெரிவித்தார். இதற்கு அமைய, பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளடங்கலான சகல உழைக்கும் மக்களினதும் உரிமைகளை அதியுச்ச அளவில் பாதுகாப்பதற்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தான் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் ஊழியர்களாக மாறுவதற்கு புத்தாண்டில் தைரியம் கிடைக்க வேண்டும் எனக் கூறி சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடு என்ற ரீதியில் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிச் செல்லும்போது சட்டவாக்கம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு விசாலமானது எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடவடிக்கைகள் மற்றும் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியைத் தெரிவித்த அவர், புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்ற பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியினர் உள்ளிட்ட அனைவரும் அரசாங்க ஊழியர்களுக்கான உறுதியுரையை எடுத்துக்கொண்டனர்.கௌரவ பிரதிச் சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளடங்கலான பாராளுமன்ற பணியாளர்கள், இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-12-31
பாராளுமன்றம் ஜனவரி 6 முதல் 9 வரை கூடும்2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அதற்கமைய, பாராளுமன்றம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளது.2026 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனையடுத்து, பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2025.12.28 ஆம் திகதி 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது குழுவில் அறிவித்துள்ளனர். அத்துடன், அன்றைய தினம் பி.ப. 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதி குறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.2026 ஜனவரி 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து பி.ப. 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 மற்றும் 2452/40 ஆகிய அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதனையடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப. 11.30 மணி முதல் பி.ப 3.00 மணி வரை (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2465/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்துவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2025-12-31
நாம் புதிய நம்பிக்கைகளுடன் கூடிய நாடாக மீண்டும் எழுச்சி பெறும் வேளையில், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் உறுதியுடனும் 2026 ஆம் ஆண்டை வரவேற்கிறோம்.நாட்டின் எதிர்கால நலனுக்காக பல புதிய பாதைகளை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க முடிந்ததால், கடந்த ஆண்டு நமது நாட்டிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக மாறியது.மேலும், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாம் சந்தித்த பாரிய இயற்கை பேரழிவின் அதிர்ச்சிகள் இன்னும் சமூகத்திலிருந்து தணியவில்லை. ஒரு நாடாகவும் ஒரு சமூகமாகவும் அந்த பேரழிவின் போது பாதிக்கப்பட்ட நமது அன்புக்குரியவர்களுக்கு அனைத்து மக்களும் காட்டிய ஆதரவும், மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரச அதிகாரிகள் செய்த மகத்தான தியாகங்களும், ஒரு சமூகமாக நாம் சேகரித்த மனிதநேயத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். இதுபோன்ற இயற்கைச் சம்பவங்கள் நமது மனிதகுலத்தை சோதிப்பதாக நான் நம்புகிறேன். புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில், அந்த தியாகங்களைச் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, நாட்டின் சட்டமன்றம் என்ற முறையில், இலங்கையின் பத்தாவது பாராளுமன்றமாக, இப்புதிய ஜனநாயக பாராளுமன்ற அரசியல் கலாசாரத்தை நிறுவுவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை நாம் அடைய முடிந்தது என்பதில் எனது பணிவான பெருமையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவை அனைத்தும் குறுகிய காலத்தில் ஒரு சமூகமாக நாம் அடைந்த சாதனைகள். எதிர்காலத்திலும், கருணையுடன் கூடிய புதிய பண்பட்ட மனிதனையும், புதிய நல்ல சமுதாயத்தையும் உருவாக்கத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து நாம் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இப்புதிய ஆண்டில், நீங்கள் நம் மீது வைத்த நம்பிக்கையின் சுமையை நாங்கள் நன்கு அறிவோம் என்றும், அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.2026 ஆம் ஆண்டு அனைத்து தடைகளையும் சவால்களையும் கடந்து, இந்நாட்டை வலிமையாகக் கட்டியெழுப்ப அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர்,இலங்கை பாராளுமன்றம்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks