பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டு அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு இன்று (டிச. 19) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) டிசம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொகைகளுக்கு அப்பால் கூடுதல் நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ரூ.500 பில்லியன் குறைநிரப்புத் தொகை முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள குறைநிரப்புத் தொகையில் ரூ.100 பில்லியன் அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புனரமைப்பதற்கும், ரூ.250 பில்லியன் சேதமடைந்த உட்கட்டுமான வசதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும், ரூ.150 பில்லியன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளன.
பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்திற்கு அமைய ஆரம்பச் செலவீனம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 % ஆக இருக்கவேண்டிய நிலையில் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5% அதிகரிப்பதாக அமைகின்றது என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 16வது பிரிவுக்கு அமைய பாரிய பொருளாதார வீழ்ச்சி, கடுமையான வெளிநிலை அதிர்ச்சிகள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால், பாரிய எதிர்பாராத செலவு பொறுப்புக்கள் எழல் அல்லது அமைச்சரவையின் வேறு ஏதேனும் தீர்மானம் போன்ற தவிர்க்க முடியாத அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில் அந்த எல்லைகளை மீற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிதியின் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் குழு கேட்டறிந்தது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) 15,000 வீடுகளை அடையாளம் கண்டு 2017 முதல் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இருப்பினும் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சுமார் 3,000 வீடுகளைக் கட்டுவதற்கு ரூ. 5,000 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதற்கு மேலதிகமாக புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ துல்லியமான தரவுகளைப் பெற வேண்டும் மற்றும் சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குழு வலியுறுத்தியது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கூடிய நிதியமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.
நீண்டநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன் மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-28
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தொடர்பில் இங்கு முதலில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக வருடமொன்றுக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும், வருடமொன்றிற்கு ரூ.225 பில்லியன் முதல் ரூ.240 பில்லியன் வரையிலான தொகை இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.இந்த சூழ்நிலையை அடிப்படையாக சமாளிக்க தேவையான சட்ட விதிகள் உட்பட, புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.சிகரெட்டுக்கள் தனித்தனியாக விற்பனை செய்வதை உலகில் 104 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், இந்த நாட்டிலும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர். தனிப்பட்ட சிகரெட்டுகள் விற்கப்படும்போது, சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கைச் செய்திகள் நுகர்வோரைச் சென்றடைவதில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். சிகரெட்டுகளின் விலைகளை நிர்ணயித்த பின்னர் அவற்றின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினர் தமது சட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திருத்தங்கள் மற்றும் குறித்த அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைக் குழு வழங்கும் என்றார்.இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புவதாகவும் கூறினார். ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.இக்கூட்டத்தில் கௌரவ குழுவின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர, கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, சமன்மலீ குணசிங்க, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும், குழுவின் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்கள், புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-01-27
மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யவும் தீர்மானம்கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.01.21ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு 2026.01.28ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-01-27
இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களினதும் நிலக்கரிகளின் தரம் பற்றிய அறிக்கையை வழங்கவும் – குழு அறிவுறுத்தல்மின் உற்பத்திக்காக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்திற்கு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய குழு, இறுதியாக நிலக்கரி இறக்குமதி செய்யும்போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.அத்துடன், இறுதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா எனக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் மாதிரிகளின் தரங்கள் பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இவற்றின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விடயம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்யும் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட வரையறுக்கப்பட்ட லங்கா நிரக்கரி (தனியார்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரை அடுத்த குழுக் கூட்டத்திற்கு அழைக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.அதேநேரம், குறித்த குழுக் கூட்டத்தின் போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் தரம் குறித்த அறிக்கைகளையும், கடைசியாக வந்த கப்பலில் உள்ள நிலக்கரியின் தரம் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கைகளையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா மற்றும் சத்துர கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-26
45 நாட்களுக்குள் சேர் பெறுமதி வரியை மீளப்பெறுவதை விரைவில் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராட்டு கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை (Authorized person) நியமிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஜன. 20ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய நிறுவனமொன்று வணிகத்தில் ஈடுபட விரும்பும் போது, குறித்த விண்ணப்பதாரர் கொாழும்பு துறைமுக நகரப் பகுதியில் வணிகத்தில் ஈடுபட அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவராகத் தகுதி பெறவும், அனுமதியைப் பெறுவதற்கும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று பதிவுக்காக தற்போது 72 விண்ணப்பங்கள் இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது.இதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திடடத்தின் கீழ் நான்காவது மறுஆய்வுக்காக கைச்சாத்திடப்பட்ட விருப்பக் கடிதத்திற்கு அமைய 2025.07.04ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். எனவே, இந்த விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர். 2025 ஜூலை மாதமாகும் போது 54 விண்ணப்பங்கள் இருந்ததாகவும், அவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. குறித்த சட்டம் திருத்தப்படவிருப்பதால் இதுவிடயத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் செயற்பாடு மாறுபடலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இதனால் அவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்று பதிலளித்த அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், திருத்தச் சட்டமூலம் 2026.01.20ஆம் திகதி நடைமுறைக்கு வருவதால் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது நாட்டிலுள்ள அனைவரின் குறிக்கோள் என்றும், எனவே விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.மேலும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் (SVAT System) தற்போதைய முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.சேர் பெறுமதி வரி முறையின் கீழ் மீளப்பெறும் வாய்ப்புக்களுடன் கூடிய கொடுப்பனவுகளை (Refund payments delays) மீளப்பெறும்போது 100% கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் காலதாமதம் இருப்பதாகவும் இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக அந்தக் காலதாமதங்களை குறைத்து 45 நாட்களுக்குள் அவற்றை விரைவில் மீளப்பெறுதலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். 2026 ஜனவரி 15ஆம் திகதி வரையில் பணத்தைத் திரும்பப்பெறும் கொடுப்பனவுகளில் சுமார் 96% செலுத்தப்பட்டுவிட்டதாகவும், பெரும்பாலான பழைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளளப்பட்டிருப்பதாகவும் அதிகரிகள் தெரிவித்தனர்.குழுவில் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக சிறந்த பலனைப் பெறமுடியும் என்பது தெரியவருவதாகவும், இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் குழு குறிப்பிட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks