04

E   |   සි   |  

2025-11-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அவர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டம் கிளிநொச்சியில்

  • இயலாமையுள்ளவர்களுக்கு நீங்கள் வழங்கும் சேவையால் அவர்கள் திருப்தியடைந்தால், அந்த சேவையை வழங்கும் உங்களுக்கும் திருப்தியடையலாம் - கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா

 

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்முயற்சியின் கீழ் அண்மையில் (நவ. 04) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. 

பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் “இயலாமை பற்றிய உணர்திறன் கொண்ட பாராளுமன்றம்” என்ற இலக்குக்கு அமைய, நாடு முழுவதும் இயலாமையுள்ள நபர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை மையமாகக் கொண்டு இவ்வாறு நடத்தப்பட்டது.

இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் உட்பட உள்ளூர் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இயலாமையுள்ள நபர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றதுடன், அந்த மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்கள், சேவைகளைப் பெறுவதற்காக தம்மிடம் வரும் இயலாமையுள்ள நபர்களை மனிதாபிமானத்துடன் கருதி, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குமாறு அனைத்து அரச அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்களின் தேவைகளைக் கண்டறிய, அவர்களின் நிலையில் இருந்து பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு உண்மையில் என்ன தேவைகள் உள்ளன என்பதைச் சரியாக அடையாளம் காண முடியும் என்றும், சேவைகளைப் பெற வரும் இயலாமையுள்ள நபர்களின் புன்னகையில் உங்கள் தொழிலில் திருப்தியைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள இயலாமையுள்ள நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும், இந்த சட்டமூலத்தில், இயலாமையுள்ள நபர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் (UNCRPD) உள்ள 25 இற்கும் மேற்பட்ட உரிமைகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கு இணையாக, இயலாமையுள்ள நபர்கள் குறித்த தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்திட்டம் என்பனவும் வரைபு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், இயலாமையுள்ள நபர்களின் தேவைகள் அதிகமாக உள்ள வட மாகாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும், பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இயலாமையுள்ள சமூகத்திற்கு அவசியமான சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்காகப் பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இயலாமையுள்ள நபர்கள் குறித்த சர்வதேச தினத்திற்கு இணையாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துவதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்பு மேலும் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். இயலாமையுள்ள நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்தக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிராந்திய மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய சேவைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூக சேவை அதிகாரிகளின் பற்றாக்குறை, இயலாமையுள்ள நபர்களுக்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையின் தேவை, வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல், இயலாமையுள்ள நபர்கள் சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகளைப் பெறுவதில் உள்ள சவால்கள், சுயதொழில் செய்யக்கூடிய இயலாமையுள்ள நபர்களுக்கு காணி தேவைகளைப் பூர்த்தி செய்தல், சைகை மொழிபெயர்ப்பு தேவைகள், இயலாமையுள்ள நபர்களுக்கு வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், இயலாமையுள்ள மாணவர்களுக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தேவை மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய பாடசாலைகள் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் கொள்கை ரீதியான மற்றும் நடைமுறை சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. 

இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஒன்றியத்தின் பரிந்துரைகளும் தீர்வுகளும் வழங்கப்பட்டன. இந்தக் கருத்துக்களைப் பெற்றதன் பின்னனர், தேவையான கொள்கை மாற்றங்களுக்காக இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் என்று ஒன்றியத்தின் கௌரவ தலைவர் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் சேவைகள் வழங்குவதில் அவை சரியாகச் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வது போன்ற விடயங்களில் மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.


2026-02-13

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால்  அங்கீகரிக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks