04

E   |   සි   |  

2025-10-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை மின்சார சபை பற்றிய விசாரணை தொடர்பாக LTL நிறுவனம் கோப் குழுவிற்கு அழைப்பு

  • LTL நிறுவனத்தின் மின்சார சபைக்குச் சொந்தமான பங்குகள் 70% இலிருந்து 35% ஆக குறைந்துள்ளன
  • அரசாங்கத்தின் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் அறிவிப்பு
  • 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், அந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவிர்ப்பதற்கு நிறுவனம் செயற்பட்டுள்ளது என குழு சுட்டிக்காட்டுகிறது
  • குறிப்பிட்ட பதில்களை வழங்கத் தவறியமை குறித்தும் குழு அதிருப்தி 

 

இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு அழைக்கப்பட்டன.

அந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் 2025.10.24 ஆம் திகதி கூடிய போதே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தன. 

இந்நாட்டில் மின்சாரத் துறையை விஸ்தரிப்பதற்குத் தேவையான மின்மாற்றிகளை (Transformers) உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், 1980 ஆம் ஆண்டில் லங்கா ட்ரான்ஸ்போமர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மின்சார சபையின் 70% பங்கு மற்றும் ஸ்கொட்லாந்து நிறுவனமொன்றின் 30% பங்கு மூலதனத்துடன் ஒரு அரச-தனியார் கூட்டு நிறுவனமாக இது நிறுவப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டில் 30% பங்குகள் ஸ்கொட்லாந்து நிறுவனத்தால் நோர்வே நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. பல சந்தர்ப்பங்களில், LTL கல்வனைசிங், LTL ஸ்டீல் பெப்ரிகேஷன் போன்ற பெயர்களில் மேலும் பல நிர்வாக நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கீழுள்ள நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் மின்சாரம் வழங்கும் லக்தனவி நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டில், பிரதான நிறுவனத்தின் பெயர் LTL ஹோல்டிங்ஸ் நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், ஏனைய நிர்வாக நிறுவனங்கள் தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

மின்சார சபையில் பொறியியலாளராகப் பணியாற்றிய LTL ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, அவர் மின்சார சபையிலிருந்து விலகிய வருடத்தையும், LTL நிறுவனத்துடன் இணைந்த வருடத்தையும் உறுதியாகக் கூறத் தவறியதனால் அது தொடர்பில் குழுவின் கடுமையான அதிருப்தி இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தக் குறிப்பிட்ட தகவல்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு குழு அறிவித்தது. LTL நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இருவரும் மின்சார சபையின் முன்னாள் அதிகாரிகளாக இருந்ததன் மூலம் அக்கறை முரண்பாடு (Conflict of interest) ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும், மின்சாரம் கொள்வனவு செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 

2001 ஆம் ஆண்டில், மின்சார சபை உள்ளிட்ட ஊழியர்களுக்காக 10% பங்குகள் கொண்ட ஒரு நம்பிக்கை நிதியத்துக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், அதற்கமைய, மின்சார சபையின் பங்குகள் 63% ஆகக் குறைந்துள்ளது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், இந்த நம்பிக்கை நிதியம் 2017 ஆம் ஆண்டில் டெக்ப்ரோ இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சில பங்குதாரர்களுக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபாய் அளவு பங்குலாபம் வழங்கப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கான பங்குலாபம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என்ற அறிக்கைகள் குறித்தும் குழு வினவியது. அது அவ்வாறு இல்லை என்றும், சட்ட நிலைமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர். எவ்வாறாயினும், அது தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய அறிக்கையை கோப் குழுவுக்கு வழங்குமாறு LTL நிறுவனத்திற்கு குழு அறிவித்தது.

அத்துடன், 2005 ஆம் ஆண்டில் நோர்வே நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும், இலங்கை மின்சார சபை அவற்றை கொள்வனவு செய்ய மறுத்து இருப்பதாகவும், அதற்கமைய, அந்தப் பங்குகளை கொள்வனவு செய்ய LTL ESOT என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு LTL நிறுவனத்திடமிருந்து கடனும் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் மீண்டும் பெரதிவ் என்ற பெயரில் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2006 ஆம் ஆண்டில், யுகதனவி மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கு LTL மூலம் வெஸ்ட் கோஸ்ட் என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் கொள்வனவு செய்ததற்காக மின்சார சபை அந்த நிறுவனத்திற்கு 79.4 பில்லியன் ரூபாய் கடன்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் 26 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை ஈடுசெய்வதற்காக, LTL நிறுவனத்தில் அப்போதைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 63% பங்குகளிலிருந்து 28% பங்குகளை வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி LTL நிறுவனத்தில் இலங்கை மின்சார சபையின் பங்கின் அளவு 35% ஆகக் குறைந்தது என்றும் இங்கு தெரியவந்தது.

அதற்கமைய, LTL நிறுவனத்தின் பங்குப் பிரிவுகள்; 35% மின்சார சபை, 28% வெஸ்ட் கோஸ்ட், 27% பெரதிவ் மற்றும் 10% டெக்ப்ரோ என உள்ளதாக இங்கு தெரியவந்தது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 70% உரிமை 35% ஆகக் குறைந்தமை மிகவும் சிக்கலான செயன்முறையின் மூலம் நடந்துள்ளது என்று இங்கு குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், கணக்காய்வுக்கு இடமளிக்காதது குறித்தும் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அரசாங்கக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதற்குச் செயற்பட்டுள்ளது என்றும் குழு இங்கு சுட்டிக்காட்டியது. பொது நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கணக்காய்விலிருந்து விலக முடியாது என்றும், அதற்கமைய அரசாங்கக் கணக்காய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் குழு அறிவித்தது.

குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, டி.வி. சானக, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (வைத்தியர்) எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபையின் தலைவர் (பேராசிரியர்) உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.


2026-02-13

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால்  அங்கீகரிக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks