01

E   |   සි   |  

2025-10-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை மின்சார சபை பற்றிய விசாரணை தொடர்பாக LTL நிறுவனம் கோப் குழுவிற்கு அழைப்பு

  • LTL நிறுவனத்தின் மின்சார சபைக்குச் சொந்தமான பங்குகள் 70% இலிருந்து 35% ஆக குறைந்துள்ளன
  • அரசாங்கத்தின் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் அறிவிப்பு
  • 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், அந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவிர்ப்பதற்கு நிறுவனம் செயற்பட்டுள்ளது என குழு சுட்டிக்காட்டுகிறது
  • குறிப்பிட்ட பதில்களை வழங்கத் தவறியமை குறித்தும் குழு அதிருப்தி 

 

இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு அழைக்கப்பட்டன.

அந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் 2025.10.24 ஆம் திகதி கூடிய போதே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தன. 

இந்நாட்டில் மின்சாரத் துறையை விஸ்தரிப்பதற்குத் தேவையான மின்மாற்றிகளை (Transformers) உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், 1980 ஆம் ஆண்டில் லங்கா ட்ரான்ஸ்போமர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மின்சார சபையின் 70% பங்கு மற்றும் ஸ்கொட்லாந்து நிறுவனமொன்றின் 30% பங்கு மூலதனத்துடன் ஒரு அரச-தனியார் கூட்டு நிறுவனமாக இது நிறுவப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டில் 30% பங்குகள் ஸ்கொட்லாந்து நிறுவனத்தால் நோர்வே நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. பல சந்தர்ப்பங்களில், LTL கல்வனைசிங், LTL ஸ்டீல் பெப்ரிகேஷன் போன்ற பெயர்களில் மேலும் பல நிர்வாக நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கீழுள்ள நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் மின்சாரம் வழங்கும் லக்தனவி நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டில், பிரதான நிறுவனத்தின் பெயர் LTL ஹோல்டிங்ஸ் நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், ஏனைய நிர்வாக நிறுவனங்கள் தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

மின்சார சபையில் பொறியியலாளராகப் பணியாற்றிய LTL ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, அவர் மின்சார சபையிலிருந்து விலகிய வருடத்தையும், LTL நிறுவனத்துடன் இணைந்த வருடத்தையும் உறுதியாகக் கூறத் தவறியதனால் அது தொடர்பில் குழுவின் கடுமையான அதிருப்தி இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தக் குறிப்பிட்ட தகவல்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு குழு அறிவித்தது. LTL நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இருவரும் மின்சார சபையின் முன்னாள் அதிகாரிகளாக இருந்ததன் மூலம் அக்கறை முரண்பாடு (Conflict of interest) ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும், மின்சாரம் கொள்வனவு செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 

2001 ஆம் ஆண்டில், மின்சார சபை உள்ளிட்ட ஊழியர்களுக்காக 10% பங்குகள் கொண்ட ஒரு நம்பிக்கை நிதியத்துக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், அதற்கமைய, மின்சார சபையின் பங்குகள் 63% ஆகக் குறைந்துள்ளது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், இந்த நம்பிக்கை நிதியம் 2017 ஆம் ஆண்டில் டெக்ப்ரோ இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சில பங்குதாரர்களுக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபாய் அளவு பங்குலாபம் வழங்கப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கான பங்குலாபம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என்ற அறிக்கைகள் குறித்தும் குழு வினவியது. அது அவ்வாறு இல்லை என்றும், சட்ட நிலைமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர். எவ்வாறாயினும், அது தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய அறிக்கையை கோப் குழுவுக்கு வழங்குமாறு LTL நிறுவனத்திற்கு குழு அறிவித்தது.

அத்துடன், 2005 ஆம் ஆண்டில் நோர்வே நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும், இலங்கை மின்சார சபை அவற்றை கொள்வனவு செய்ய மறுத்து இருப்பதாகவும், அதற்கமைய, அந்தப் பங்குகளை கொள்வனவு செய்ய LTL ESOT என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு LTL நிறுவனத்திடமிருந்து கடனும் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் மீண்டும் பெரதிவ் என்ற பெயரில் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2006 ஆம் ஆண்டில், யுகதனவி மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கு LTL மூலம் வெஸ்ட் கோஸ்ட் என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் கொள்வனவு செய்ததற்காக மின்சார சபை அந்த நிறுவனத்திற்கு 79.4 பில்லியன் ரூபாய் கடன்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் 26 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை ஈடுசெய்வதற்காக, LTL நிறுவனத்தில் அப்போதைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 63% பங்குகளிலிருந்து 28% பங்குகளை வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி LTL நிறுவனத்தில் இலங்கை மின்சார சபையின் பங்கின் அளவு 35% ஆகக் குறைந்தது என்றும் இங்கு தெரியவந்தது.

அதற்கமைய, LTL நிறுவனத்தின் பங்குப் பிரிவுகள்; 35% மின்சார சபை, 28% வெஸ்ட் கோஸ்ட், 27% பெரதிவ் மற்றும் 10% டெக்ப்ரோ என உள்ளதாக இங்கு தெரியவந்தது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 70% உரிமை 35% ஆகக் குறைந்தமை மிகவும் சிக்கலான செயன்முறையின் மூலம் நடந்துள்ளது என்று இங்கு குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், கணக்காய்வுக்கு இடமளிக்காதது குறித்தும் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதற்குச் செயற்பட்டுள்ளது என்றும் குழு இங்கு சுட்டிக்காட்டியது. பொது நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கணக்காய்விலிருந்து விலக முடியாது என்றும், அதற்கமைய அரசாங்கக் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் குழு அறிவித்தது.

குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, டி.வி. சானக, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (வைத்தியர்) எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபையின் தலைவர் (பேராசிரியர்) உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-02

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 1000 மில்லியன்

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-29

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன

அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.


2026-05-29

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.வெவ்வேறு ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக 400, 500 சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலபேர் வேறு வருமானங்களைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பல்வேறு சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு சம்பளத்தைச் செலுத்த வேண்டியிருப்பதாகவும், இவ்வாறு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிலர் தனியார் பஸ்களில் சாரதிகளாகப் பணியாற்றி வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.இவ்விடயம் தொடர்பில் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறுமாறும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் கௌரவ அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.அத்துடன், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாக இத்துறையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை மற்றும் புகையிரத திணைக்களத்தை வினைத்திறனான மற்றும் திருப்திகரமான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுதல் தொடர்பான உபகுழுவின் இடைக்கால அறிக்கை என்பனவும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன.நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருடைய கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இது குறித்து விசாரித்த குழுத் தலைவர், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, (வைத்தியர்) பிரசன்ன குணசேன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-05-29

காலநிலை மாற்றத்தின் மத்தியில் யானைகள் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது

மோசமான காலநிலை மாற்றத்தினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பது தொடர்பில் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.குறித்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இதுபற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.குறிப்பாக எல்-நினோ மற்றும் லா–நினோ காலநிலையினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது பற்றி விளக்கமளித்தனர். காலநிலை மாற்றத்தினால் வனஜீவராசிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் முதற் கட்டமாக யானை மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்துக் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்விடயத்தை விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பரிந்துரைகளை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.காலநிலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். யானை மனிதன் மோதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, ரியாஸ் பாரூக், சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks