பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-30
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு அழைக்கப்பட்டன.
அந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் 2025.10.24 ஆம் திகதி கூடிய போதே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தன.
இந்நாட்டில் மின்சாரத் துறையை விஸ்தரிப்பதற்குத் தேவையான மின்மாற்றிகளை (Transformers) உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், 1980 ஆம் ஆண்டில் லங்கா ட்ரான்ஸ்போமர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மின்சார சபையின் 70% பங்கு மற்றும் ஸ்கொட்லாந்து நிறுவனமொன்றின் 30% பங்கு மூலதனத்துடன் ஒரு அரச-தனியார் கூட்டு நிறுவனமாக இது நிறுவப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டில் 30% பங்குகள் ஸ்கொட்லாந்து நிறுவனத்தால் நோர்வே நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. பல சந்தர்ப்பங்களில், LTL கல்வனைசிங், LTL ஸ்டீல் பெப்ரிகேஷன் போன்ற பெயர்களில் மேலும் பல நிர்வாக நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கீழுள்ள நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் மின்சாரம் வழங்கும் லக்தனவி நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டில், பிரதான நிறுவனத்தின் பெயர் LTL ஹோல்டிங்ஸ் நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், ஏனைய நிர்வாக நிறுவனங்கள் தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மின்சார சபையில் பொறியியலாளராகப் பணியாற்றிய LTL ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, அவர் மின்சார சபையிலிருந்து விலகிய வருடத்தையும், LTL நிறுவனத்துடன் இணைந்த வருடத்தையும் உறுதியாகக் கூறத் தவறியதனால் அது தொடர்பில் குழுவின் கடுமையான அதிருப்தி இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தக் குறிப்பிட்ட தகவல்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு குழு அறிவித்தது. LTL நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இருவரும் மின்சார சபையின் முன்னாள் அதிகாரிகளாக இருந்ததன் மூலம் அக்கறை முரண்பாடு (Conflict of interest) ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும், மின்சாரம் கொள்வனவு செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், மின்சார சபை உள்ளிட்ட ஊழியர்களுக்காக 10% பங்குகள் கொண்ட ஒரு நம்பிக்கை நிதியத்துக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், அதற்கமைய, மின்சார சபையின் பங்குகள் 63% ஆகக் குறைந்துள்ளது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், இந்த நம்பிக்கை நிதியம் 2017 ஆம் ஆண்டில் டெக்ப்ரோ இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சில பங்குதாரர்களுக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபாய் அளவு பங்குலாபம் வழங்கப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கான பங்குலாபம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என்ற அறிக்கைகள் குறித்தும் குழு வினவியது. அது அவ்வாறு இல்லை என்றும், சட்ட நிலைமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர். எவ்வாறாயினும், அது தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய அறிக்கையை கோப் குழுவுக்கு வழங்குமாறு LTL நிறுவனத்திற்கு குழு அறிவித்தது.
அத்துடன், 2005 ஆம் ஆண்டில் நோர்வே நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும், இலங்கை மின்சார சபை அவற்றை கொள்வனவு செய்ய மறுத்து இருப்பதாகவும், அதற்கமைய, அந்தப் பங்குகளை கொள்வனவு செய்ய LTL ESOT என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு LTL நிறுவனத்திடமிருந்து கடனும் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் மீண்டும் பெரதிவ் என்ற பெயரில் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2006 ஆம் ஆண்டில், யுகதனவி மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கு LTL மூலம் வெஸ்ட் கோஸ்ட் என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் கொள்வனவு செய்ததற்காக மின்சார சபை அந்த நிறுவனத்திற்கு 79.4 பில்லியன் ரூபாய் கடன்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் 26 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை ஈடுசெய்வதற்காக, LTL நிறுவனத்தில் அப்போதைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 63% பங்குகளிலிருந்து 28% பங்குகளை வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி LTL நிறுவனத்தில் இலங்கை மின்சார சபையின் பங்கின் அளவு 35% ஆகக் குறைந்தது என்றும் இங்கு தெரியவந்தது.
அதற்கமைய, LTL நிறுவனத்தின் பங்குப் பிரிவுகள்; 35% மின்சார சபை, 28% வெஸ்ட் கோஸ்ட், 27% பெரதிவ் மற்றும் 10% டெக்ப்ரோ என உள்ளதாக இங்கு தெரியவந்தது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 70% உரிமை 35% ஆகக் குறைந்தமை மிகவும் சிக்கலான செயன்முறையின் மூலம் நடந்துள்ளது என்று இங்கு குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், கணக்காய்வுக்கு இடமளிக்காதது குறித்தும் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதற்குச் செயற்பட்டுள்ளது என்றும் குழு இங்கு சுட்டிக்காட்டியது. பொது நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கணக்காய்விலிருந்து விலக முடியாது என்றும், அதற்கமைய அரசாங்கக் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் குழு அறிவித்தது.
குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, டி.வி. சானக, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (வைத்தியர்) எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபையின் தலைவர் (பேராசிரியர்) உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks